டெல்லி: இந்தியா மட்டும் அல்ல, இன்று உலகம் முழுக்க தனது வணிகத்தினை விப்ரோ நிறுவனம் செய்து வருகின்றது. இந்த நிறுவனம் வணிகத்தில் மட்டும் அல்ல தொண்டு சேவைகள் வழங்கி வருவதிலும் மிக புகழ் பெற்றது.
இந்த நிறுவனத்தின் தலைவர் அசிம் பிரேம்ஜி, தனது அறக்கட்டளை மூலமாக பல உதவிகளை மக்களுக்கு வாரி வழங்கி வருகின்றார்.
அதிலும் இந்த கொரோனா காலத்தில் மட்டும் இந்திய மக்களுக்காக 2,000 கோடி ரூபாய்க்கும் மேலான உதவிகளை வாரி வழங்கியுள்ளது இந்த அறக்கட்டளை.
கொரோனாவால் பாதிப்பு
நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் ருத்ரதாண்டவம் ஆடிய நிலையில், மக்கள் பலரும் வேலையிழந்து, தங்களுக்கு பிடித்தமானவர்களை இழந்து, தங்களது வாழ்வாதரங்களை இழந்து தவித்து வந்தனர். இது ஒரு புறம் இப்படியெனில், மறுபுறம் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை, மருந்து பற்றாக்குறை, போதிய உள்கட்டமைப்பு வசதியின்மை என பலவும் மக்களை மேலும் வதைத்தன.
இந்தியாவுக்கு உதவி
இதற்கிடையில் பல அண்டை நாடுகளும், கார்ப்பரேட் நிறுவனங்கள், அறக்கட்டளைகள், தனி நபர்கள் என, இந்தியாவிற்கு உதவிகளை வாரி வழங்கி வந்தனர். வழக்கமாக நன்கொடை என்றாலே இந்தியாவில் பேர் போனவர் அசிம் பிரேம்ஜி. இவரின் கொடை வள்ளலை உலகமே அறிந்த ஒன்று தான்.
எவ்வளவு நன்கொடை
இவர் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்காக 2,000 கோடி ரூபாய்க்கு மேலலான உதவியினை வாரி வழங்கியுள்ளார். இது முந்தைய உதவிகளை விட இருமடங்காகும். விப்ரோவின் முன்னாள் தலைவர் அசிம் பிரேம்ஜி நிறுவிய இந்த அமைப்பானது, கொரோனா பெருந்தொற்று நோயை சமாளிக்க தங்களது நிதி உதவியை 1,125 கோடி ரூபாயில் இருந்து 2,125 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
எதற்காக இந்த நிதி
இந்த நன்கொடை அதிகரிப்பானது 10 மாநிலங்களில் தடுப்பூசியை அதிகரிக்கும் பொருட்டு அதிகரிக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் இதனை இன்னும் அதிகரிக்கும் என்று, கடந்த ஜுன் மாதம் வெளியான அறிக்கையில் கூறப்பட்டிருந்தது நினைவு கூறத்தக்கது.
பல மாநிலங்களில் உதவி
சட்டீஸ்கர், ஜார்கண்ட், கர்நாடகா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், புதுச்சேரி, தெலுங்கானா மற்றும் உத்தரகாண்டில் உள்ள 100க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் உள்ள, 15 கோடி பேருக்கும் அதிகமாக மக்களுக்கு உதவும் வகையில் இந்த அறக்கட்டளை செயல்பட்டு வருகின்றது.
மருத்துவ உபகரணங்கள் உதவி
இது தவிர பல மருத்துவ உபகரணங்கள், உள்கட்டமைப்பு வசதிகளையும் செய்து கொடுத்துள்ளது. இது தவிர இந்த அறக்கட்டளையானது, ஏற்கனவே பல மாநிலங்களில் உள்ள பொதுப் பள்ளிகளில் ஆரம்பக் கல்வியின் தரத்தை மேம்படுத்த அரசு மற்றும் ஆசிரியர்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.
கல்வி உதவி
இந்தியாவில் ஆரம்ப நிலைக் கல்வியை அளிப்பதற்காக 2001ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது தான் இந்த அறக்கட்டளை, இந்த அறக்கட்டளை மூலம் தெருவோர குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் குழந்தைகள் என பலரும் பலனடைந்துள்ளனர். மேலும் இந்த அறக்கட்டளை பெங்களூருவில் ஒரு பல்கலைக் கழகத்தையும் நடத்தி வருகின்றது.