2021ஆம் ஆண்டின் இறுதி நாட்களுக்கு வந்துவிட்டோம், ஆனால் 2 வருடமாக நம்மை ஆட்டிப்படைக்கும் கொரோனா இன்னும் குறையாத காரணத்தால் எப்போது இயல்பு நிலைக்குத் திரும்புவோம் என்பது அனைவரின் கேள்வியாக உள்ளது.
இந்த நிலையில் புதிதாகப் பரவி வரும் ஒமிக்ரான் மூலம் ஐடி மற்றும் டெக் சேவை நிறுவனங்கள் மட்டும் அல்லாமல் அனைத்துத் தரப்பு நிறுவனங்களும் மீண்டும் 2020 துவக்கத்தைப் போலவே வீட்டில் இருந்து பணியாற்ற வேண்டிய நிலை உருவாகி உள்ளது.
ஒமிக்ரான் மற்றும் கொரோனா தொற்று
திங்கட்கிழமை ஒமிக்ரான் மற்றும் கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து மத்திய அரசு அறிவிப்பு மற்றும் மோடியின் பேச்சுக்குப் பின்பு நாடு முழுவதும் நிறுவனங்கள், தொழிற்சாலையில் கடுமையான விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
வொர்க் ப்ரம் ஹோம்
இதுமட்டும் அல்லாமல் நிறுவனங்கள் ஊழியர்களை முடிந்த வரையில் வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதி அளிக்க வேண்டும் எனவும், வேலை நேரத்தையும் முன்கூட்டியே திட்டமிட்டு நிர்வாகம் செய்யவும் மத்திய அரசு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா அலை
முதல் கொரோனா அலையிலும் சரி, 2வது கொரோனா அலையிலும் சரி ஐடி மற்றும் டெக் நிறுவனங்கள் தான் முதலில் ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து பணியாற்றுவதற்கான அறிவிப்பை வெளியிட்டது. ஆனால் ஒமிக்ரான் பரவியுள்ள இந்த வேளையில் ஐடி நிறுவனங்கள் மட்டும் அல்லாமல் FMCG துவங்கி அனைத்துத் துறை முன்னணி நிறுவனங்களும் ஊழியர்களுக்கு Work From Home கொடுக்கத் திட்டமிட்டு வருகிறது.
முக்கிய நிறுவனங்கள்
RPG குரூப், டாபர் இந்தியா, மாரிக்கோ, மைக்ரோசாப்ட், பிளிப்கார்ட், மீஷோ, நோ ப்ரோக்கர், மேக்மைடிரிப், பார்லே, புமா, நெட்ஆப், DLF எனப் பல நிறுவனங்கள் அதிகப்படியான எச்சரிக்கையுடன் ஊழியர்களுக்கு WFH ஆப்ஷனை கொடுக்கத் துவங்கியுள்ளது.
அடுத்த 6 மாதம்
இதேபோல் அடுத்த இரண்டு மற்றும் மூன்று மாதத்தில் ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்கத் திட்டமிட்டு இருந்த நிறுவனங்கள் தற்காலிகமாக இத்திட்டதை நிறுத்தியுள்ளது. இதனால் அடுத்த 6 மாத காலம் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற வேண்டிய நிலை உருவாகியுள்ளது.