கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்றுவது என்பது இன்னும் சிரமமான விஷயமாக தான் இருக்கிறது. பஸ்ஸில் செல்லும்போது கூட கண்டக்டரிடம் ஒரு கிழிந்த ரூபாயை நோட்டை நீட்டினால், அவர் வேறு நோட்டை கேட்பார். வங்கிகளில் கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்றும் வசதி இருந்தாலும், இன்னும் பல இடங்களில் கிழிந்த நோட்டுகள் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.
காகிதத்தால் செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளை சட்டை பாக்கெட்டில் வைக்கும் போது அவை தற்செயலாக சுருங்கத் தான் செய்யும். இன்னும் சிலர் பாக்கெட்டில் வைத்து விட்டு அப்படியே துணி துவைக்க போட்டு விடுவார்கள். இது போன்ற சமயங்களில் நனைந்து மடிந்து போய்விடும். ஆக காகிதத்தால் செய்யப்பட்ட நோட்டுகளால் நமக்கு ஏற்படும் தலைவலிகள் ஏராளம். இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பதற்காக இந்திய ரிசர்வ் வங்கி ஒரு அதிரடியான யோசனையை கையில் எடுத்துள்ளது. இனி காகித நோட்டுகளுக்கு பதிலாக பாலிமர் எனப்படும் ஒருவகையான பிளாஸ்டிக்கை கொண்டு ரூபாய் நோட்டுகள் வெளியாகவுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் மும்பை மற்றும் பாட்னாவில் ஆர்பிஐ கூட்டங்களை நடத்தியது. அந்தக் கூட்டத்தில் இனி காகிதத்திற்கு பதிலாக பாலிமர் கொண்டு தயாரிக்கப்படும் ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்ய ஆலோசனை நடந்ததாம். இதை தகவலறிந்த வட்டாரங்கள் பிசினஸ் ஸ்டாண்டர்ட் பத்திரிக்கைக்கு தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தற்போது பயன்பாட்டில் இருக்கும் காகித நோட்டுகளைத் தயாரிப்பதற்கான செலவுகளோடு ஒப்பிடுகையில் பாலிமர் நோட்டுகளை தயாரிக்க மிக மிகக் குறைந்த செலவே ஆகும் என்றும், இதை நம் ஊரில் இருக்கும் ஏடிஎம் இயந்திரங்கள் மூலமாகவே மக்கள் தங்குதடையின்றி எடுத்துக் கொள்ளலாம் என்றும் தகவல் அறிந்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் ஆர்பிஐ வருடாந்திர அறிக்கையை வெளியிட்டது. அதில் ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதற்கு ஒவ்வொரு நிதியாண்டும் எவ்வளவு செலவாகிறது என்ற விபரங்கள் தெள்ளத் தெளிவாக கொடுக்கப்பட்டிருந்தது. 2025-ஆம் நிதியாண்டில் மட்டும் நோட்டுகளை அச்சடிக்க ரூ.6,372.8 கோடி செலவாகியுள்ளதாம். இது 2024-ஆம் நிதியாண்டில் செலவு செய்யப்பட்ட ரூ. 5,101.4 கொடியுடன் ஒப்பிடுகையில் சற்று அதிகம் தான்.
இதே போல ஒவ்வொரு நிதியாண்டும் செலவு அதிகரித்து கொண்டே போனால் நோட்டுகளை அச்சடிக்கவே தனி செலவு செய்ய வேண்டி வரும் என்பதனால். அதனால் தான் இனிவரும் காலங்களில் பாலிமர் நோட்டுகளை வெளியிட ஆர்பிஐ பரிசீலித்து வருகிறது. இதற்கு மற்றொரு காரணம் என்ன தெரியுமா 2025-ஆம் நிதியாண்டில் மட்டும் 23.8 பில்லியன் பழுதான ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. அதற்கு முந்தைய ஆண்டில் இந்த எண்ணிக்கை 21.24 பில்லியனாக இருந்தது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 12.3 சதவீதம் அதிகமான நோட்டுகள் சேதமடைந்துள்ளன. இதில் பெரும்பாலான நோட்டுகள் 500 ரூபாயாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
என்னதான் டிஜிட்டல் பே, கூகுள் பே போன்ற தளங்கள் அதிகரித்தாலும் மக்கள் கையில் பணத்தை வைத்திருப்பதை தான் திருத்தி என்று நினைக்கின்றனர். அனால் நோட்டுகள் சேதம் அடையும் போது ஒரு மாற்று வழியை தேட வேண்டிய அவசியமும் உண்டாகத் தான் செய்கிறது. எனவே ஆர்பிஐ எடுத்திருக்கும் இந்த முடிவு சரியாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பே நிலவுகிறது. இனிவரும் காலங்களில் இந்த பாலிமர் நோட்டுகள் அச்சடிப்பு குறித்த தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.


Click it and Unblock the Notifications