கட்டிப்பிடி கலாச்சாரம் என்பது மனிதர்கள் பல நூற்றாண்டுகளாகக் கடைப்பிடித்து வரும் ஒரு கலாச்சாரமாக உள்ளது.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மீது அன்பை வெளிப்படுத்த, காதலன் காதலியிடம் தனது காதலை வெளிப்படுத்த கட்டிப்பிடித்தல் என்பது ஒரு உண்மையான உணர்வாக கருதப்படுகிறது.
இந்த நிலையில் ஒரு ஆண் ஒரு பெண்ணை கட்டிப்பிடித்ததால் விலா எலும்பு உடைந்ததாகவும், அதனால் அந்த ஆண் நீதிமன்ற வழக்கை சந்திக்க நேர்ந்தது என்ற தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கட்டிப்பிடித்தல்
சீனாவை சேர்ந்த பெண் ஒருவர் தனது சக ஊழியர் தன்னை கட்டிப்பிடித்ததால் தனக்கு மூன்று விலா எலும்புகள் உடைந்ததாகவும், அதற்கு நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் வழக்கு பதிவு செய்துள்ளார். இந்த வழக்கு நீதிமன்றத்துக்கு சென்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கட்டிப்பிடித்ததால் காயம்
கடந்த 2021ஆம் ஆண்டு மே மாதம் சீனாவின் யுயாங் நகரின் ஹுனான் மாகாணத்தை சேர்ந்த பெண் ஒருவர் தான் பணிபுரியும் அலுவலகத்தில் சக பணியாளர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த ஆண் சக ஊழியர், அந்த பெண் ஊழியரை அணுகி மிகவும் இறுக்கமாக கட்டிப்பிடித்தார். இறுக்கம் அதிகமானதால் அந்த பெண் வலியால் கதறினார். இருப்பினும் அந்த ஆண் கட்டிப்பிடிப்பதை நிறுத்தவில்லை என தெரிகிறது.
வீட்டில் வைத்தியம்
அதன்பிறகு அந்த பெண் தனது முதுகிலும் மார்பிலும் வலி இருப்பதை உணர்ந்தார். இருப்பினும் அவர் மருத்துவமனை செல்லாமல் வீட்டில் சொந்தமாக வைத்தியம் செய்து கொண்டார். சூடான எண்ணையை தேய்த்து வலியை குறைக்க அவர் முயற்சி செய்தார். ஆனால் ஐந்து நாட்களுக்கு பின்னர் மார்பில் வலி மிக அதிகமானதை அடுத்து அவர் மருத்துவமனைக்கு செல்ல முடிவு செய்தார்.
விலா எலும்புகள்
மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்து எக்ஸ்ரே எடுத்து பார்த்த போது அந்த பெண்ணின் விலா எலும்பின் வலது பக்கம் 2 எலும்புகளும், இடது பக்கம் ஒரு எலும்பும் என மூன்று விலா எலும்புகள் உடைந்து இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து அந்த எலும்புகளை ஒன்று சேர்க்க மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.
மருத்துவ செலவு
இந்த சிகிச்சைக்கு அதிக செலவு ஆனது என்றும் அந்த பெண் தரப்பில் இருந்து கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி அலுவலத்திற்கு பல நாட்கள் விடுப்பு எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் வருமான இழப்பும் ஏற்பட்டது என்றும் அந்த பெண் கூறியுள்ளார்.
நஷ்ட ஈடு
மருத்துவச் செலவுகள், நர்சிங் செலவுகள் மற்றும் விடுப்பு ஏற்பட்டதால் ஏற்படும் நஷ்டம் ஆகியவை காரணமாக அந்த பெண் தன்னை கட்டிப் பிடித்தவர் மீது வழக்கு தொடர முடிவு செய்தார். ஆனால் அந்த பெண்ணை கட்டிப்பிடித்த சக ஊழியர் தன்னுடைய அரவணைப்பால் தான் காயம் ஏற்பட்டது என்பதற்கு ஆதாரம் இல்லை என்று கூறி நஷ்ட ஈடு தர மறுத்துவிட்டார்.
அதிரடி தீர்ப்பு
இந்த வழக்கு நீதிமன்றத்தில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் கட்டிப்பிடித்த ஊழியர் அந்த பெண்ணுக்கு இந்திய மதிப்பில் ரூபாய் 1.16 லட்சம் இழப்பீடு வழங்க நீதிபதி அதிரடியாக தீர்ப்பு அளித்தார். இந்த வழக்கின் தீர்ப்பு சீனாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.