இந்தியாவின் 4வது பெரிய ஐடி சேவை நிறுவனமாக இருக்கும் விப்ரோ வியாழக்கிழமை தனது காலாண்டு முடிவுகளை வெளியிட்டது, இக்காலாண்டில் தியரி டெலாபோர்டே தலைமையிலான நிர்வாகம் 12 சதவீத உயர்வில் சுமார் 2870 கோடி ரூபாய் லாபத்தையும், வருவாய் அளவு வருடாந்திர அடிப்படையில் 6 சதவீதம் உயர்ந்து 22,831 கோடி ரூபாயாக உள்ளது.
விப்ரோ நிர்வாகம் காலாண்டு முடிவுகளை வெளியிடும் போது தனது ஊழியர்களுக்கான சம்பளம் உயர்வு, வேரியபிள் பே தொகை குறித்து முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது. இந்த அறிவிப்பால் விப்ரோ ஊழியர்கள் மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த ஐடி ஊழியர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.. ஏன் தெரியுமா..?

விப்ரோ தனது ஊழியர்களுக்கான சம்பளத்தை 3வது காலாண்டுக்கு ஒத்திவைத்துள்ளது, அதாவது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கொடுக்கப்பட்ட சம்பள உயர்வை இந்த ஆண்டு அக்டோபர் - டிசம்பர் காலாண்டுக்கு ஒத்திவைக்க உள்ளதாக அறிவித்துள்ளது. பிற முன்னணி ஐடி சேவை நிறுவனங்கள் ஏப்ரல் மாதத்தில் இருந்து கணக்கிட்டு அரியர் உடன் சேர்த்து ஜூன், ஜூலை மாதத்தில் அளித்து வருகிறது.
விப்ரோ ஏற்கனவே தாமதமாக செப்டம்பர் மாதம் அளித்து வந்த நிலையில் தற்போது டிசம்பர் காலாண்டுக்கு ஒத்திவைத்துள்ளது. விப்ரோ நிர்வாகம் தனது லாப மார்ஜின் அளவுகளை மேம்படுத்தவும், ஊழியர்களுக்கான சம்பள செலவுகள் குறைக்கவும் முடிவு செய்து இந்த முடிவுகளை எடுத்துள்ளது.
விப்ரோ காலாண்டு முடிவுகளை வெளியிடும் கூட்டத்தில் நிறுவனத்தின் தவைமை மனித வள பிரிவு அதிகாரியான சவ்ரப் கோவில் ஊழியர்களுக்கு முதல் காலாண்டுக்கான வேரியபிள் பே 80 சதவீதம் அளிக்கப்படும், இது ஒவ்வொரு அணியின் செயல்திறன் அடிப்படையில் மாறுப்படும் என தெரிவித்தார். அதாவது அதிகப்படியாக 80 சதவீதம் அளிக்கப்படும்.
விப்ரோ நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 2,49,758 ஆக உள்ளது, மார்ச் காலாண்டை ஒப்பிடுகையில் சுமார் 8812 ஊழியர்கள் ஜூன் காலாண்டில் அதிகரித்துள்ளனர். விப்ரோ நிறுவனத்தின் அட்ரிஷன் அளவு 19.4 சதவீதத்தில் இருந்து 17.3 சதவீதமாக குறைந்துள்ளது.
சம்பள உயர்வு, வேரியபிள் பே தொகையை வழங்குவதில் விப்ரோ மட்டும் அல்லாமல் ஹெச்சிஎல், இன்போசிஸ் முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. இன்போசிஸ் ஜூலை முதல் வாரத்தில் வழங்க வேண்டிய சம்பள உயர்வை இன்னும் அறிவிக்கவில்லை.
ஹெச்சிஎல் டெக் ஜூனியர் மற்றும் நடுத்தர பிரிவு ஊழியர்களுக்கு சம்பள உயர்வை ஒரு காலாண்டுக்கு ஒத்திவைத்துள்ளது. இதேபோல் நிர்வாக பிரிவுக்கு மேல் இருக்கும் ஊழியர்களுக்கு சம்பள உயர்வுக்கான கலந்தாய்வு நடக்கவில்லை. இப்படி அடுத்தடுத்து முன்னணி நிறுவனங்கள் சம்பள உயர்வை குறைத்தும், ஒத்திவைத்தும் வரும் காரணத்தால் ஐடி ஊழியர்கள் அதிர்ச்சி உடன் சோகத்திலும் மூழ்கியுள்ளனர்.


Click it and Unblock the Notifications