இந்தியாவின் 4வது பெரிய ஐடி சேவை நிறுவனமாக இருக்கும் விப்ரோ கடந்த சில மாதங்களாகவே பல்வேறு சர்ச்சையில் மாட்டிக்கொண்டு வருகிறது.
முதலில் வேரியபிள் பே கட், மூன்லைட்டிங் காரணமாக 300 ஊழியர்கள் பணிநீக்கம் ஆகிய அறிவிப்புகளுக்கு மத்தியில் தற்போது விப்ரோ அதிகப்படியான ஐடி ஊழியர்களுக்கு வேலைவாய்ப்புகளை அளித்துவிட்டுப் பணி நியமன கடிதத்தை அனுப்பாமல் உள்ளது.
விப்ரோ நிறுவனத்தின் செயலால் பல ஐடி ஊழியர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
விப்ரோ நிறுவனம்
விப்ரோ நிறுவனம் வர்த்தக விரிவாக்கத்திற்காக ஐடி ஊழியர்களை அதிகளவில் பணியில் சேர்த்தது, ஆனால் அக்டோபர் 2021ல் தேர்வு செய்யப்பட்ட பல ஐடி ஊழியர்கள் இன்னும் ஆன்போர்டு செய்யப்படவில்லை எனப் பல ஐடி ஊழியர்கள் புலம்பி வருகின்றனர். ஆன்போர்டு என்பது தேர்வு செய்யப்பட்ட ஊழியரை நிறுவனத்தில் அதிகாரப்பூர்வமாகச் சேர்ப்பது.
ஐடி ஊழியர்கள்
இதன் மூலம் விப்ரோ தேர்வு செய்யப்பட்ட பல ஐடி ஊழியர்கள் பணியில் சேர்வதற்காகத் தாங்கள் ஏற்கனவே பணியாற்றி வந்த நிறுவனத்தில் பணியை ராஜினாமா செய்துள்ளனர். தற்போது விப்ரோ ஆன்போர்டிங் செய்யாத காரணத்தால் 11 மாதமாகச் சம்பளம் இல்லாமல் தவிப்பதாகப் பல ஐடி ஊழியர்கள் பிஸ்னஸ் டூடே-க்கு தெரிவித்துள்ளனர்.
காக்னிசென்ட்
இதில் ஒரு ஐடி ஊழியர் தான் விப்ரோ நிறுவனத்தில் சேர்வதற்காகக் காக்னிசென்ட் நிறுவனத்தில் பணியாற்றி வந்த வேலையை ராஜினாமா செய்ததாகவும், தற்போது ஆன்போர்டு செய்யப்படாத காரணத்தால் வேலை இல்லாமலும், சம்பளம் இல்லாமல் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விப்ரோ HR பிரிவு அதிகாரிகள் எவ்விதமான பதிலையும் அளிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
ஸ்டார்ட்அப்
இதேபோல் மற்றொருவர் ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் நல்ல வேலையில் இருந்ததாகவும், பெரிய நிறுவனத்தில் பணியாற்ற வேண்டும் என்பதற்காக விப்ரோ நிறுவன பணியை ஏற்று ஸ்டார்ட்அப் வேலையை விட்டதாகக் கூறியுள்ளார். 6 மாதம் ஆகியும் இன்னும் ஆன்போர்டிங் செய்யாமல் விப்ரோ இருப்பதாகவும், அனைத்து கேள்விகளும் விப்ரோ நிறுவனத்தின் ஆட்டோமேட்டெட் மெயில் தான் வருகிறது எனத் தெரிவித்துள்ளார்.
விப்ரோ விளக்கம்
இப்படி அனுபவம் வாய்ந்த ஊழியர்கள் முதல் பிரஷ்ஷர்கள் வரையில் பலரை பணி அணையைக் கொடுத்துவிட்டுப் பணியில் சேர்க்காமல் ஊழியர்களைத் தவிக்க வைத்துள்ளது விப்ரோ. இதற்கான விளக்கத்தை இதுவரையில் விப்ரோ வெளியிடவில்லை பாதிக்கப்பட்ட ஐடி ஊழியர்கள் மத்தியில் வேதனை அளிக்கிறது.