பிளாஸ்டிக் பயன்படுத்துவதை முற்றிலுமாக ஒழிப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக முயற்சி செய்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது மத்திய அரசு அதிரடியாக புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவின்படி ஒருமுறை பயன்படுத்திய பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜூலை மாதம் முதல் தேதி முதல் ஒட்டுமொத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தடையால் குளிர்பானங்கள் விற்பனை செய்யும் நிறுவனங்கள் என்ன மாற்று ஏற்பாடு செய்யப் போகின்றன என்ற குறித்து கேள்வி எழுந்துள்ளது.
பிளாஸ்டிக்
2022ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி முதல் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஒட்டுமொத்தத் தடை என்ற உத்தரவு குளிர்பான நிறுவனங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக ப்ரூட்டி, ஆப்பே ஆகிய பானங்களை தயாரிக்கும் பார்லே நிறுவனம், பிளாஸ்டிக் தடைக்கு 6 மாத காலம் அவகாசம் கேட்டு கோரிக்கை விடுத்த நிலையில், அந்த கோரிக்கை தள்ளுபடி செய்யப்பட்டு தற்போது ஜூன் 30 வரை மட்டுமே காலக்கெடு விதித்துள்ளது. எனவே இன்னும் 17 நாட்களில் மாற்று ஏற்பாட்டை செய்தே தீர வேண்டும்.
ஜூலை 1 முதல்
ஜூலை 1ஆம் தேதி முதல் ஸ்ட்ரா உள்பட ஒரு முறை பயன்படுத்தப்படும் எந்தவிதமான பிளாஸ்டிக் பொருட்களையும் பயன்படுத்த கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவால் குளிர்பான நிறுவனங்கள் இன்னும் ஒரு சில நாட்களுக்குள் மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
அவகாசம்
ஏற்கனவே பொருளாதாரம் கடும் சரிவில் இருக்கும் நிலையில் திடீரென மத்திய அரசின் இந்த உத்தரவு எதிர்மறையான விளைவுகளை உருவாக்கும் என்றும், மத்திய அரசின் தடையை நாங்கள் வரவேற்கிறோம், ஆனால் அதே நேரத்தில் இந்த தடையை அமல்படுத்த குறைந்தது ஆறு மாத காலம் அவகாசம் வேண்டும் என்றும் பார்லி அக்ரோ நிறுவனம் கருத்து தெரிவித்துள்ளது.
அமுல்
அதேபோல் பால் பொருட்களை தயாரிக்கும் அமுல் நிறுவனம் இதுகுறித்து கருத்து தெரிவித்த போது 'பிளாஸ்டிக் ஸ்ட்ரா உள்பட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் தடையை அமல்படுத்த போதுமான அவகாசம் தேவை என்றும் சர்வதேச சந்தையிலும் உள்நாட்டு சந்தையிலும் பேப்பர் ஸ்ட்ராக்களை பயன்படுத்த நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றும், ஆனால் அதே நேரத்தில் 6 முதல் 8 மாத கால அவகாசம் தேவைப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளது.
பிளாஸ்டிக் ஸ்ட்ரா
அமுல் நிறுவனத்திற்கு மட்டும் தினசரி 10 முதல் 12 லட்சம் பிளாஸ்டிக் ஸ்ட்ரா தேவைப்படும் நிலையில், தேவையான அளவு பேப்பர் ஸ்ட்ராக்களை தயாரிப்பதற்கான காலத்தை கொடுத்து அதன்பிறகு தடையை அமல்படுத்தலாம் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
தடை
6 முதல் 8 மாதங்கள் வரை இந்த தடையை அமல்படுத்த குளிர்பான நிறுவனங்கள் அவகாசம் கேட்கும் நிலையில் மத்திய அரசு இதற்கு செவிசாய்க்குமா? அல்லது ஜூலை 1ஆம் தேதி முதல் திட்டமிட்டபடி தடையை அமல்படுத்துமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.