கூகுள், அமேசான், மைக்ரோசாப்ட் மற்றும் மெட்டா உள்ளிட்ட நிறுவனங்கள் ஒரு காலத்தில் பணிபுரிய பாதுகாப்பான நிறுவனங்களாக பார்க்கப்பட்டன. ஆனால் தற்போது நிலைமையே வேறு எனலாம்.
ஆல்பாபெட் நிறுவனத்தின் கூகுள் அதன் வரலாற்றில் மிகப்பெரிய பணி நீக்கத்தினை செய்துள்ளது.
இதேபோல மைக்ரோசாப்ட் நிறுவனமும் மிகபெரிய பணி நீக்கத்தினை செய்துள்ளது. இது சுமார் 10,000 பேரை பணி நீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. மொத்ததில் அவர்கள் 50,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளனர்.
ஊழியர்கள் கவலை
மார்க் ஜூக்கர்பெர்க்கின் மெட்டா நிறுவனத்தின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்ட நிறுவனங்கள் சேர்த்து 11,000 ஊழியர்களை கடந்த ஆண்டு நவம்பரிலேயே பணி நீக்கம் செய்தது. டெக் நிறுவனங்களின் இந்த நடவடிக்கையானது, ஊழியர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.
பணி நீக்கத்திற்கு என்ன காரணம்?
மேற்கண்ட இந்த டெக் ஜாம்பவான்கள் பணி நீக்கத்திற்கு பல்வேறு காரணங்களை கூறி வருகின்றனர். இந்த பணி நீக்க நடவடிக்கைகளானது விசுவாசத்திற்கே இடமில்லை என்பது போல் உள்ளது எனலாம். குறிப்பாக கடந்த செப்டம்பர் காலாண்டில் 17 பில்லியன் டாலர் லாபத்தினை பதிவு செய்த நிலையில், மாபெரும் பணி நீக்க நடவடிக்கையினை கையில் எடுத்திருப்பது, ஊழியர்கள் மத்தியில் கடும் கோபத்தினை ஏற்படுத்தியுள்ளது.
20 ஆண்டுகளுக்கு மேல் பணி
கூகுளில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களில் பலரும் 20 ஆண்டுகள் பணிபுரிந்த ஊழியர்கள் ஆவர். இது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தினை தூண்டியுள்ளது எனலாம். நிறுவனங்கள் விசுவாசம் என்பது துளியும் இல்லாமல், செலவு குறைப்பு நடவடிக்கையில் ஊழியர்களை தூக்கி வீசுவது என்பது பெரும் அதிர்ச்சியினையே ஏற்படுத்தியுள்ளது.
இனி ஏன் அப்படி இருக்கணும்?
வால்மார்ட்டில் சாப்ட்வேர் இன்ஜினியர் ஆக 21 ஆண்டுகள் பணிபுரிந்து வரும் அங்குர் கேதர்வானி என்பவர், மைக்ரோசாப்ட்டில் 21 ஆண்டுகளும், கூகுளில் 16 ஆண்டுகள் பணிபுரிந்த ஊழியர்களும் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, நள்ளிரவில் திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆக இங்கு விசுவாசம் என்பது எங்குள்ளது? அப்படி ஒன்று உள்ளதா? இனி ஊழியர்கள் ஏன் அப்படி இருக்க வேண்டும்? இதனை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா? என தனது லிங்க்ட் இன் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
பணத்திற்காக வேலை பாருங்கள்
டேட்டா இன்ஜினியர் ஆக இருக்கும் சுராஸ் ஜி ஊழியர்கள் இனி பணத்தை பற்றி கவலைப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளார். ஒருவர் தனது வாழ்க்கையில் 20 ஆண்டுகள் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளார். ஆனால் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் எனில் விசுவாசம் எங்கே உள்ளது. இதனை விட சிறந்த நகைச்சுவை உள்ளதா? ஆக ஒரு நிறுவனம் என்பது உங்கள் குடும்பமாக முடியாது. நீங்கள் அந்த குடும்பத்தின் ஒரு அங்கமாகவும் இல்லை. ஆக நிறுவனங்களை புகழ்வதை நிறுத்துங்கள், பணத்திற்காக வேலை பாருங்கள் என கூறியுள்ளார்.
நினைத்துக் கூட பார்க்கவில்லை
வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மைக்காக கூகுள் இப்படி ஒரு முடிவினை எடுக்கும் என நாங்கள் நினைத்துக் கூட பார்க்கவில்லை. கூகுள் ஒருபோதும் அப்படி செய்யாது என நாங்கள் நினைத்தோம். ஆனால் கூகுள் நிறுவனம் அதனை செய்துவிட்டது. பல ஆண்டுகளாக பணிபுரிந்தவர்களை பணி நீக்கம் செய்தது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாக உள்ளது. இது இணையும் ஊழியர்கள் மத்தியிலும் அச்சத்தினை ஏற்படுத்தும் என கூகுளின் உயர் அதிகாரி ஒருவர் தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.