தற்போதைய சூழலில் நம் நாட்டு மக்கள் ஒரே ஒரு விஷயத்தை தான் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். அதுதான் பெட்ரோல் டீசல் மற்றும் எல்பிஜி சிலிண்டர் விலை. ஏனெனில் ஈரான் அமெரிக்கா இடையே நிலவும் போர் பதற்றம் சாமானியர்களின் பட்ஜெட்டில் கை வைத்துள்ளது. ஈரான் போரின் காரணமாக, முக்கிய கடல் வழித்தடமான ஹர்மோஸ் ஜலசந்தியை மூடி வைத்துள்ளது. இந்த வழியாகத்தான் கச்சா எண்ணெய், எல்பிஜி சிலிண்டர் போன்ற பல பொருட்கள் உலக நாடுகளுக்கு இறக்குமதி செய்யப்படுகின்றன.
இந்த வழித்தடம் மூடி இருப்பதால் சப்ளை குறைந்திருக்கிறது. இதனால் எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு நாளும் கடுமையான நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. இருந்தும் ஓரளவுக்கு மேல் விலை உயர்வை அறிவிக்காமல் இருந்து வருகின்றன. ஆனால் இதே நிலை தொடர்ந்தால் இனி வரும் நாட்களில் கண்டிப்பாக விலை ஏற்றத்தை தவிர்க்க முடியாத சூழல் ஏற்படும் வாய்ப்புள்ளது. இதனால் மக்களும் பெட்ரோல் டீசல் மற்றும் எல்பிஜி சிலிண்டர் குறித்த செய்திகளை கூர்மையாக கவனித்து வருகின்றனர்.
தொடர்ந்து பெட்ரோல் டீசல் மற்றும் எல்பிஜி சிலிண்டர் விலை அதிகரித்து வருவது குறித்து மத்திய பெட்ரோலியத்துறை இணை அமைச்சரான சுரேஷ்கோபி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது சர்வதேச சந்தையில் இருந்து கச்சா எண்ணெய் கிடைப்பதை பொருத்து, இந்தியாவில் எரிபொருள் விலை குறித்த முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

விலை குறையுமா?, அதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு சுரேஷ்கோபி, முதலில் கச்சா எண்ணெயின் சப்ளை எப்படி இருக்கிறது என்று பார்ப்போம். இதை கவனிப்பதற்கு மூத்த அதிகாரி ஹர்தீப் சிங் பூரி இருக்கிறார். அவரிடமிருந்து அடுத்த கட்ட தகவல்கள் வரட்டும். அப்போது எரிபொருள் விலையில் மாற்றம் இருக்குமா என்பது தெரிந்து விடும். கச்சா எண்ணெயின் வினியோகம் மற்றும் ஒட்டுமொத்தமாக இருக்கும் எரிபொருள் இருப்பு ஆகியவற்றின் அடிப்படையில் விலை நிர்ணயம் இருக்கும் என்றும் கூறினார்.
பெட்ரோலிய அமைச்சகம் மற்றும் உள்நாட்டு எண்ணெய் நிறுவனங்கள் கச்சா எண்ணெய்யின் விலை நிலவரத்தைக் கவனித்து வருகின்றன. இந்நிலையில் மத்திய பெட்ரோலிய அமைச்சகம் ஜூன் 11-ஆம் தேதி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அந்த வகையில் வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் அதிக அளவில் ரீடைல் பெட்ரோல் பம்புகளில் பெட்ரோல், டீசல் வாங்க தடை விதிக்கப்பட்டது. இந்த தடை வரும் மூன்று மாதங்களுக்கு அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேவைப்பட்டால் இதை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏனெனில் தொழிற்சாலைகள், டெலிக்காம் நிறுவனங்கள் என அனைத்தும் மொத்தமாக கேன்களிலும், லாரிகளிலும் பெட்ரோல், டீசல் வாங்கி வந்தன. இதனால் பொது மக்களுக்கு தற்போது நிலவும் சப்ளை தட்டுப்பாட்டில் பெட்ரோல், டீசல் தீர்ந்து விடுமோ? என்ற கேள்வி எழுந்தது. இதை தடுப்பதற்காக தான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் தொழிற்சாலைகள் மற்றும் பிற நிறுவனங்கள் மொத்த விற்பனை நிலையங்கள் மூலமாக பெட்ரோல் டீசல் வாங்கலாம். இப்படி அரசும் சாமானியர்களுக்கு உதவுவதற்காக பல விஷயங்களை செய்து வருகிறது. இதேபோன்று இனிவரும் அறிவிப்புகளும் மிடில் கிளாஸ் மக்களுக்கு கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications