ஒரு ஊழியர் தனது வேலையை ராஜினாமா செய்கிறார் என்றால் அதற்கு பல காரணங்கள் இருக்கும் என்பது தெரிந்ததே.
சக ஊழியர்களுடன் கருத்துவேறுபாடு, மேலதிகாரியுடன் கருத்துவேறுபாடு, சம்பளம் பற்றாக்குறை உள்பட பல காரணங்கள் இருக்கும்.
இந்த நிலையில் சீனாவை சேர்ந்த பெண் ஒருவர் தனது திருமணத்திற்கு சக ஊழியர்கள் வரவில்லை என்பதற்காக தனது வேலையை ராஜினாமா செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருமண அழைப்பிதழ்
சீனாவை சேர்ந்த ஒரு பெண் தனது திருமணத்திற்காக தனது சக ஊழியர்கள் அனைவருக்கும் திருமண அழைப்பிதழ் கொடுத்துள்ளார். அவர் ஏற்கனவே சக ஊழியர்கள் அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கியதாகவும் தெரிகிறது.
தொலைபேசி மூலம் கோரிக்கை
ஒருசிலரை மட்டும் திருமணத்திற்கு அழைத்தால் மற்றவர்கள் வருத்தப்படுவார்கள் என்றும் அதன் காரணமாக அவர் அனைத்து 70 சக ஊழியர்களுக்கும் திருமண அழைப்பிதழ் கொடுத்துள்ளார். திருமணத்துக்கு 2 மாதங்களுக்கு முன்பே அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது மட்டுமன்றி அவ்வப்போது அனைவரும் திருமணத்திற்கு வர வேண்டும் என்றும் தொலைபேசி மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஒரே ஒரு சக ஊழியர்
ஆனால் திருமண நாளின்போது அவர் தனது சக ஊழியர்களில் ஒரே ஒருவர் மட்டுமே திருமணத்திற்கு வந்திருந்ததை கவனித்து அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார். 70 ஊழியர்களில் ஒரே ஒருவர் மட்டுமே திருமணத்திற்கு வந்திருப்பதால் தன்னை சக ஊழியர்கள் அவமானப்படுத்தி விட்டதாக அவர் கருதினார்.
ராஜினாமா
தனது திருமணத்திற்கு வந்திருந்த அந்த ஒருவரும் தனது வழிகாட்டி என்றும் அவரும் வேறு வழியில்லாமல் வேண்டாவெறுப்புடன் திருமணத்துக்கு வந்திருந்ததாகவும் அந்த பெண் புரிந்துகொண்டார். இதனால் அந்த பெண் ராஜினாமா என்ற அதிரடி முடிவை எடுத்துள்ளார்.
அவமதிப்பு
நான் அழைப்பு விடுத்த 70 சக ஊழியர்களும் திருமணத்திற்கு வருவார்கள் என்று உணவு தயார் செய்து வைத்திருந்ததாகவும் கிட்டத்தட்ட 65 பேர் சாப்பிடக்கூடிய உணவு வீணாகி விட்டது என்றும் அந்த பெண் கூறியுள்ளார். தன்னுடைய குடும்பத்தினர் முன் தனது சக ஊழியர்கள் தன்னை அவமானப்படுத்தியதாக கருதிய அந்த பெண், சக ஊழியர்கள் தனது திருமணத்திற்கு வராததால் மறுநாளே தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பி உள்ளார்.
எதிர்பார்ப்பு
நான் அழைத்த 70 ஊழியர்களில் பாதிக்கு மேல் கண்டிப்பாக வருவார்கள் என்று தான் எதிர்பார்த்ததாகவும் ஆனால் ஒரே ஒரு ஊழியர் மட்டுமே தனது திருமணத்தில் கலந்து கொண்டது தனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது என்றும் அந்த பெண் தெரிவித்துள்ளார்.
ஆச்சரியம்
சக ஊழியர்கள் திருமணத்திற்கு வரவில்லை என்ற காரணத்திற்காக ஒரு பெண் தன் வேலையை ராஜினாமா செய்திருப்பது பெரும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளதாக இந்த செய்தியை படிக்கும் பலர் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications