இந்தியாவின் 4வது பெரிய ஐடி சேவை நிறுவனமான விப்ரோ கடந்த 3 மாதமாகப் பல்வேறு சர்ச்சையில் சிக்கி வருகிறது.
இந்த நிலையில் விப்ரோ ஊழியர்களுக்கு வீக்எண்ட்-ல் டக்கரான அறிவிப்பை வெளியிட்டு மனம் குளிர வைத்துள்ளது. விப்ரோ நிறுவன ஊழியர்களுக்கு மார்ச் 31 உடன் முடிந்த நிதியாண்டுக்கான சம்பள உயர்வைச் செப்டம்பர் மாத சம்பளத்தில் அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
இதேபோல் அனைத்து ஊழியர்களுக்கும் இந்தச் சம்பள உயர்வை அளிக்காமல் வெறும் 96 சதவீத பேருக்கு மட்டுமே அளித்துள்ளது விப்ரோ.
விப்ரோ ஊழியர்கள்
கடந்த நிதியாண்டுக்கான சம்பள உயர்வு அளிப்பது குறித்து விப்ரோ ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் இந்நிறுவனத்தின் தலைமை மனித வள பிரிவு அதிகாரி சௌரப் கோவில், கடந்த காலாண்டில் அதிகப்படியான நிதியியல் பிரச்சனைகள் இருந்தாலும், அதிகளவிலான ஊழியர்களுக்குச் சம்பள உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
சம்பள உயர்வு
மேலும் அடுத்த ஒரு வாரத்தில் உங்கள் மேனேஜர்-யிடம் இருந்து சம்பள உயர்வுக்கான கடிதம் வரும் என்றும். 96 சதவீத விப்ரோ ஊழியர்களுக்குச் சம்பள உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது என்றும் சௌரப் கோவில் இந்நிறுவன ஊழியர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
விடுமுறை
96 சதவீத ஊழியர்களுக்குச் சம்பள உயர்வு அளிக்கப்பட்ட நிலையில் 4 சதவீத ஊழியர்கள் விடுமுறையில் இருப்பதால் சம்பள உயர்வு அளிக்கப்படவில்லை என்றும் விளக்கம் கொடுக்கப்பட்டு உள்ளது.
தாமதம்
இதேபோல் விப்ரோ நிறுவனத்தில் C1 பேண்டுக்கு மேல் இருக்கும் அனைத்து ஊழியர்களுக்கும் கடந்த ஆண்டு ஜூன் மாதமே சம்பள உயர்வு அளிக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டுச் செப்டம்பர் மாதம் தான் அளிக்கப்படுகிறது.
சர்ச்சை
விப்ரோ நிறுவனம் கடந்த காலாண்டில் மிட் மற்றும் சீனியர் பிரிவில் இருக்கும் ஐடி ஊழியர்களுக்கு எவ்விதமான வேரியபிள் பே தொகையும் அளிக்க முடியாத நிலையில் இருப்பதாக அறிவித்தது. இதைத் தொடர்ந்து 300 ஊழியர்கள் மூன்லைட்டிங் காரணமாகப் பணிநீக்கம் செய்தது என அடுத்தடுத்து விப்ரோ ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது.


Click it and Unblock the Notifications