சர்வதேச பொருளாதாரத்தைத் தலைகீழாகத் திருப்பிப் போட்ட கொரோனா தொற்றுப் பாதிப்புகளில் மீண்டு வரும் வேளையில், உக்ரைன் ரஷ்ய போர் முதல் அதிர்ச்சியைக் கொடுத்த, அடுத்தாகச் சீனாவின் கடுமையான லாக்டவுன் விதித்தது சப்ளை செயின்-ஐ கடுமையாகப் பாதித்தது 2வது அதிர்ச்சியைக் கொடுத்தது, இதைத் தொடர்ந்து உணவு பொருட்கள் பற்றாக்குறை விஸ்வரூபம் எடுத்து வல்லரசு நாடுகளையும் அச்சுறுத்தி 3வது அதிர்ச்சியைக் கொடுத்து..
அடுத்தடுத்து பிரச்சனைகளால் உலக நாடுகள் தற்போது பணவீக்க உயர்வால் தவித்து வருகிறது. இதைக் குறைக்கவே மத்திய அரசு இன்று பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்து உள்ளது.
அமெரிக்கா முதல் பங்களாதேஷ் வரை
அமெரிக்கா முதல் பங்களாதேஷ் வரையில் அனைத்து நாடுகளிலும் பணவீக்கம் அதிகரித்து வரும் காரணத்தாலும், சப்ளை செயின் பாதிப்பால் விலைவாசி உயர்ந்து பொருளாதாரம் மந்த நிலைக்குத் தள்ளப்படும் காரணத்தாலும் பணவீக்கம் அதிகரித்து வருகிறது.
பணவீக்கம்
இந்தப் பணவீக்க உயர்வைச் சரி செய்யவே உலக நாடுகளின் மத்திய வங்கிகள் அடுத்தடுத்து வட்டியை உயர்த்தி வருகிறது. ஆனால் ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாகக் கச்சா எண்ணெய், எரிவாயு, உணவுப் பொருட்கள் விநியோகம் பாதிக்கப்பட்டுத் தொடர்ந்து விலை அதிகரித்து வருகிறது.
ரிசர்வ் வங்கி
இந்நிலையில் இந்தியாவில் பணவீக்கத்தைக் குறைக்கும் முயற்சியை ரிசர்வ் வங்கி 0.40 சதவீத ரெப்போ விகித உயர்வால் சரி செய்யத் தனது முயற்சிகளைத் துவங்கியுள்ள வேளையில், மத்திய அரசு விலைவாசியைக் குறைத்து வர்த்தகம் மற்றும் பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்கும் விதமாக எரிபொருள் மீதான கலால் வரிக் குறைப்பு, சிலிண்டருக்கு 200 ரூபாய் மானியம், பல்வேறு இறக்குமதி பொருட்களுக்குச் சுங்க வரிக் குறைப்பை இன்று அறிவித்துள்ளது.
சீனா
இதேவேளையில் சீனாவில் உற்பத்தித் துறை வட்டி குறைப்பால் வேகமெடுக்கும் காரணத்தால் உபரியாக இருந்த கச்சா எண்ணெய் தற்போது தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. சீனாவில் லாக்டவுன் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதிலிருந்து WTI மற்றும் பிரெண்ட் கச்சா எண்ணெய் 110 டாலரை தாண்டி இன்று 112 டாலராக உயர்ந்துள்ளது.
அமெரிக்கா
இதன் மூலம் ஏப்ரல் மாதம் அமெரிக்காவில் ஒரு கேலன் பெட்ரோல் 4 டாலராக இருந்த நிலையில் தற்போது 5 டாலரை நெருக்கியும், கோடைக் காலம் முடிவதற்குள் 6 டாலர் வரையில் உயரும் எனக் கணிப்புகள் வெளியாகியுள்ளது.
பெட்ரோல் டீசல் விலை
இந்த இக்கட்டான சூழ்நிலையில் மத்திய அரசு நாட்டின் பொருளாதாரம் மந்த நிலையை அடையும் முன்பே பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்துள்ளது. ஆனால் தினசரி பெட்ரோல் டீசல் விலை உயராது என உத்தரவாதம் அளிக்கப்படாத நிலையில் Threshold அளவை தாண்டிய பின்பு கட்டாயம் பெட்ரோல் டீசல் விலை உயரும்.
இலங்கை
பெட்ரோல், டீசல் விலை குறைப்பிற்குப் பணவீக்கம் முக்கியக் காரணமாக உள்ளது, இதேவேளையில் இலங்கையின் மாபெரும் பொருளாதார வீழ்ச்சி அரசுக்கு எச்சரிக்கை மணியாக இருந்த காரணத்தால் முன்னெச்சரிக்கையாக ரெப்போ விகிதத்தை உயர்த்தியும், எரிபொருள் விலையைக் குறைத்தும் உள்ளது.