இந்திய ஐடி நிறுவனங்கள் பலவும் கடந்த சில காலாண்டுகளாகவே அட்ரிஷன் அதிகரிப்பால் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றன. இந்த அட்ரிஷன் விகிதத்தினை குறைக்க ஐடி நிறுவனங்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
அந்த வகையில் நாட்டின் முன்னணி ஐடி நிறுவனமான விப்ரோ, தனது ஊழியர்களை தக்க வைத்துக் கொள்வதற்காக சூப்பரான திட்டத்தினை கொண்டுள்ளது.
சம்பள உயர்வு
அது விப்ரோ ஊழியர்களுக்கு ஒவ்வொரு காலாண்டிலும் பதவி உயர்வை வழங்க திட்டமிட்டுள்ளதாக பல அறிக்கைகளும் தெரிவித்துள்ளன. விப்ரோ நிறுவனம் செப்டம்பரில் அதன் ஊழியர்களில் பெரும்பாலானவர்களுக்கு 10% சம்பள உயர்வை வழங்க திட்டமிட்டுள்ளது. இதே சிறப்பான செயல்திறன் மிக்கவர்களுக்கு 15% மேலாகவும் சம்பள உயர்வினை வழங்க திட்டமிட்டுள்ளது.
இதுவே முதல் முறை
இந்த சம்பள உயர்வானது நடுத்தர நிர்வாக நிலை வரையில் பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது ஊழியர்கள் வெளியேறுவதை தடுக்கவும், அதிக இளைஞர்களை ஈர்க்கவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. விப்ரோ இதுபோன்ற நடவடிக்கைகளை எடுப்பது முதல் முறையாகும்.
பணியமர்த்தலும் அதிகரிப்பு
கொரோனா பெருந்தொற்றினை தொடர்ந்து ஐடி துறையில் தேவையானது மிகப்பெரிய அளவில் அதிகரித்து வரும் நிலையில், கடந்த சில காலாண்டுகளாக அதிக பணியமர்த்தலும் தொடர்ந்து வருகின்றது.
அதேசமயம் ஊழியர்கள் வெளியேறும் விகிதமும் தொடர்ந்து குறைவதாக இல்லை. இதற்கிடையில் தான் விப்ரோ உள்ளிட்ட பல்வேறு ஐடி நிறுவனங்களும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
புரோமோஷன் & சம்பள உயர்வு
இப்படி பல்வேறு சவால்களுக்கு மத்தியில் தான் பிரச்சனைகளை சமாளிக்க விப்ரோ செப்டம்பரில் சம்பள உயர்வை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. ஜூலையில் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு மிகப்பெரிய அளவிலான புரோமோஷன்கள், டீமினை வழி நடத்திய லீடர்களுக்கும் உயர்வு வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிறுவனம் உறுதி
இந்த நிலையில் அதனை உறுதிபடுத்தும் விதமாக விப்ரோவின் செய்தித்தொடர்பாளர், இந்த திட்டங்களை உறுதிப்படுத்தியுள்ளார். நிறுவனம் ஜூலையில் தொடங்கி பல புரோமோஷன்கள் கொடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். மொத்தத்தில் விப்ரோ ஊழியர்களுக்கு இது கொண்டாட்டமான காலம் தான்.
அட்ரிஷன் விகிதம் அதிகரிக்கலாம்
தொடர்ந்து அட்ரிஷன் விகிதமானது அதிகரித்து வரும் நிலையில், நடப்பு காலாண்டிலும் 20% மேலாக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த காலாண்டிலேயே விப்ரோவில் 23.8% அட்ரிஷன் விகிதம் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதே டிசிஎஸ்-ல் 19.7% ஆகவும் இருந்தது. விப்ரோ ஜூலை 20 அன்று அதன் காலாண்டு அறிக்கையினை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வருவாய் குறையலாம்
விப்ரோவின் இந்த முடிவானது ஊழியர்களை தக்க வைத்துக் கொள்ள எடுக்கப்பட்ட முடிவாக இருந்தாலும், இது அதன் மார்ஜின் விகிதத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது அதன் வருவாயில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.