ரொம்பச் சிம்பிளான கேள்வி.. ஏன் டாஸ்மாக் கடைகளை மூடக் கூடாது.. கேட்பது சுலபம்.. பதில் சொல்வதுதான் கடினம் என்பார்கள். அது இந்த டாஸ்மாக் கடைகளுக்கும் பொருந்தும்.
தமிழ்நாட்டில் லாக்டவுன்-க்கு பின்பு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட காரணத்தால் மதுபான விற்பனை தாறுமாறாக உயர்ந்துள்ளது. முதல் நாளிலேயே சுமார் 164.87 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.
ஒரு பக்கம் கொரோனா எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் மறுபுறம் மதுபானம் விற்பனை அதிகரித்துள்ளது, மீண்டும் கொரோனா எண்ணிக்கை அதிகரிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ள இதேவேளையில் டாஸ்மாக் கடைகளைத் தமிழ்நாடு அரசு ஏன் மூடக் கூடாது..? என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
தமிழக அரசின் டாஸ்மாக்
மதுபான கடைகளைத் தமிழக அரசு ஏற்று நடத்துவதற்கு நீண்ட காலமாக அரசியல் கட்சிகளும், மக்களும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வரும் வேளையில், டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையைக் குறைக்கப் பல முறை முடிவுகள் எடுக்கப்பட்டாலும் அதைச் சாத்தியப்படுத்த முடியவில்லை.
வரி வருமானம்
இதற்கு முக்கியக் காரணம் டாஸ்மாக் கடைகளின் மூலம் விற்பனை செய்யப்படும் மதுபானம் மூலம் கிடைக்கும் வரி வருமானம் தான். மாநில அரசுக்கு வரி வருமானம் கொட்டிக்கொடுக்கும் மிக முக்கியமான ஒரு வர்த்தகப் பிரிவு இந்த டாஸ்மாக்.
தமிழக அரசின் வரி வருவாய் தரவுகள்
சில வாரங்களுக்கு முன்பு தமிழக அரசின் வரி வருவாய் தரவுகள் வெளியானது, இதில் 2020-21 நிதியாண்டில் வரி வருவாய் மற்றும் மத்திய அரசின் வரிகள் சேர்த்து மொத்தம் 1,74,255.66 கோடி ரூபாய் அளவிலான வருவாய் பெற்றுள்ளது. இது 2019-20ஆம் நிதியாண்டை அளவீட்டை ஒப்பிடுகையில் 2.80 சதவீதம் குறைவு.
SOTR பிரிவு வருவாய்
தமிழக அரசின் மொத்த வருவாயில் சுமார் 70 சதவீத வரி வருமானம் State's own tax revenue பிரிவு மூலம் கிடைக்கிறது. இந்தப் பிரிவின் கீழ் தான் மதுபானம் விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம் வருகிறது.
மதுபானம் விற்பனை வரிகள்
SOTR பிரிவில் மட்டும் தமிழக அரசு 2020-21 நிதியாண்டில் 1,01,140.09 கோடி ரூபாய் அளவிலான வரி வருமானம் பெற்றுள்ளது. இதில் பெட்ரோலியம் பொருட்கள், மதுபானம் விற்பனை வரிகள் அடங்கும் 'விற்பனை மற்றும் வர்த்தக வரிப் பிரிவில் மட்டும் 43,490.05 கோடி ரூபாயும் அளவிலான வரி வருமானம் பெற்றுள்ளது.
43,490.05 கோடி ரூபாய் வரி
இந்த 43,490.05 கோடி ரூபாயில் வரி வருமானத்தில் பெரும் பகுதி மதுபானம் விற்பனை மூலம் கிடைக்கும் காரணத்தால் அரசால் இந்த வரி வருமானத்தை இழக்க முடியாமல் உள்ளது. இதற்கு ஈடான வரி வருவாய் அளிக்கும் பிற துறைகள் உயர்ந்தால் கட்டாயம் டாஸ்மாக் கடைகளை மூட முடியும்.
பார் மற்றும் உணவுகள் விற்பனை
டாஸ்மாக் கீழ் மதுபானம் விற்பனை மட்டும் அல்லாமல் பார் மற்றும் உணவுகளும் விற்பனை செய்யப்படுவதன் மூலம் அரசுக்கு பெரிய அளவிலான வருமானம் கிடைத்து வருகிறது.
தமிழக அரசின் நலத் திட்டங்கள்
இந்த வருமானத்தை வைத்துத் தான் பல நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் டாஸ்மாக் மீது அதிரடி நடவடிக்கை எடுக்க முடியாத இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது.
தமிழக அரசின் கடன் சுமை
தமிழக அரசு ஏற்கனவே அதிகளவிலான கடனிலும், நிதிப் பற்றாக்குறையிலும் இருப்பது அனைவருக்கும் தெரியும். இந்த வேளையில் மாநிலத்தின் நிதி நிலையைச் சமாளிக்கச் சில கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது கட்டாயமாகியுள்ளது. இதன் வாயிலாகவே தற்போது தமிழக அரசு டாஸ்மாக் கடைகளைப் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டு உள்ளது.
