இந்திய ஐடி நிறுவனங்கள் கொரோனா தொற்று முடிந்த காரணத்தால் ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்க முடிவு செய்த நிலையில், அலுவலகத்திற்காக அழைக்கப்படும் ஊழியர்கள் அடுத்தடுத்து பணியை ராஜினாமா செய்யும் வழக்கம் தொடர்ந்தது.
ஏற்கனவே ஊழியர்கள் தட்டுப்பாடு காரணமாக மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இந்தத் திடீர் வெளியேற்றம் பல நிறுவனங்களைப் பயமுறுத்தியது.
இதனால் ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்கும் பணிகளைத் தற்காலிகமாக நிறுத்திவிட்டுத் தற்போது முன்னணி ஐடி சேவை நிறுவனங்கள் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
இன்போசிஸ்
இந்தியாவின் 2வது பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ்-ன் ஹெச்ஆர் பிரிவின் உயர் அதிகாரி கூறுகையில் சுமார் 94 சதவீதம் ஊழியர்கள் தற்போது வீட்டில் இருந்து தான் பணியாற்றி வருகிறார்கள், இதில் அலுவலகத்திற்கு வரும் 6 சதவீத ஊழியர்களும் வாரத்தில் 2 அல்லது 3 நாள் மட்டுமே அலுவலகத்திற்கு வருகின்றனர்.
விருப்பத்தின் அடிப்படையில்
மேலும் விருப்பத்தின் அடிப்படையில் அலுவலகம் வரும் ஊழியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஜூலை மாதத்தின் இறுதியில் இருந்து ஊழியர்களை அழைக்கும் பணிகளைத் துவங்கத் திட்டமிட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதே வேளையில் தான் இன்போசிஸ் நிர்வாகம் தனது ஊழியர்களுக்கான சம்பள உயர்வையும் அளிக்க முடிவு செய்துள்ளது.
ஹெச்சிஎல்
இதேபோல் ஹெச்சிஎல் நிறுவனம் அலுவலகத்திற்குத் தற்போது உயர் அதிகாரிகளை மட்டுமே அழைத்து வந்தாலும், அலுவலகத்திற்கு வரும் ஊழியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகத் தெரிவித்துள்ளது. சம்பள உயர்வு அறிவிக்கப்பட்ட பின்பு இந்த எண்ணிக்கையில் பெரிய அளவில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிசிஎஸ்
ஜூன் மாதம் முதல் டிசிஎஸ் நிறுவனம் 8 சதவீத ஊழியர்களை (உயர் அதிகாரிகள்) மட்டும் வாரம் 3 நாட்களுக்குக் கட்டாயம் அலுவலகத்திற்கு வந்து பணியாற்ற உத்தரவிட்டு உள்ளது. டிசிஎஸ் நிறுவனத்தின் 6 லட்சம் ஊழியர்களில் 8 சதவீதம் என்றால் 50000 ஊழியர்கள் மட்டுமே.
கட்டாயப்படுத்தவில்லை
இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்களான டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல், விப்ரோ ஆகிய அனைத்தும் ஊழியர்களை அலுவலகத்திற்குக் கட்டாயமாக வரவேண்டும் என்று உத்தரவிடவில்லை, அதேபோல் அலுவலகம் வரவிரும்பும் ஊழியர்களை வர வேண்டாம் எனவும் கூறுவது இல்லை.
மேனேஜர் மற்றும் கிளையின்ட் விருப்பத்தின் பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த நிலை அடுத்த 2 மாதம் கட்டாயம் இருக்கும் என்பது உறுதியாகியுள்ளது.