எப்போது தான் முடிவுக்கு வருமோ என உலகமே எதிர்பார்த்திருந்த ஈரான் போரில் ஒருவழியாக தற்காலிக போர் நிறுத்தம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. மற்ற போர்களை போல இல்லாமல் ஈரான் போர் அந்த ஒரு நாட்டை மட்டுமில்லாமல் பல நாடுகளையும் பாதித்துள்ளது.
கோடிக்கணக்கான மக்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, எல்பிஜி தட்டுப்பாடு, எனர்ஜி லாக்டவுன் ஆகிய சூழல்களை எதிர்கொண்டனர். இந்நிலையில் தான் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே இரண்டு வார கால போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் பாதுகாப்பாக கடந்து செல்ல ஈரான் நடவடிக்கை எடுக்கும்பட்சத்தில் 2 வாரத்திற்கு ஈரான் மீதான தாக்குதலை நிறுத்துவேன் என அறிவித்துள்ளார்.

பாகிஸ்தான் தரப்பில் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தையில் இரு தரப்பும் ஒரு உடன்பாடுக்கு வருவது என சம்மதம் தெரிவித்துள்ளன. இதனால் தான் இரு தரப்பு போர் ஒப்பந்தம் என்ற வார்த்தை டிரம்ப் பயன்படுத்தியுள்ளார். இந்த போர் நிறுத்தம் இந்த இரண்டு வார காலத்திற்கு நீடிக்குமா , இரண்டு வாரத்திற்கு பிறகு இந்த போர் எதை நோக்கி செல்ல போகிறது என்பது குறித்த முக்கியமான ஆலோசனைக் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை நடைபெற இருக்கிறது.
பாகிஸ்தானில் அதிகாரப்பூர்வமாக அமெரிக்கா மற்றும் ஈரான் தரப்பு பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தப் போகின்றனர் என பாகிஸ்தான் பிரதமர் செபாஷ் ஷெரிஃப் தெரிவித்திருக்கிறார். ஏப்ரல் பத்தாம் தேதி அன்று இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் தரப்பு பிரதிநிதிகளை பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்திருப்பதாக அவர் கூறியிருப்பதாக ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் செய்தி குறிப்பிடுகிறது.
வரும் வெள்ளிக்கிழமை அமெரிக்காவுடன் அதிகாரப்பூர்வமாக அமைதிப் பேச்சு வார்த்தை நடத்தப்படுவதாக ஈரான் நாட்டு பாதுகாப்பு கவுன்சிலும் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. இதற்கிடையே ஈரான் தரப்பில் பத்து அம்ச நிபந்தனைகளை முன் வைத்திருப்பதாகவும் பாதுகாப்பு கவுன்சில் கூறியிருக்கிறது. மேலும் அமைதி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என்பதற்காக போர் முடிந்து விட்டது என அர்த்தம் கொள்ள முடியாது என்றும் ஈரான் டிவிஸ்ட் வைத்துள்ளது.
15 நாட்களுக்கு இந்த பேச்சுவார்த்தை நீடிக்கும் என்றும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் அதற்கு மேலும் போர் நிறுத்தமும் பேச்சுவார்த்தையும் நீட்டிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் ஈரான் தரப்பு கூறுவதாக ராய்ட்டர்ஸ் செய்தி சுட்டிக்காட்டுகிறது. இதற்கிடையே தங்கள் நாட்டின் மீதான பொருளாதார தடைகளை அமெரிக்கா நீக்க வேண்டும், சேதங்களுக்கு இழப்பீடு தர வேண்டும், அனைத்து விதமான தாக்குதல்களையும் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.
வெள்ளிக்கிழமை பாகிஸ்தானில் நடக்கும் பேச்சுவார்த்தை தான் போர் நிறுத்தம் நீடிக்குமா, இந்த பிராந்தியம் அமைதியை நோக்கி செல்லுமா என்பதை தீர்மானிக்க போகிறது. இதற்கிடையே போர் நிறுத்த ஒப்பந்தம் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி திறப்பு ஆகியவை அமெரிக்காவுக்கு கிடைத்த பெரிய வெற்றி என வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர். இஸ்ரேல் தரப்பும் ஈரான் தாக்குதலை நிறுத்த வேண்டும், ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க வேண்டும் அவ்வாறு நடக்கும் பட்சத்தில் நாங்கள் தாக்குதலை நிறுத்துவோம் என அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications