இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான விப்ரோ நிறுவனம், 9,500 கோடி ரூபாய் மதிப்பிலான பைபேக் திட்டத்தினை வரும் டிசம்பர் 29 முதல் தொடங்க உள்ளது.
இது ஜனவரி 11, 2021 அன்று முடிவடைய உள்ள நிலையில் இது முதலீட்டாளர்களுக்கு நல்ல விஷயமாகவே பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் தான் டிசிஎஸ் அதன் பங்குதாரர்களுக்கு மூலதனத்தைத் திருப்பித் தர ஏற்கனவே முடிவு செய்த நிலையில், 16,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை, ஒரு பங்குக்கு 3000 ரூபாய் என்ற வகையில் 5.33,33,333 கோடி பங்குகளைத் திரும்ப வாங்கத் தீர்மானித்தது.
விப்ரோவின் அதிரடி திட்டம்
விப்ரோவின் இந்த அதிரடி திட்டத்திற்கு கடந்த மாதம் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், 23.75 லட்சம் ஈக்விட்டி பங்குகளை திரும்ப வாங்க உள்ளதாகவும், இது ஒரு பங்கிற்கு 400 ரூபாய் என்ற விலையில் வாங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 9,500 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை பங்குதாரர்களுக்கு திரும்ப செலுத்த உள்ளதாகவும் பங்கு சந்தைக்கு தாக்கல் செய்த அறிக்கையில் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
எப்போது தொடக்கம்
இது குறித்தான அறிக்கையை பங்கு சந்தையிடம் இருந்து டிசம்பர் 21, 2020ல் பெற்ற நிலையில், டிசம்பர் 29 அன்று இந்த திட்டம் தொடங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, இதற்கு கடைசி தேதி ஜனவரி 11, 2021 ஆகும். இதன் போட்டியாளரான டிசிஎஸ் சமீபத்தில் தான் இந்த பைபேக் திட்டத்தினை அமல்படுத்திய நிலையில், ஜனவரி 1,2020 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டிசிஎஸ் பைபேக் திட்டம்
டிசிஎஸ் நிறுவனம் கடந்த டிசம்பர் 18ம் தேதி இந்த பைபேக் திட்டத்தினை தொடங்கியது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் இரண்டாவது பெரிய ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் தனது வணிக வளர்ச்சிக்காக தொழில்நுட்ப பரிமாண வளர்ச்சி சுழற்சியைக் கையில் எடுக்கப்போவதாக அறிவித்த நிலையில், இந்த பைபேக் திட்டத்தினை அறிவித்தது.
செம ஏற்றத்தில் விப்ரோ பங்கு
உண்மையில் விப்ரோவின் பங்குதாரர்களுக்கு இது நல்ல விஷயமே. இதற்கிடையில் இன்றைய பங்கு சந்தையில் விப்ரோவின் பங்கு விலையானது 5.86% அதிகரித்து, 385.55 ரூபாயாக வர்த்தகமாகி முடிவடைந்துள்ளது. இதே மற்றொரு ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்ஸி நிறுவனத்தின் பங்கு விலையானது 1.26% அதிகரித்து 2,908.75 ரூபாயாக முடிவடைந்துள்ளது.