உலக நாடுகள் பலவும் மந்த நிலையால் தத்தளித்து வரும் நிலையில், இந்தியாவில் அப்படி ஏதும் பிரச்சனை இருப்பதாக தெரியவில்லை. வளர்ச்சியில் மெதுவான நிலை இருந்து வந்தாலும், அமெரிக்கா, இங்கிலாந்து போல மோசமான நிலையை எட்டவில்லை. இதனால் சர்வதேச நாடுகளின் கவனமானது இந்தியாவின் பக்கம் திரும்பியுள்ளது.
இது ஒரு புறம் எனில் மறுபுறம் உலகின் உற்பத்தி ஆலை என்று கூறப்படும் சீனாவில், சமீபத்திய ஆண்டுகளாக பதற்றமான நிலை இருந்து வருகின்றது.
சீன அரசின் கடுமையான கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் நிறுவனங்கள் பலவும் பிரச்சனையை எதிர்கொண்டு வருகின்றன. பல நிறுவனங்களும் சீனாவுக்கு வெளியே தங்களது வணிகத்தினை செய்ய திட்டமிட்டு வருகின்றன.
சீனாவுக்கு மாற்று இந்தியா
சொல்லப்போனால் இந்தியாவின் மிகப்பெரிய சந்தையானது, சர்வதேச நிறுவனங்களை இந்தியாவின் பக்கம் திருப்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சீனாவில் நிலவி வரும் பிரச்சனைகளுக்கு மத்தியில், ஆப்பிள் இந்தியாவில் உற்பத்தியினை அதிகரிக்க தொடங்கியுள்ளது.
பல்வேறு வசதிகள்
மேற்கோண்டு இந்தியாவில் அன்னிய முதலீடுகளை ஊக்குவிக்கும் விதமாக முதலீடுகள், ரோடுகள் மற்றும் நிலையான வருமானம் தரும் முதலீடுகள், சர்வதேச நிறுவனங்கள் தங்களது உற்பத்தியினை அதிகரிக்கும் விதமாக இங்கு ஆலைகளை அமைக்க தேவையான வசதிகள் என பலவற்றையும் இந்திய அரசு செய்து வருகின்றது.
பல்வேறு திட்டங்கள்
எல்லாவற்றுக்கும் மேலாக இங்கு தங்களது உற்பத்தியினை செய்யும் நிறுவனங்களுக்கு பி எல் ஐ உள்ளிட்ட சில திட்டங்கள் மூலம் வரி சலுகைகள், மானியங்கள் என பல்வேறு சலுகைகள் கிடைக்கிறது. தொடர்ச்சியான உள்நாட்டு நிறுவனங்களின் வளர்ச்சி விகிதமும் கொரோனாவுக்கு பிறகு பெரியளவில் வளர்ச்சி காணத் தொடங்கியுள்ளது. ஆக இதுவும் இந்தியாவின் உற்பத்தி அதிகரிக்க காரணமாக அமையலாம்.
மானியங்கள்
எல்லாவற்றுக்கும் மேலாக உலகளவில் அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டாவது பெரிய நாடான இந்தியாவில், மக்கள் தொகை என்பதும் சர்வதேச நிறுவனங்களின் ஆர்வத்திற்கு மற்றொரு முக்கிய காரணமாகவும் அமைந்துள்ளது.
இந்தியாவில் இன்றும் சோலார் தொடங்கி, மின்சார வாகனங்கள், பேட்டரிகள் வரையில் பலவற்றிற்கும் பல மானியங்களை அரசு வழங்கி வருகின்றது.
உற்பத்தி அதிகரிக்கலாம்
எதிர்கால தேவையானது மேற்கண்ட பொருட்களுக்கான தேவையானது அதிகரிக்கலாம் என்பதால், இவற்றின் உற்பத்தியானது அதிகரிக்க வழிவகுக்கலாம். இது இந்த பொருட்களை ஏற்றுமதி செய்வதை விட, இந்தியாவின் தேவையினை பூர்த்தி செய்தாலே போதுமானதாக இருக்கும். இது அண்டை நாடுகளில் இருந்து இறக்குமதியினை குறைக்க வழிவகுக்கலாம்.
