இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்து வர்த்தகத்தை இயல்பு நிலைக்குக் கொண்டு வந்த நிலையில், 2020-21ஆம் நிதியாண்டின் காலாண்டு முடிவுகள் வெளியாகியுள்ளது.
செப்டம்பர் 30 உடன் முடிந்த 2வது காலாண்டில் விப்ரோ கடந்த வருடத்தின் இதே காலாண்டை ஒப்பிடுகையில் 3.40 சதவீதம் குறைவான லாபத்தை அடைந்துள்ளது.
கடந்த நிதியாண்டின் செப்டம்பர் காலாண்டில் 2,552.70 கோடி ரூபாய் அளவிலான லாபத்தை அடைந்திருந்த விப்ரோ, தற்போது நடப்பு நிதியாண்டின் இதேகாலகட்டத்தில் 2,465.70 கோடி ரூபாய் அளவிலான லாபத்தை மட்டுமே பெற்றுள்ளது. இதனால் விப்ரோவின் லாப அளவீட்டில் சுமார் 3.40 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் விப்ரோ நிர்வாகம் சந்தையில் இருந்து சுமார் 23.75 கோடி பங்குகளைச் சுமார் 400 ரூபாய் விலைக்கு வாங்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் மத்தியில் தனது நிதிநிலையை மேம்படுத்த முடியும் என விப்ரோ நம்புகிறது.
விப்ரோ வருவாய்
இக்காலாண்டில் விப்ரோ நிறுவனத்தின் வருவாய் 0.07 சதவீதம் சரிந்து 15,114.50 கோடி ரூபாய் பெற்றுள்ளது. இது கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இதன் அளவு 15,125.60 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
கொரோனா பாதிப்பால் புதிய வர்த்தகத்தைப் பெறுவதில் பாதிப்புகளைச் சந்தித்த விப்ரோ கடந்த நிதியாண்டு உடன் ஒப்பிடுகையில் பெரிய அளவிலான ஆர்டர்களைப் பெறவில்லை என்றாலும் வருவாய் மற்றும் லாப அளவீட்டில் சிறிய அளவிலான பாதிப்பை மட்டுமே சந்தித்துள்ளது.
பைபேக் திட்டம்
செவ்வாய்க்கிழமை வர்த்தக முடிவில் விப்ரோ நிறுவனப் பங்குகள் 375.20 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வரும் நிலையில் விப்ரோ நிர்வாகம் சுமார் 400 ரூபாய் விலையில், சுமார் 4.16 சதவீத பங்குகளைச் சந்தையில் இருந்து திரும்ப வாங்குகிறது.
சுமார் 9,500 கோடி ரூபாய் மதிப்பிலான இந்தப் பைபேக் திட்டம், சில்லறை முதலீட்டாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் இந்தப் பங்குகளைக் கைப்பற்றுவதில் விப்ரோ நிறுவனத்தின் ப்ரோமோட்டர் நிறுவனங்களும், அதன் உறுப்பினர்களும் பங்கேற்க உள்ளதாக விப்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கணிப்பு
பல்வேறு பாதிப்புகளுக்கு மத்தியில் 2வது காலாண்டு முடிவுகளில் வருவாய், லாப அளவீடுகள் சற்றுக் குறைந்தாலும், 2021ஆம் நிதியாண்டின் 3வது காலாண்டில் விப்ரோ நிறுவனத்தின் வருவாய் 2,022 முதல் 2,062 மில்லியன் டாலர் அளவிலான வருவாய் பெரும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. அதற்கான பணிகளை ஆர்வமாகவும், வேகமாகச் செய்து வருகிறோம் என விப்ரோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி Thierry Delaporte தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் வர்த்தகம் மற்றும் வருவாய் வளர்ச்சியில் தொடர்ந்து 1.5 முதல் 3.5 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்வோம் எனத் தெரிவித்தார் Thierry Delaporte.
எக்சிமஸ் டிசைன்
இக்காலாண்டு முடிவில் விப்ரோ செமிகன்டக்டர், மென்பொருள் மற்றும் சிஸ்டம் டிசைன் பிரிவில் சிறந்து விளங்கும் எக்சிமஸ் டிசைன் என்னும் நிறுவனத்தைக் கைப்பற்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
எக்சிமஸ் டிசைன் நிறுவனம் IoT, இன்டஸ்ட்ரீ 4.0, எட்ஜ் கம்பியூட்டிங், கிளவுட், 5ஜி, செயற்கை நுண்ணறிவு என் பல்வேறு துறையில் சிறந்து விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.