இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான விப்ரோ சிறப்பான ஜூன் காலாண்டு முடிவை வெளியிட்டுள்ளது. மேலும் இக்காலாண்டில் கடந்த 10 வருடத்தில் நடந்திடாத வகையில் சுமார் 12,000 ஊழியர்களைத் தனது நிறுவன பணிகளில் சேர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு இதே ஜூன் காலாண்டில் வெறும் 7,000 ஊழியர்களைச் சேர்த்த விப்ரோ நிறுவனம், தற்போது 12,000 ஊழியர்களைச் சேர்த்துள்ளது, இது கடந்த 10 ஆண்டில் நிகழ்ந்திடாத ஒன்று என இந்நிறுவன சிஇஓ தியரி டெலாபோர்டே தெரிவித்துள்ளார்.
கடுமையான போட்டி
ஆனாலும் மார்ச் காலாண்டில் 12 சதவீதமாக இருந்த இந்நிறுவனத்தின் ஊழியர்கள் வெளியேற்றும் விகிதம் ஜூன் காலாண்டில் 15.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. டாப் ஐடி நிறுவனங்கள் மத்தியில் ஊழியர்களைக் கைப்பற்றுவதில் கடுமையான போட்டி நிலவி வரும் காரணத்தால் ஊழியர்கள் வெளியேற்றும் விகிதம் இரட்டை இலக்கத்தில் உள்ளது.
விப்ரோ நிறுவனம்
ஜூன் 30 உடன் முடிந்த காலாண்டு உடன் விப்ரோ நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 2.09 லட்சமாக உயர்ந்துள்ளது, 2021ஆம் நிதியாண்டில் மட்டும் விப்ரோ கொரோனா தொற்று பாதிப்புகளைக் கடந்த 15,000 ஊழியர்களைப் பணியில் அமர்த்தியது.
டிசிஎஸ் ஊழியர்கள் எண்ணிக்கை
சமீபத்தில் டிசிஎஸ் வெளியிட்ட அறிக்கையில் ஜூன் காலாண்டில் 20,409 ஊழியர்களைப் புதிதாகச் சேர்ந்த காரணத்தால் இந்நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 5 லட்சமாக உயர்ந்துள்ளது. மேலும் 2022ஆம் நிதியாண்டில் புதிதாக 40000 ஊழியர்களைப் பணியில் சேர்க்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
சம்பள உயர்வு
மேலும் கொரோனா நெருக்கடியிலும் நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்குச் சம்பள உயர்வை அறிவித்துள்ளது. டிசிஎஸ் ஏப்ரல் 2021லும், இன்போசிஸ் ஜூலை 2021லும், விப்ரோ தனது 80 சதவீத ஊழியர்களுக்குச் செப்டம்பர் 2021 முதல் புதிய சம்பளத்தை அளிக்க உள்ளது.