கடந்த சில மாதங்களாகவே, "அந்த ஐடி கம்பெனியில் இத்தனை பேர் பணி நீக்கம்" "இந்த ஐடி கம்பெனியில் இத்தனை பேருக்கு சம்பளம் குறைப்பு" என பல செய்திகள் வந்து கொண்டே தன இருக்கின்றன.
இந்த கொரோனா வைரஸ் பிரச்சனையால், சாமானிய மக்கள் & ஊழியர்கள் அதிகம் பாதிக்கப்பட்ட துறைகளில் நிச்சயம் ஐடி துறைக்கும் ஒரு முக்கிய இடம் உண்டு. அந்த அளவுக்கு லே ஆஃப் பீதியில் உறைந்து இருந்தார்கள்.
இத்தனை நெகட்டிவ் செய்திகளுக்கு மத்தியிலும், தற்போது விப்ரோ ஒரு நல்ல காரியத்தைச் செய்து இருக்கிறது. அது என்ன நல்ல காரியம்..? வாருங்கள் பார்ப்போம்.
தனி விமானம்
சமீபத்தில் தான், இன்ஃபோசிஸ் மற்றும் டெக் மஹிந்திரா போன்ற இந்தியாவின் முன்னனி ஐடி கம்பெனிகள், வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தங்கள் ஊழியர்களை இந்தியா அழைத்து வர உதவியதாகச் செய்திகளைப் படித்தோம். அதே போல தற்போது, விப்ரோ ஐடி கம்பெனியும் ஒரு நெகிழ வைக்கும் சம்பவத்தைச் செய்து இருக்கிறது.
விப்ரோ தனி விமானம்
விப்ரோ நிறுவனம், ஐக்கிய அமெரிக்க நாட்டில் சிக்கி இருந்த, தன் ஊழியர்களை மீட்டு தனி விமானம் ஏற்பாடு செய்து அழைத்து வந்து இருக்கிறார்களாம். அதே போல இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் இருக்கும் விப்ரோ ஊழியர்களையும் இந்தியா அழைத்து வர ஏற்பாடு செய்து கொண்டு இருக்கிறார்களாம்.
விப்ரோ தரப்பு
ஊழியர்களின் பாதுகாப்பு, உடல் நலம் மற்றும் அவர்களின் நலனுக்கு விப்ரோ நிறுவனத்தில் எப்போதும் அதிக முக்கியத்துவம் கொடுப்போம். இந்த வாரத்தில், அமெரிக்காவில் வேலை செய்து கொண்டிருக்கும் விப்ரோ நிறுவன ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களை, தனி விமானம் மூலம் இந்தியா அழைத்து வந்து இருக்கிறோம் என விப்ரோ தரப்பில் இருந்து சொல்லி இருக்கிறார்கள்.
இங்கிலாந்து ஊழியர்கள்
அமெரிக்காவில் இருந்து ஊழியர்களை, இந்தியா அழைத்து வந்தது போல, இங்கிலாந்தில் இருக்கும் விப்ரோ ஊழியர்களை, மத்திய அரசின் வந்தே பாரத் திட்டம் வழியாக இந்தியாவுக்கு அழைத்து வந்து இருக்கிறார்களாம். விசா காலம் முடிந்தவர்கள் & விசா காலம் முடியும் தருவாயில் இருப்பவர்களும் இதில் அடக்கமாம். இந்த மாத இறுதியில், ஆஸ்திரேலியாவுக்கு தனி விமானத்தை ஏற்பாடு செய்ய இருக்கிறார்களாம்.
பெரிய சந்தை
உலகிலேயே அமெரிக்கா தான், இந்திய ஐடி கம்பெனிகளின் மிகப் பெரிய சந்தையாக இருக்கிறது. இந்திய ஐடி நிறுவனங்களின் கணிசமான வருவாயும், அமெரிக்காவில் இருந்து தான் வந்து கொண்டு இருக்கிறது. ஜூன் 2020 காலாண்டில், விப்ரோ நிறுவனத்தின் ஒட்டு மொத்த வருவாயில் 59 சதவிகித வருவாய் அமெரிக்காவில் இருந்து மட்டும் வந்து இருக்கிறது.
விமான சேவைகள்
கொரோனா வைரஸ் காரணத்தால், பல நாடுகளிலும் இன்னும், விமான சேவைகள் சீரடையவில்லை. அதே போலத் தான் அமெரிக்காவிலும் விமான சேவைகள் இன்னும் சரியாகவில்லை. எனவே தான் ஐடி கம்பெனிகள் தனி விமானங்களை ஏற்பாடு செய்து தங்கள் ஊழியர்களை மீட்க வேண்டி இருக்கிறது. இருப்பினும் இதை துணிந்து செய்து, தங்கள் ஊழியர்களை மீட்கும் விப்ரோ போன்ற அனைத்து ஐடி கம்பெனிகளுக்கும் நம் வாழ்த்துக்கள்.