இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ, லண்டனில் 22 மில்லியன் டாலரினை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
இந்த முதலீட்டினை அடுத்த நான்கு ஆண்டுகளில் முதலீடு செய்யப்போவதாகவும் தெரிவித்துள்ளது. இந்த முதலீட்டின் மூலம் 20,000 சதுர அடியில், லண்டனில் உள்ள ஹோல்போர்னில் ஒரு கண்டுபிடிப்பு மையத்தினை (innovation centre) அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
நிறுவப்படும் இந்த மையம் இங்கிலாந்தில் விப்ரோவின் முதன்மை மையாக செயல்படும் என்றும் தெரிவித்துள்ளது, மேலும் இந்த மையம் உலகளவில் நிறுவனங்களுக்கு தொழில்நுட்ப நிபுணத்துவத்தையும் வழங்கும் என தெரிவித்துள்ளது.
டிஜிட்டல் சேவைகள்
மேலும் இந்த மையம் வளர்ந்து வரும் டிஜிட்டல் தேவைகளுக்கு ஏற்ப டிஜிட்டல் சேவை, சைபர் செக்யூரிட்டி, கிளவுட் சேவை என பல சேவைகளை தேவைப்படும் நிறுவனங்களுக்கும், இனி புதியதாய் வரவிருக்கும் நிறுவனங்களுக்கும் வழங்கும். இது ஐரோப்பாவினை மிகப்பெரிய தொழில்நுட்ப சந்தைகளில் ஒன்றாக மாற வழிவகுக்கும் என்றும் விப்ரோ தனது அறிக்கையில் கூறியுள்ளது.
எத்தனை பேர் பணியமர்த்தல்
இந்தியாவில் இந்த ஆண்டு விப்ரோவின் 75வது ஆண்டு விழாவினையும், இங்கிலாந்தில் 25வது ஆண்டு விழாவினையும் கண்டுள்ளது. இப்படியொரு நிலையில் இங்கிலாந்தில் தற்போது 4,000 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அதோடு கடந்த 12 மாதங்களில் மட்டும் பெங்களுரை தளமாகக் கொண்ட இந்த நிறுவனம், 500க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணியமர்த்தியுள்ளது.
கேப்கோ கையகப்படுத்தல்
இங்கிலாந்தில் அமைக்கப்பட்டு வரும் இந்த மையம் தொடங்கப்பட்ட பின்னர், இந்த பணியமர்த்தல் இன்னும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விப்ரோ ஏற்கனவே லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் கேப்கோவினை 1.45 பில்லியன் டாலர் முதலீட்டின் மூலம் சமீபத்தில் தான் கையகப்படுத்தியது. இந்த கையகப்படுத்தல் மூலம் விப்ரோவின் யுகே ஊழியர் தொகுப்பில், மேற்கொண்டு, 1,300 ஊழியர்கள் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து விரிவாக்கம்
கேப்கோ கையகப்படுத்தலைத் தொடர்ந்து தான், தற்போது இந்த பிரமாண்ட திட்டத்தினையும் செயல்படுத்த தொடங்கியுள்ளது விப்ரோ. குறிப்பாக ஐரோப்பிய வர்த்தக விரிவாக்கத்தினை நோக்கி, கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து விரிவாக்கத்தினை செயல்படுத்தி வருகின்றது.