முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய் நடிப்பில் உருவாகி ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் தான் ஜனநாயகன். தேர்தலுக்கு முன்னரே இந்த படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. விஜயே தனது கடைசி படம் என அறிவித்ததால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பு கொண்டிருந்தனர். ஆனால் சில பிரச்சினைகள் காரணமாக படம் வெளியாகவில்லை. இதனால் விஜய் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.
தமிழ்நாட்டிலும் இதற்கிடையே தேர்தல் நடந்து விஜய் முதலமைச்சராகிவிட்டார். இந்த சூழலில் ஜனநாயகன் திரைப்படத்திற்கான அனைத்து பிரச்சினைகளும் முடிந்து படம் திரைக்கு வருகிறது. ஆனால் இப்போது தான் விஜய் அரசுக்கு புது சிக்கலே ஏற்பட்டுள்ளது. வழக்கமாக விஜய் படம் என்றால் முதல் நாள் முதல் ஷோவுக்கான டிக்கெட் 2000 ரூபாய்க்கு மேல் செல்லும். தற்போது விஜய் முதலமைச்சராக இருப்பதால் அவரது படத்தின் டிக்கெட் 2000 ரூபாய்க்கு மேல் விற்கப்பட்டால் எதிர்க்கட்சிகளின் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாக நேரிடும்.

எனவே ஜனநாயகன் படத்தின் டிக்கெட்டுகளை அரசு நிர்ணயித்த விலையான 190 ரூபாய்க்கு மேல் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதைத் தடுக்க அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் எந்தவொரு திரைப்படத்திற்கும் அதிகபட்ச டிக்கெட் விலையாக 190 ரூபாய்க்கு மேல் வசூலிக்கக் கூடாது என்பது சட்ட. ஜனநாயகன் திரைப்படமும் இந்த விதிமுறையின் கீழ் வருவதால், கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்பனை செய்வதை தவிர்க்க திரையரங்குகளுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாம்.
முந்தைய முன்பதிவுகளின் போது, ஒரு சில திரையரங்குகளில் டிக்கெட்டுகள் சட்டவிரோதமாக ரூ. 5,000 வரை விற்கப்பட்டதாக எழுந்த புகார்களை தொடர்ந்து, தற்போது அரசு இத்தகைய கடுமையான கண்காணிப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தெரிகிறது. விஜய் தரப்பிலேயே டிக்கெட் விவகாரத்தை தீவிரமாக கவனிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.
திரையரங்குகள் மற்றும் விநியோகஸ்தர்கள் அரசு விதிகளுக்கு கட்டுப்பட்டு நடக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதிக விலைக்கு டிக்கெட்டுகளை வாங்குவதை தவிர்க்குமாறும், அதிகாரப்பூர்வ வழிகளில் டிக்கெட் முன்பதிவு செய்யுமாறும் பொதுமக்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. ரசிகர் மன்றம், கட்சி தரப்பிலும் கண்காணிப்பு செய்ய கூறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பட வெளியீட்டின் போது, முறைகேடாக அதிக விலைக்கு டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதையும், பிளாக்கில் டிக்கெட்டுகள் விற்கப்படுவதையும் தடுக்க அதிகாரிகள் திரையரங்குகளை தொடர்ந்து கண்காணிக்க உள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசு விதிகளுக்கு மாறாக செயல்படும் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.
ஜனநாயகன் திரைப்படம் உலகம் முழுவதும் வரும் 23 ஆம் தேதி திரைக்கு வருகிறது. 30 நாடுகளில் 8 ஆயிரத்துக்கும் அதிகமான ஸ்கிரீன்களில் படம் வெளியிடப்படுகிறது. இந்தியா மட்டுமில்லாமல் பிரிட்டன், கனடா உள்ளிட்ட நாடுகளிலும் ஜனநாயகன் திரைப்படத்திற்கு டிக்கெட் முன்பதிவு தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே உலக அளவில் அட்வான்ஸ்டு புக்கிங் 4 கோடி ரூபாயை கடந்து விட்டதாம்.
தமிழ்நாட்டில் 19 ஆம் தேதி முதல் டிக்கெட் முன்பதிவு தொடங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. பிரிட்டனில் மட்டும் ஒரு கோடிக்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்கபட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பெங்களூரில் தான் முதன் முதலில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. அங்கே காலை 6 மணிக்கே படம் திரையிடப்பட இருக்கிறது. தமிழ்நாட்டில் காலை 9 மணி முதல் காட்சிகள் தொடங்குகின்றன .பெங்களூருவில் முதல் நாள் காலை 6:00 மணி ஷோவுக்ன அனைத்து டிக்கெட்டுகளும் கிட்டத்தட்ட விற்பனை செய்து விட்டதாக புக்மைஷோ தளம் தெரிவிக்கிறது.


Click it and Unblock the Notifications

