சுமார் 2 வருடமாக இந்திய ஊழியர்கள் வீட்டில் இருந்து பழகிவிட்ட நிலையில் ஐடி, ஸ்டார்ட்அப் உட்படப் பல துறையில் ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைத்தால் பணியை ராஜினாமா செய்யும் நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் கொரோனா இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி work from home நிரந்தரம் என்ற நிலை உருவாகியுள்ளது.
ஊழியர்கள் பற்றாக்குறை
ஏற்கனவே ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக நிறுவனங்கள் தவித்து வரும் நிலையில் ஊழியர்கள் வேலையை ராஜினாமா செய்யும் போக்கு இந்திய நிறுவனங்களுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.
இந்த நிலையில் இந்தியாவில் இருக்கும் முன்னணி நிறுவனங்கள் பல முக்கியமான முடிவை எடுத்துள்ளது. இது ஊழியர்கள் மத்தியில் பெரிய அளவிலான வரவேற்பை பெற்றுள்ளது.
கொரோனா தொற்று
இந்தியாவில் பெரும்பாலான துறை நிறுவனங்கள் தனது ஊழியர்களை அலுவலகத்திற்கு வந்து பணியாற்ற ஏற்கனவே அழைப்பு விடுத்த நிலையில், கொரோனா தொற்று நாட்டின் சில மாநிலத்தில் அதிகரிக்கத் துவங்கியது. இதேபோல் ஊழியர்கள் சிலர் பணியை ராஜினாமா செய்யத் துவங்கினர். இதனால் நிறுவனங்கள் காத்திருந்து முடிவு எடுக்கத் திட்டமிட்டது.
நிரந்தர WFH
இதற்கிடையில் சுமார் 1000 நிறுவனங்கள் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வில் தற்போது நிறுவனங்கள் புதிதாக ஊழியரை பணியில் சேர்க்கும் போதே நிரந்தரமாக வீட்டில் இருந்து பணியாற்றும் வசதியை ஊழியர்களுக்கு அளித்துப் பணியில் சேர்க்க துவங்கியுள்ளது.
50 சதவீத நிறுவனம்
இதேபோல் CIEL HR நிறுவனம் செய்த அந்த ஆய்வில் 50 சதவீத நிறுவனம் வீட்டில் இருந்து பணியாற்றும் (Remote Working Option) முறையை அனைவருக்கும் அளிக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
வொர்க் ப்ரம் ஹோம்
ஐடி மற்றும் டெக் சேவை நிறுவனங்கள் மட்டுமே வொர்க் ப்ரம் ஹோம், ஹைப்ரிட் மாடல் போன்றவற்றை அறிமுகம் செய்த நிலையில், தற்போது டாடா ஸ்டீல், மாருதி சுசூகி, ஐடிசி போன்ற பிற துறை நிறுவனங்களும் தனது ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து பணியாற்ற பல்வேறு சலுகையை அறிவித்துள்ளது.
நியூ நார்மல்
இதனால் அனைத்து துறையிலும் இனி கொரோனா இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி வொர்க் ப்ரம் ஹோம் என்பது நடைமுறையில் இருக்கும். இதன் மூலம் அனைத்துத் துறை நிறுவனங்களும் இதற்கான மாற்றங்களைச் செய்யத் தயாராக உள்ளது மட்டும் அல்லாமல் நியூ நார்மல் ஆக ஏற்றுக்கொள்ளத் துவங்கியுள்ளது.