மூலதன செலவினங்கள் அதிகரிக்கலாம்
இந்தியாவில் இலக்கினை விட பணவீக்கம் என்பது அதிகரித்துள்ளது. எனினும் அரசு தொடர்ந்து உள்கட்டமைப்புகளில் கவனம் செலுத்தி வருகின்றது. வங்கி துறைகள் மேம்பட்டுள்ளன. தேவையான நிதிகளை வழங்கி வருகின்றன. இது மேற்கொண்டு மூலதன செலவினங்களை உந்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நரேந்திர மோடி அரசு
கொரோனாவுக்கு பிறகு பொருளாதார வளர்ச்சியில் மிக மோசமான தாக்கத்தினை எதிர்கொண்டாலும், நரேந்திர மோடி தலைமையிலான அரசு அதனை மிகவும் கவனமாக கையாண்டு வருகின்றன. குறிப்பாக நாட்டின் பொருளாதாரத்தினை நீண்டகால நோக்கில் உந்தும் விதமாக, பல்வேறு சலுகைகளை அளித்து வருகின்றது.
சவால்களுக்கு மத்தியில் கோல்
அதேசமயம் அரசு பொது சுகாதாரம், மாணவர்களின் கல்வி, மற்றும் சுற்றுசூழல் என பலவற்றையும் கொரோனா காலகட்டத்தில் கையாள வேண்டிய நிலையில் இருந்தது. இதன் காரணமாக இந்தியாவில் நிதி பற்றாக்குறை என்பது மிக அதிகளவில் இருந்து வந்தது. ஆனால் இத்தனை சவால்களுக்கு மத்தியிலும் இந்தியா தொடர்ந்து அடுத்தடுத்த திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.
வேலை வாய்ப்பு அதிகரிப்பு
அரசின் பி எல் ஐ திட்டத்தின் மூலம் தொடர்ந்து முதலீடுகள் இந்தியாவில் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. அதன் மூலம் வேலை வாய்ப்புகளும் அதிகரித்துள்ளன. தொடர்ந்து வேலை வாய்ப்புகள் இதன் மூலம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்தியாவின் வளர்ச்சிக்கு நிச்சயம் நீண்டகால நோக்கில் கைகொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவின் வளர்ச்சியில் தாக்கம்
மறுபுறம் சீனாவில் தொடர்ந்து பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன. ஆரம்பத்தில் அங்கு ஏற்பட்ட மந்த நிலை, ரியல் எஸ்டேட் துறை சரிவு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான சீனாவின் கடுமையான கட்டுப்பாடு, அதனை தொடர்ந்து ஜீரோ கோவிட் பாலிசி என பலவும் மேற்கொண்டு சீனாவின் வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தி வருகின்றன. இதனால் சீனாவில் முதலீடுகள் குறையத் தொடங்கியுள்ளன.
மெதுவான வளர்ச்சி
அதேசமயம் மந்த நிலையால் பெரும்பாலான ஆசிய சப்ளையர்களுக்கு ஏற்றுமதி குறையத் தொடங்கியுள்ளது. இந்தியாவின் ஏற்றுமதி என்பது கடந்த நவம்பர் மாதம் கணிசமான சரிவினைக் கண்டுள்ளது. தொழிற்துறையில் வளர்ச்சி மெதுவான வேகத்தில் இருந்து வருகின்றது. இதற்கிடையில் வேலையின்மை விகிதமும் 8% மேலாக இருந்து வருகின்றது.
இந்தியாவில் தாக்கம்
வட்டி விகிதம் என்பது தொடர்ந்து அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. ஆக நிலை இன்னும் கடுமையாகலாம். உக்ரைனில் போர் தீவிரமடைந்தால், சீனாவில் பிரச்சனைகள் குறைந்தால், மீண்டும் அது இந்தியாவில் தாக்கத்தினை கொடுக்கலாம். இதனால் இந்திய நிறுவனங்களுக்கு பணப்புழக்கத்தினை குறைக்கலாம்.
நீண்டகால வளர்ச்சி
குறிப்பாக மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை உயர்த்தி வரும் நிலையில், வங்கிகள் வைப்பு நிதிகளுக்கு வட்டியை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இதற்கிடையில் அடுத்த ஆண்டும் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் குறித்தான கணிப்பு மெதுவாகவே உள்ளது. இது சர்வதேச மந்த நிலையின் மத்தியில் உள்ளது. எனினும் நீண்டகால வளர்ச்சி என்பது இந்தியாவில் சாதகமாகவே இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சீனாவினை காட்டிலும் இந்தியா அதிக முதலீடுகளை ஈர்க்கலாம்.