இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களான டிசிஎஸ், இண்போசிஸ் தனது காலாண்டு முடிவுகளை வெளியிட்ட பின்பும் கடுமையான சரிவைப் பங்குச்சந்தையில் எதிர்கொண்ட நிலையில், இன்று நாட்டின் 3வது பெரிய ஐடி நிறுவனமான விப்ரோ தனது மார்ச் காலாண்டு முடிவுகளை வெளியிட்டு உள்ளது.
சந்தை கணிப்புகள் சிலவற்றைப் பூர்த்தி செய்தாலும் மும்பை பங்குச்சந்தையில் விப்ரோ பங்குகள் இன்று 2.59 சதவீதம் சரிந்து 509 ரூபாயாக உள்ளது.
விப்ரோ
இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோ வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள ஜனவரி - மார்ச் 2022 உடன் முடிவடைந்த காலாண்டு முடிவுகளில் நிகர லாபமாக 3,087.3 கோடி ரூபாய் பெற்றுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ரூ.2,972.3 கோடி ரூபாயாக இருந்த நிலையில் தற்போது 3.87 சதவீதம் உயர்வைப் பதிவு செய்துள்ளது.
வருவாய்
இந்தக் காலாண்டில் விப்ரோ நிறுவனத்தின் ஆப்ரேஷன்ஸ் மூலம் கிடைத்துள்ள வருவாய் ரூ.20,860 கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டின் ரூ.16,245.4 கோடியில் இருந்தது 28.40 சதவீதம் அதிகமாகும். இதுவே டாலர் மதிப்பில் கணக்கிட்டால் 3.1 சதவீத உயர்வில் 2721.7 மில்லியன் டாலராக உள்ளது.
டாலர் வருவாய்
ஜூன் 2022 காலாண்டில் விப்ரோ தனது ஐடி சேவைகள் வணிகத்தின் வருவாய் $2,748 மில்லியன் முதல் $2,803 மில்லியன் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கிறது. இது 1 சதவிகிதம் முதல் 3 சதவிகிதம் வரை தொடர்ச்சியான வளர்ச்சியைக் காட்டுகிறது
ஊழியர்கள் வெளியேற்ற விகிதம்
சக ஐடி நிறுவனங்களைப் போலவே விப்ரோ நிறுவனத்தின் ஊழியர்கள் வெளியேற்ற விகிதம் 20 சதவீத அளவீட்டை கடந்து 23.8 சதவிகிதமாக உள்ளது. டாப் 4 பெரிய ஐடி நிறுவனங்களில் ஊழியர்கள் வெளியேற்ற விகிதம் அதிகமாக இருக்கும் நிலையில் தொடர்ந்து அதிகப்படியான பிரஷ்ஷர்களைப் பெற்று வருகிறது.
தியரி டெலாபோர்ட்
மார்ச் உடன் முடிந்த 2022ஆம் நிதியாண்டில் மட்டும் சுமார் 10.4 பில்லியன் டாலர் வருவாய் பெற்று சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளோம. மேலும் ஆண்டுக்கு ஆண்டு 27 சதவிகிதம் வளர்ச்சியைப் பெற்றுள்ளோம் என விப்ரோவின் சிஇஓ மற்றும் நிர்வாக இயக்குனர் தியரி டெலாபோர்ட் கூறினார்.