முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட்டில் தேர்தலின் போது விஜய் சார்பாக முன் வைக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றும் வகையில் அறிவிப்புகள் வெளியாகுமா என தமிழ்நாட்டு மக்கள் காத்திருக்கின்றனர்.
சட்டமன்ற தேர்தலில் தவெக வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தது பெண்களின் வாக்குகள் தான். பெண்கள் வாக்குகளை ஈர்ப்பதற்காக விஜய் பல்வேறு வாக்குறுதிகளை தந்திருந்தார். மாதம் தோறும் 2500 ரூபாய் உதவி தொகை, அனைத்து பேருந்துகளிலும் இலவச பயணம் என்பன உள்ளிட்ட வாக்குறுதிதள் தான் பெருமளவில் மகளிர் வாக்குகளை தவெகவுக்கு கிடைக்க செய்தது. அந்த வகையில் தேர்தல் வாக்குறுதிகளை அரசு பட்ஜெட்டில் அறிவிப்பாக வெளியிட வேண்டும் என்பது தான் பெண்களின் எதிர்பார்ப்பு.

மகளிர் உரிமைத் தொகை : தேர்தல் வாக்குறுதியின்படி, குடும்ப தலைவிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை 2,500 ரூபாயாக உயர்த்தி வழங்குவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் நிதி ஒதுக்கீடு இந்த பட்ஜெட்டில் இடம்பெறும் என பெண்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.
இலவச சிலிண்டர்: ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 6 இலவச எல்பிஜி சிலிண்டர்கள் வழங்கப்படும் என தேர்தலுக்கு முன்பு தவெக சார்பில் வாக்குறுதி தரப்பட்டிருந்தது. இந்த திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாக வேண்டுமென பெண்கள் காத்திருக்கின்றனர்.
அண்ணன் சீர்: திருமணத்தின் போது அண்ணன் வழங்கும் சீராக முதலமைச்சர் விஜய் சார்பில் மணப்பெண்ணுக்கு 8 கிராம் தங்கம் மற்றும் பட்டுப்புடவை வழங்கும் அறிவிக்கப்பட வேண்டும் என்பது இளம்பெண்களின் கோரிக்கையாக உள்ளது.
இலவச பேருந்து பயணம்: அனைத்து அரசு பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் வகையிலான அறிவிப்புகள் வெளீயாகுமா என கோடிக்கணக்கான பெண்கள் காத்திருக்கின்றனர்.
ஏற்கனவே அமைக்கப்பட்ட சிங்கப்பெண்கள் படையை வலுப்படுத்துவது, பெண்கள் சுய தொழில் தொடங்குவதற்கு பிரத்தியேக திட்டங்களை அறிவிப்பது , பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வது போன்ற சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட வேண்டும் என்பது பெண்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
அரசு சார்பாக தாய்மாமன் சீர் திட்டம் அறிவிக்கப்பட்டு விட்டது. அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு அரசு சார்பில் ஒரு கிராம் தங்க மோதிரம் இந்த திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட உள்ளது.தவெக அரசு தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் இப்போதே திட்டமாக கொண்டு வராது என்றாலும் ஒன்றிரண்டு வாக்குறுதிகளையாவது நிறைவேற்ற வேண்டும் என பெண்கள் கோரிக்கை விடுகின்றனர்.


Click it and Unblock the Notifications

