உலகம் முழுவதும் புதிதாகப் பரவி வரும் ஒமிக்ரான் வைரஸ் எதிரொலியாக மும்பை பங்குச்சந்தை இன்று அதிகப்படியான வர்த்தகப் பாதிப்பை எதிர்கொண்டு உள்ளது.
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு இன்று 3 சதவீதத்திற்கும் அதிகமாகச் சரிந்த நிலையில் வர்த்தக முடிவில் 2 சதவீத சரிவை பதிவு செய்துள்ளது. இன்றைய சரிவுக்கு என்ன காரணம்..?!
கொரோனா தொற்று
கொரோனா தொற்றில் இருந்து தொடர்ந்து மீண்டு வரும் இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்றின் பரவல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இதை உணர்ந்த அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்த முதலீட்டைத் தொடர்ந்து வெளியேற்றி வருகின்றனர்.
அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள்
டிசம்பர் மாதம் அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் (FII) சுமார் 13,470 கோடி ரூபாய் பங்குகளை விற்பனை செய்து முதலீட்டை வெளியேற்றியுள்ளது. இதேபோல் அன்னிய போர்ட்போலியோ முதலீட்டாளர்கள் சுமார் 25,252 கோடி ரூபாய் முதலீட்டை வெளியேற்றியுள்ளனர்.
ரிசர்வ் வங்கி
இந்தியப் பொருளாதாரம் மற்றும் வர்த்தக வளர்ச்சி நிலை நிறுத்த கட்டாயம் ரிசர்வ் வங்கி வட்டி உயர்த்த வேண்டிய கட்டாயம் உள்ளது. இது மட்டும் அல்லாமல் ரிசர்வ் வங்கி LAF கீழ் சுமார் 2 லட்சம் கோடி ரூபாய்க்கான 3 நாள் VRRR ஏலத்தை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்தியச் சந்தை
இந்தியச் சந்தையின் சரிவுக்கு மிக முக்கியக் காரணமாக அதிகரித்து வரும் பணவீக்கம், ரிசர்வ் வங்கியின் மந்தமான முடிவுகள், அதிகரித்து வரும் ஒமிக்ரான் தொற்று எண்ணிக்கை, அன்னிய நிறுவன முதலீட்டாளர்களின் தொடர் விற்பனை, மந்தமான பொருளாதார வளர்ச்சி ஆகியவை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேங்க் ஆப் இங்கிலாந்து
கொரோனாவுக்குப் பின்பு வல்லரசு நாடுகளில் அதிகரித்து வரும் பணவீக்க பிரச்சனையைச் சமாளிக்கப் பேங்க் ஆப் இங்கிலாந்து ஏற்கனவே வட்டியை உயர்த்தியுள்ள நிலையில், தற்போது அமெரிக்காவும் 2022ல் 3 முறை வட்டியை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது.
அமெரிக்கா
இதுமட்டும் அல்லாமல் அமெரிக்காவில் அனைத்து மக்களையும் ஒமிக்ரான் வைரஸ்-ல் இருந்து பாதுகாத்துக்கொள்ள கோவிட் பூஸ்டர் ஷாட்ஸ் எடுத்துக்கொள்ள அமெரிக்கச் சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. இது அமெரிக்காவில் மட்டும் அல்லாமல் உலக நாடுகளுக்கும் பீதியை அளித்துள்ளது.
ஐரோப்பா
மேலும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை அடுத்த சில நாட்களில் வரும் நிலையில் ஒமிக்ரான் அச்சத்தால் ஐரோப்பா புதிய லாக்டவுன் கட்டுப்பாடுகளை விதிக்கத் திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் எதிரொலியாக ஐரோப்பிய சந்தை சுமார் 2 சதவீதம் வரையில் சரிவுடன் துவங்கியுள்ளது.
மும்பை பங்குச்சந்தை
இப்படிப் பல காரணத்தால் மும்பை பங்குச்சந்தையின் வர்த்தகம் இன்று காலை வர்த்தகத்தில் இருந்து தொடர்ந்து சரிந்து வந்த சென்செக்ஸ் 1850 புள்ளிகளை இழந்து 55,132.68 புள்ளிகளை எட்டியது, நிஃப்டி குறியீடு 16,410 புள்ளிகள் வரையில் சரிந்தது.