இந்தியாவின் முன்னணி வர்த்தகக் குழுமங்கள் அனைத்தும் தனது வர்த்தகத்தைப் பல புதிய துறையில் விரிவாக்கம் செய்வதில் குறியாக உள்ளது.
இந்த நிலையில் நாட்டின் 4வது பெரிய ஐடி சேவை நிறுவனமாக இருக்கும் விப்ரோ குழுமத்தின் கிளை நிறுவனமான விப்ரோ கன்ஸ்யூமர் கேர் மற்றும் லைட்டிங் நிறுவனம் உணவு பொருட்கள் விற்பனை துறையில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யக் கேரளாவின் பிரபலமான Nirapara என்னும் நிறுவனத்தை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது.
சமையல் எண்ணெய் விற்பனையை அடிப்படையாக வைத்துத் துவங்கப்பட்ட விப்ரோ குழுமம் தற்போது ஐடி சேவை நிறுவனமாக உயர்ந்தாலும் பல துறையில் தொடர்ந்து இயங்கி வருகிறது.
விப்ரோ
விப்ரோ குழுமம் சில மாதங்களுக்கு முன்பு இந்திய சந்தையில் உணவு பொருட்கள் விற்பனை துறையில் இறங்க திட்டமிட்டு வருவதாக அறிவித்தது. இந்த முயற்சியின் கீழ் விப்ரோ ஸ்னாக்ஸ், மசாலா பொருட்கள், ரெடி டூ குக் உணவு பொருட்களை விற்க முடிவு செய்தது.
விப்ரோ கன்ஸ்யூமர் கேர் மற்றும் லைட்டிங்
இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக விப்ரோ குழுமத்தின் கிளை நிறுவனமான விப்ரோ கன்ஸ்யூமர் கேர் மற்றும் லைட்டிங் நிறுவனம் உணவுப் பொருட்கள் விற்பனை துறையில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யக் கேரளாவின் பிரபலமான Nirapara என்னும் நிறுவனத்தை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது.
நிராபரா நிறுவனம்
நிராபரா நிறுவனம் என்பது நாங்கள் கைப்பற்றும் 13வது நிறுவனமாகும், மசாலாப் பொருட்கள் மற்றும் ரெடி டூ குக் பிரிவில் எங்களுக்கு ஒரு தெளிவான இடம் இந்த நிறுவனத்தின் மூலம் கிடைத்துள்ளது.
ரீடைல் உணவு பொருட்கள்
இந்தியாவில் வேகமாக வளரும் துறையாக இருக்கும் ரீடைல் உணவு பொருட்கள் விற்பனை சந்தையில் நுழைவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நிராபரா நிறுவனத்தின் 63 சதவீத வர்த்தகம் கேரளாவில் இருந்தும், 8% இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்தும், 29% சர்வதேச சந்தைகளில் இருக்கிறது.
வளைகுடா நாடுகள்
இதில் வெளிநாட்டு வர்த்தகப் பிரிவை பார்க்கும் போதும் பெரும்பாலும் வளைகுடா நாடுகளில் இருந்து நிராபரா தனது வர்த்தகத்தைப் பெற்று வருகிறது என்று விப்ரோ கன்ஸ்யூமர் கேர் மற்றும் லைட்டிங் நிறுவனத்தின் CEO மற்றும் விப்ரோ எண்டர்பிரைசஸ் நிர்வாக இயக்குனர் வினீத் அகர்வால் கூறியுள்ளார்.
புட்டு பொடி
1976 ஆம் ஆண்டுத் தொடங்கப்பட்ட நிராபரா மசாலாப் பொருட்கள் உடன் ரெடிமேட் புட்டு பொடிக்குப் பெயர்போனது. நிராபரா பிராண்டின் பெரும்பாலான பொருட்கள் கேரள மக்களுக்கானது. கேரள மக்கள் தினமும் வீட்டில் பயன்படுத்தக்கூடிய பொருட்களை நிராபரா தயாரித்து விற்பனை செய்கிறது.
முக்கியத் தயாரிப்புகள்
நிராபரா பிராண்டில் மசாலா பொருட்கள், அப்பம், இடியாப்பம், தோசை, இட்லி போன்றவற்றுக்கான அரிசி பொடிகள் விற்பனை செய்து வருகிறது.
ஈஷா அம்பானி
சமீபத்தில் ரிலையன்ஸ் ரீடைல் பிரிவின் தலைவரான ஈஷா அம்பானி இந்தியாவில் ஏற்கனவே பல FMCG பிராண்டுகள் இருந்தும் இத்துறையில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காகப் பெரிய அளவிலான நம்பிக்கை உடன் Independence என்ற பிராண்ட்-ஐ அறிமுகம் செய்தார்.
ரிலையன்ஸ் ரீடைல்
ரிலையன்ஸ் ரீடைல் Independence பிராண்ட் கீழ் மக்களுக்குத் தினசரி தேவைப்படும் உணவு பொருட்கள் முதல் பிராசஸ் செய்யப்பட்ட உணவு பொருட்களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.இந்தியாவில் FMCG துறை மிகப் பெரியது மட்டும் அல்லாமல் அனைத்துத் தரப்பு மக்களையும் உள்ளடக்கியது.