டெல்லி: சர்வதேச அளவிலான ஐடி துறையில் உள்ள ஜாம்பவான்கள் கூட, தங்களது அலுவலகங்களை இந்தியாவில் நிறுவியுள்ளன. இந்தியாவில் தங்களது வணிகத்தினை விரிவாக்கம் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றன. இதன் மூலம் இந்திய ஊழியர்களின் திறனை பயன்படுத்திக் கொள்ள விரும்புகின்றன.
இப்படி இருக்கும் சூழலில் இந்திய நிறுவனங்கள் பலவும் மூன்லைட்டிங் -க்கு எதிராக களமிறங்கத் தொடங்கியுள்ளன.
இது வரையில் எச்சரிக்கை விடுத்து வந்த நிலையில், இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான விப்ரோ மூன்லைட்டிங்கினை காரணம் காட்டி 300 பேரை பணி நீக்கம் செய்தது.
ஊழியர்கள் அதிருப்தி
இது ஐடி ஊழியர்கள் மத்தியில் பெரும் சலசலப்பினை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இது குறித்து விப்ரோவின் தலைவர் ரிஷாத் பிரேம்ஜி, ஊழியர்கள் நிறுவனத்திற்கு உண்மையாக இருக்க வேண்டும். இல்லையெனில் இங்கிருந்து செல்ல வேண்டும். இது வெரி சிம்பிள் லாஜிக் என தனது ட்விட்டர் பக்கத்தில் வெளிப்படையாக கூறியிருந்தார். இது மேற்கொண்டு ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியினை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்ப்பு
இந்த நிலையில் ரிஷாத் பிரேம்ஜிக்கு எதிராக எதிர் குரல்கள் சமூக வலைதளங்களில் எழ ஆரம்பித்துள்ளன. சில ஊழியர்கள் யாரும் நிறுவனத்தை ஏமாற்ற நினைக்கவில்லை. அவரவருக்கு கிடைத்த நேரத்தில் கூடுதல் வருமானத்திற்காக பணிபுரிகின்றனர். இதில் ஏமாற்றும் எண்ணம் இல்லை. இது நிறுவனத்தினை ஏமாற்றும் செயலும் இல்லை என வாதிடுகின்றனர்.
ரிஷாத் பிரேம்ஜி-க்கு எதிராக குரல்
மொத்தத்தில் ஒட்டுமொத்த ஐடி ஊழியர்களும் ரிஷாத் பிரேம்ஜிக்கு எதிராக குரல் கொடுக்க தயாராகி வருகின்றனர் எனலாம். குறிப்பாக பிரேம்ஜியின் ட்வீட்டுக்கு பல எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றது.
மூன்லைட்டிங் வழக்கமான பணியினை தாண்டி இரண்டாம் பணியினை மேற்கொள்வது. பொதுவாக வேலைகள் காலை 9 மணி மதல் 5 வரையில் இருக்கும் நிலையில், இரண்டாவது பணிகள் இரவில் இருக்கும் என்பதால் இது மூன் லைட்டிங் என்றும் கூறப்படுகின்றது.
ஐடி துறையில் மூன்லைட்டிங் அதிகரிப்பு
பொதுவாக குறைந்த சம்பளம் வாங்குபவர்கள், கூடுதல் வருமானத்திற்காக இரண்டாம் பணியினை செய்வது வழக்கம். குறிப்பாக கொரோனாவின் வருகைக்கு பிறகு ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிவதால், ஐடி துறையில் இதுபோன்ற செயல்கள் அதிகமாகியுள்ளன. இதே தற்போதைய விவாததிற்கும் காரணமாக அமைந்துள்ளது.
இன்ஃபோசிஸ் கருத்து என்ன?
வார இறுதியில் தங்களுக்கு கிடைக்கும் நேரத்தில் ஊழியர்கள் பணிபுரியலாம். ஆனால் போட்டியாளர்களுக்கு ரகசியமாக பணிபுரிவது வேறு. அப்படி பணிபுரிபவர்களுக்கு இங்கு இடமில்லை.
இதே இன்ஃபோசிஸ் ஒரு அறிக்கையில் ஊழியர்கள் பல மணி நேரங்கள் பணிபுரிந்த பிறகு, தங்களுக்கு கிடைக்கும் மீதமான நேரத்தில் வேறு ஏதேனும் பணியினை செய்வதில் தவறில்லை. ஆனால் நிறுவனத்தின் சொத்தினை சட்டவிரோதமாக செய்வது தவறு. இதனை நாங்கள் கண்டிக்கிறோம்.
டெக் மகேந்திரா
இதே டெக் மகேந்திரா மூன் லைட்டிங் குறித்து நாங்கள் எதிர்க்கவில்லை. இதனை நாங்கள் ஒரு பாலிசியாகவே திருத்தம் செய்ய திட்டமிட்டுள்ளோம். எனினும் எதுவாக இருந்தாலும் எங்களுடன் ஓபன் ஆக இருங்கள் என கூறியுள்ளது.