மதுபான கடைகளைத் தனியாருக்குச்
சரி மதுபான கடைகளைத் தனியாருக்கு அளித்துவிடலாம் என்றால், உதாரணமாகப் பெங்களூர் நகரத்தை எடுத்துக்கொள்வோம். ஒவ்வொரு ஏரியாவுக்கும் குறைந்தது 10 முதல் 20 மதுபான கடைகள் இயங்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் டாஸ்மாக் அப்படி இல்லை.
சாமானிய மக்கள் பாதிப்பு
இந்தக் கடைகளில் சாமானியர்கள் தங்கள் உடல் வலிக்காகவும், தூக்கத்திற்காகவும் அருந்தும் மதுபானத்தை இரட்டிப்பு விலையில் விற்பனை செய்யப்படுவது அனைவருக்கும் தெரியும். ஆயினும் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படுவது இல்லை. டாஸ்மாக் மூலம் சாமானிய மக்களிடம் இருந்து சுரண்டப்படும் பணத்தைத் தடுக்க முடிகிறது.
மதுபானத்தை மொத்தமாகத் தடை
சரி மொத்தமாக மதுபானத்தைத் தடை செய்து விடலாம் என்றால் மதுபான கடத்தல் அதிகரிக்கும், கள்ளச் சாராயம் அதிகரிக்கும், அதன் மூலம் ஏற்படும் குற்றங்கள் அதிகரிக்கும். மது பானம் விற்கும் பக்கத்து மாநிலங்களுக்கு மக்கள் படையெடுப்பார்கள். எனவே மொத்தமாகக் கட்டுக்குள் கொண்டு வந்து மிதமான வேகத்தில் தான் டாஸ்மாக் கடைகளைக் குறைக்க முடியும்.
அரசியல் கட்சிகள்
இதேபோல் அரசின் மதுபான விற்பனையை விமர்சனம் செய்யும் அரசியல் கட்சிகள் மதுபானம் அருந்துபவருக்குக் கட்சியில் இடம் இல்லை என யாரும் கூறுவது இல்லை. சில கட்சிகளைத் தவிரப் பிற அரசியல் கட்சிகள் தனது கட்சிக்காரர்களிடம் மதுபானம் அருந்தக் கூடாது என உறுதி மொழி எடுக்கவைப்பதும் இல்லை. இப்படி இருக்கையில் எப்படி மதுபானத்தைத் தமிழ்நாட்டில் ஒழிக்க முடியும்.
டாஸ்மாக் மீதான நிலைப்பாடு
இதுமட்டும் அல்லாமல் தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும் டாஸ்மாக் மீது ஆட்சிக்கு வரும் முன் ஒரு நிலைப்பாட்டையும், ஆட்சிக்கு வந்த ஒரு நிலைப்பாட்டையும் ஏற்கிறது. இதற்கு முக்கியக் காரணம் மதுபானம் மூலம் கிடைக்கும் வரி வருமானம் அதிகம் என்பதாலும் அதை ஈடு செய்ய வேறு வழிகள் இல்லாத காரணத்தாலும் தான். இது ஒரு காலத்தின் கட்டாயமாகவே பார்க்கப்படுகிறது.
மதுவிலக்கு - தமிழ்நாடு, இந்தியா
இதேபோல் மதுவிலக்கு என்பது இந்தியா முழுவதும் இல்லை என்பதால் அனைத்து மாநிலங்களிலும் மதுபானம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மத்திய அரசு கடுமையான கட்டுப்பாடுகள் உடன் மதுவிலக்கை அமல்படுத்தினால் கட்டாயம் தமிழக அரசும் செய்யும். இதற்கு ஆளும் அரசும் சரி, முன்னாள் அரசும் சரி எவ்விதமான மறுப்பும் இதுவரை கூறியது இல்லை.
கருணாநிதி முதல் ஜெயலலிதா வரை
டாஸ்மாக்கைப் பொறுத்தவரை ஒரு காலத்தில் வருவாய் அதிகம் ஈட்டாத துறையாகவே இருந்து வந்தது. கருணாநிதி காலத்தில் அது ஒரு வகையான மறுமலர்ச்சியைக் கண்டது என்றால், ஜெயலலிதா ஆட்சியில்தான் இது வருவாயை அள்ளி எடுக்கும் துறையாகப் புதிய பரிமாணம் கண்டது.
ஜெயலலிதா அரசு
தற்போது ஜெயலலிதா அரசு போட்ட பாதையில்தான் அனைத்து அரசுகளும் நடக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. காரணம் இது கொட்டும் பணம்தான்.. எனவே அத்தனை சீக்கிரம் டாஸ்மாக் கடைகளை மூடுவது என்பது பிராக்டிகலாகச் சாத்தியப்படாத ஒன்றாகவே தோன்றுகிறது. அப்படி நடக்க வேண்டுமானால் அதற்குக் கட்டாயம் Political will இருக்க வேண்டும். பொறுத்திருந்து பார்ப்போம்.