இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான விப்ரோ இந்த லாக்டவுன் காலத்தில் பல மாற்றங்களை எதிர்கொண்ட நிலையில், தற்போது வர்த்தகத்தையும் வாடிக்கையாளர் எண்ணிக்கையும் விரிவாக்கம் செய்வதற்காக நிறுவனங்களைக் கைப்பற்றும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது.
கடந்த 2 வருடமாக டெக் நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ள நிலையில் அதன் மதிப்பீடும் அதிகரித்துள்ளதால் டிசிஎஸ், இன்போசிஸ் நிறுவனங்களை அடுத்த சில காலாண்டுகளுக்குக் கைப்பற்ற வேண்டாம் என முடிவு செய்துள்ள நிலையில் விப்ரோ வாய்ப்பை சரியான நேரத்தில் பயன்படுத்திப் போட்டிகள் குறைவாக இருக்கும் போதே லட்டு மாதிரி ஒரு அமெரிக்க நிறுவனத்தைக் கைப்பற்றியுள்ளது.
விப்ரோ
இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வதற்காக, குறிப்பாகத் தற்போது சந்தையில் வேகமாக வளர்ந்து வரும் சைபர்செக்யூரிட்டி சேவை பிரிவில் சிறந்து விளங்கும் Edgile என்னும் அமெரிக்க நிறுவனத்தைக் கைப்பற்றியுள்ளது.
சைபர்செக்யூரிட்டி
Edgile நிறுவனம் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு 2001 சைபர்செக்யூரிட்டி மற்றும் ரிஸ் கன்சல்டிங் சேவைகளை அளித்து வருகிறது. Edgile நிறுவனம் சுமார் 182 ஊழியர்கள் உடன் 44 மில்லியன் டாலர் அளவிலான வருமானத்தை ஈட்டும் வர்த்தகத்தைக் கொண்டு உள்ளது.
230 மில்லியன் டாலர் டீல்
விப்ரோ ஏற்கனவே இருக்கும் வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் சேவையும், புதிய வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையைச் சைபர் செக்யூரிட்டி பிரிவில் அதிகரிக்க வேண்டும் என்பதற்காக 230 மில்லியன் டாலருக்கு Edgile நிறுவனத்தைக் கைப்பற்றியுள்ளது.
லாக்டவுன் காலம்
இந்திய ஐடி நிறுவனங்கள் லாக்டவுன் காலத்தில் எப்படி ஊழியர்களை வீட்டில் இருந்துகொண்டு வேலை வாங்கப்போகிறோம் என விழித்துக்கொண்டு இருக்கையில் விப்ரோ நிறுவனம் தலைமை அதிகாரியை மாற்றி அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தது.
தியரி டெலாபோர்ட்
விப்ரோ நிறுவனத்தின் சிஇஓவாக இருந்த அபிதாலி நீமுச்வாலா இப்பதவியை விட்டு விலகிய நிலையில் ரிஷாத் பிரேம்ஜி தலைமையிலான தியரி டெலாபோர்ட்-வை சிஇஓவாக நியமித்து அசத்தியது.
சிறப்பான வளர்ச்சி
தியரி டெலாபோர்ட் நியமனத்திற்கு விப்ரோ நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாகத்தில் பல மாற்றங்கள் நடந்தது அனைவருக்கும் தெரியும், ஆனாலும் தியரி டெலாபோர்ட் வந்த சில மாதங்களிலேயே இந்நிறுவனத்தின் வர்த்தகம் அதிகரிக்கத் துவங்கியதால் வெறும் 200 ரூபாய்க்கு வர்த்தகமாகி வந்த விப்ரோ பங்குகள் தற்போது 691.15 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.
விப்ரோ பங்கு மதிப்பு
இன்று Edgile நிறுவன கைப்பற்றல் செய்தியின் எதிரொலியாக விப்ரோ நிறுவனத்தின் பங்குகள் 3.78 சதவீதம் உயர்ந்து 691.15 ரூபாய் அளவீட்டைத் தொட்டு உள்ளது. 2021ஆம் ஆண்டில் மட்டும் விப்ரோ நிறுவனத்தின் பங்கு மதிப்பு சுமார் 78.09 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.