இந்தியாவின் முன்னணி கார்பரேட் நிறுவனங்கள் அனைத்தும் தங்களது ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்கு முடிவு செய்துள்ளது மட்டும் அல்லாமல் இதற்காகத் தீவிரமாக அலுவலகத்தைத் தயார் செய்து வருகிறது. நாடு முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரி மற்றும் பொழுதுபோக்கு இடங்கள் முழுமையாக இயங்க துவங்கியுள்ளது.
இதனால் அடுத்த சில வாரத்தில் தனது ஊழியர்கள் அனைவரையும் பணிக்குத் திரும்ப அழைக்க முடிவு செய்துள்ளது. குறிப்பாக ஐடி, வங்கி மற்றும் நுகர்வோர் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைத்து Work From Home-க்கு முடிவு கட்ட திட்டமிட்டுள்ளது.
முன்னணி நிறுவனங்கள்
பி&ஜி, விப்ரோ, ஹெச்டிஎப்சி, ஆக்சிஸ் வங்கி, யெஸ் வங்கி, இன்போசிஸ் ஆகிய பல முன்னணி நிறுவனங்கள் முதற்கட்டமாக ஒரு பகுதி ஊழியர்களை மட்டும் அலுவலகத்திற்கு அழைக்க முடிவு செய்துள்ளது. இதில் சில நிறுவனங்கள் அக்டோபர் மாத துவக்கத்தில் இருந்தும், மீதமுள்ள நிறுவனங்கள் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் முதல் ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்க முடிவு செய்துள்ளது.
கொரோனா தொற்று
சுமார் 1.5 வருடம் கொரோனா தொற்றுக் காரணமாக ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றி வரும் நிலையில், நிறுவனங்கள் தனது ஊழியர்கள் அனைவருக்கும் வேக்சின் அளிக்கப்பட்ட நிலையில் அலுவலகத்திற்கு அழைக்க முடிவு செய்து, அதற்கான திட்டமிடலைத் துவங்கியுள்ளது.
பண்டிகை காலம்
கொரோனாவுக்கு முந்தைய அளவில் இருந்த வர்த்தகத்தைப் பெற்றுள்ள காரணத்தால் பல நிறுவனங்கள் ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்க வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகிறது. குறிப்பாக நுகர்வோர் துறையில் இருக்கும் நிறுவனங்கள் பண்டிகை கால வர்த்தகத்திற்குத் தயாராக வேண்டும் என்பதற்காகப் பிற துறை நிறுவனங்களைக் காட்டிலும் வேகப்படுத்தி வருகிறது.
வங்கித்துறை
எல்லோரையும் விடவும் வங்கி மற்றும் நிதியியல் சேலையில் இருக்கும் நிறுவனங்கள் தான் ஊழியர்களைக் கட்டாயம் அழைக்க வேண்டும் என்ற முடிவை எடுத்துள்ளது. குறிப்பாக வங்கிகள், NBFC, பின்டெக் நிறுவனங்கள் ஆகியவை 50 சதவீத ஊழியர்களை ஏற்கனவே அலுவலகத்திற்கு அழைத்துள்ளது.
ஹெச்டிஎப்சி வங்கி
இதில் ஹெச்டிஎப்சி வங்கியில் கர்ப்பிணிப் பெண் ஊழியர்கள், 1 வயதுக்கும் குறைவாகக் குழந்தைகளை வைத்திருக்கும் பெண் ஊழியர்கள், 65 வயதுக்கும் அதிகமான ஊழியர்கள், கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பவர்கள், கொரோனா தொற்றுப் பாதிப்புப் பகுதிகளில் இருந்து வருபவர்கள் மட்டுமே வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதிக்கப்பட்டு உள்ளது என ஹெச்டிஎப்சி நிர்வாகத் தலைவர் ரேணு தெரிவித்துள்ளார். மேலும் அவர் மற்றபடி இவர்களைத் தவிர 100 சதவீத ஊழியர்கள் அலுவலகத்திற்கு வருகின்றனர்.
கோட்டாக் மஹிந்திரா, ஆக்சிஸ் வங்கி
இதேபோல் கோட்டாக் மஹிந்திராவில் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்திற்குள் 90 சதவீத ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்க முடிவு செய்துள்ளது.
மேலும் ஆக்சிஸ் வங்கியில் வேக்சின் எடுத்துக்கொண்ட ஊழியர்கள் வாரத்தில் 2 நாட்கள் அலுவலகத்திற்கு வந்து பணியாற்றி வருகிறார்கள் என இவ்வங்கி ஹெச்ஆர் பிரிவு தலைவர் ராஜ்கமல் தெரிவித்துள்ளார்.
பிற துறை
ஐடி துறை மற்றும் பிற துறை நிறுவனங்கள் வீட்டில் இருந்து ஊழியர்கள் முழுமையாகப் பணியாற்ற முடியும் என்பதால் ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைப்பதில் இருக்கும் வேகம் சற்று குறைவாக உள்ளது.
ஆனாலும் இந்த வருடத்தின் இறுதிக்குள் அனைத்துத் துறை நிறுவனங்களும் அதன் ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்க முடிவு செய்துள்ளது.