உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் கட்டண நடைமுறையாக உருவெடுத்துள்ளது இந்தியாவின் யுபிஐ பரிவர்த்தனை. இந்தியாவின் குக்கிராமங்கள் வரை யுபிஐ பரிவர்த்தனைகள் வெற்றிகரமாக சென்று சேர்ந்திருப்பது உலக நாடுகளை ஆச்சர்யப்படுத்துகிறது. ஜூலை மாதத்தில் சுமார் இந்தியாவில் யுபிஐ மூலம் சுமார் 23.6 பில்லியன் பரிவர்த்தனைகள் நடந்துள்ளன.
யுபிஐ பரிவர்த்தனை கட்டமைப்பை தொடர்ந்து பராமரிப்பதற்கான நிதி சுமையை தற்போது அரசு தான் ஏற்று கொண்டுள்ளது. அதாவது யுபிஐ கட்டமைப்பை பயன்படுத்த மக்களோ, வணிகர்களோ எந்த கட்டணமும் செலுத்துவது இல்லை. இதற்கான செலவுகளை அரசு தான் ஏற்கிறது. இந்நிலையில் அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவின் UPI மற்றும் RuPay கட்டமைப்புகள் அமெரிக்க நிறுவனங்களான விசா மற்றும் மாஸ்டர்கார்டுகளை பாதிப்பதாக விமர்சித்துள்ளது.

இத்தகைய சூழலில் தான் மத்திய அரசு யுபிஐ பரிவர்த்தனைகளில் வணிகர்களுக்கு கட்டணம் விதிக்க ஏதுவாக எம்டிஆர் (Merchant Discount Rate) கட்டணங்களை மீண்டும் கொண்டு வருவதற்கான சட்ட திருத்தத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தது. இது நிறைவேறும் பட்சத்தில் 2000 ரூபாய்க்கும் அதிகமாக வணிக ரீதியான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு வணிகர்களிடம் இருந்து ஒரு கட்டணம் வசூல் செய்யப்படும்.
மத்திய அரசு மக்களவையில் Payment and Settlement Systems Act, 2007 என்ற சட்ட திருத்தம் ஒன்றை கொண்டு வந்துள்ளது. இது டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் விதிக்கும் அதிகாரத்தை மத்திய அரசுக்கு வழங்குகிறது. எந்தெந்த பரிவர்த்தனைகள் இலவசமாக தொடர வேண்டும், எவற்றிற்கு கட்டணம் வசூலிக்கலாம் என்பதை அரசு முடிவு செய்யும்.
தற்போதைய சூழலில், 2,000 ரூபாய்க்கு மேற்பட்ட வணிக பரிவர்த்தனைகளுக்கு 0.25% முதல் 0.5% வரை எம்டிஆர் (Merchant Discount Rate) கட்டணம் விதிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. ஆண்டுக்கு 1.5 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டும் பெரிய வணிகர்களுக்கு மட்டும் கட்டணம் விதிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம், சிறிய பரிவர்த்தனைகள் மற்றும் தனிநபர்களுக்கு இடையிலான பரிவர்த்தனைகள் தொடர்ந்து இலவசமாகவே இருக்கும் என சொல்லப்படுகிறது. அரசு இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும்.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்காவின் அழுத்தம் தான் காரணமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தியா தனது யுபிஐ கொள்கைகளை அமெரிக்காவின் அழுத்தத்திற்கு அடிபணிந்து மாற்றக்கூடாது என இந்தியாவின் முக்கியமான think tank அமைப்பான GTRI கூறியுள்ளது. இதன் தலைவரான அஜய் ஸ்ரீவஸ்தவா இந்திய சந்தையில் போட்டித்தன்மையையும், கொள்கை தன்னாட்சியையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும் என கூறியுள்ளார்.அமெரிக்க நிறுவனங்களின் லாபத்தை பாதுகாப்பதற்காகவோ அல்லது அவர்களின் வர்த்தக புகார்களை தீர்ப்பதற்காகவோ மட்டும் இந்தியா தனது யுபிஐ கொள்கைகளை மாற்றக்கூடாது என்றும் அவர் கேட்டு கொண்டுள்ளார்.
முன்னதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா, யுபிஐ பணப்பரிவர்த்தனை உள்கட்டமைப்பை பராமரிக்கும் செலவை யாராவது ஒருவர் ஏற்க வேண்டும் என கூறியிருந்தார். இந்நிலையில் தான் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு அரசு எத்தகைய கட்டணத்தை விதித்தாலும் அது டிஜிட்டல் பரிவர்த்தனை வளர்ச்சியை தடுக்கும் வகையில் அமைய கூடாது, அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு பணிந்து செய்வதாக இருக்க கூடாது என நிபுணர்கள் கேட்டு கொண்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications

