தொலைகாட்சிப் பெட்டியை தயாரிக்க பயன்படுத்தப்படும் open cell-களை இறக்குமதி செய்வதற்கான, 5% சுங்க வரியை மீண்டும் விதிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இதற்கு முன்னதாக அளிக்கப்பட்டிருந்த ஓராண்டு விலக்கு செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், இன்று முதல் இந்த சுங்க வரி அமலுக்கு வருகின்றது.
இதன் காரணமாக டிவிகளின் விலை இனி அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சரி வாருங்கள் இதனை பற்றி பார்க்கலாம்.
டிவி விலை அதிகரிக்கும்
அதுவும் இந்த வரி அதிகரிப்பானது இந்த விழாக்கால தருணத்தில் வந்திருப்பது, விற்பனை பாதிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு புறம் அரசின் இந்த நடவடிக்கையினால் உள்நாட்டு உற்பத்தியினை ஊக்குவிக்க முடியும் என்றாலும், மறுபுறம் பொருட்களின் விலை அதிகரிக்கும் என்பது கவலையளிக்கும் விஷயமாகவே பார்க்கப்படுகிறது.
டிவி தயாரிப்பில் முக்கிய உதிரி பாகம்
டிவி உற்பத்தியில் முக்கிய உதிரி பாகமாக கருதப்படுவது டிவி பேனல்கள் ஆகும். அத்தகைய உதிரி பாகங்களுக்கு ஒராண்டுக்கு 5% வரி சலுகை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நடைமுறையானது செம்டம்பர் 30-வுடன் முடிவுக்கு வரும் என்றும் அரசாங்கம் கூறியிருந்தது. இதனால் இனி டிவியின் விலை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
விழாக்கால பருவத்தில் விலை அதிகரிக்கும்
இந்தியாவில் வரவிருக்கும் பண்டிகை காலங்களில் பொதுவாக இந்த டிவி உள்ளிட்ட பல வீட்டுக்கு தேவையான பொருட்களின் விற்பனையானது களைகட்டும். ஆனால் இந்த நேரத்தில் எல்இடி மற்றும் எல்சிடி டிவிகளில் பயன்படுத்தப்படும் ஸ்கீரின்கள் விலை அதிகரிக்கும் போது, டிவிகளின் விலையும் அதிகரிக்கும்.
டிவி பேனல் விலை அதிகரிப்பு
செப்டம்பர் முதல் பேனல் உற்பத்தியாளர்கள் ஏற்கனவே விலையை 20 - 25% அதிகரித்துள்ளதால் பேனல் விலைகள் அதிகரித்து வருகின்றன. டிவிக்களின் விலையில் சுமார் 60% திரையை உருவாக்கும் ஒபன் செல் பேனல் விலையை பொறுத்து இருக்கும். இந்த நிலையில் இந்த வரி அதிகரிப்பு மேற்கொண்டு விலையின் அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
எங்கிருந்து அதிக இறக்குமதி
இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் ஓபன் செல் பேனல்கள் அதிகளவில் சீனா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகின்றது. பல நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டாலும், சீனாவில் இருந்து தான் அதிகம் இறக்குமதி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் இந்த நடவடிக்கையினால் சீனாவுக்கு சற்று பின்னடைவு ஏற்பட்டாலும், நீண்டகால நோக்கில் பார்க்கும் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி பெருக இது வாய்ப்பாக அமையும். இந்தியாவுக்கு நல்ல விஷயம் என்றால், அது நமக்கும் நல்ல விஷயம் தானே.