கொரோனா பாதிப்பாலும், நிதி நெருக்கடியாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் நாட்டுக்கு உலக வங்கி சுமார் 4 வருடங்களுக்குப் பின் நிதி உலக வங்கி நிதியுதவி செய்துள்ளது.
கொரோனா-வால் வல்லரசு நாடுகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில், ஏற்கனவே கடுமையான நிதி நெருக்கடியில் இருக்கும் பாகிஸ்தானுக்கும், அந்நாட்டு மக்களுக்கும் உதவும் வகையில் சுமார் 500 மில்லியன் டாலர் தொகையை உலக வங்கி பாலிசி கடன் வாயிலாகக் கொடுக்க ஒப்புதல் அளித்துள்ளது.
நிதியுதவி திட்டம்
இந்த நிதியைக் கொண்டு பாகிஸ்தான் அரசு, அந்நாட்டுச் சுகாதாரத்தின் தரம், கல்வித் தரம், பெண்களுக்கான பொருளாதார மற்றும் வர்த்தக வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்தல், மக்களின் பாதுகாப்பு ஆகியவற்றை மேம்படுத்த இந்த 500 மில்லியன் டாலர் தொகையைப் பயன்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
இதுமட்டும் அல்லாமல் இந்த நிதியில் பெரும் அளவிலான தொகை கொரோனா தடுப்பிற்கும் பாகிஸ்தான் பயன்படுத்த உள்ளதாக உலக வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நிர்வாகப் பிரச்சனை
பாகிஸ்தானில் புதிய ஆட்சி அமைக்கப்பட்ட நாளில் இருந்து பல்வேறு நிர்வாகப் பிரச்சனைகள் எழுந்து வருகிறது. இதன் எதிரொலியாகப் பாகிஸ்தான் கடன் கொள்கையிலும், அரசு நிறுவனங்களின் நிர்வாகம் மற்றும் மறுசீரமைப்புத் திட்டத்தில் தெளிவு இல்லாத காரணத்தால் உலக வங்கியின் நிதியுதவி கால தாமதம் ஆகியுள்ளது எனக் கூறப்படுகிறது.
30 வருடக் கடன்
இந்தக் கடனை பாகிஸ்தான் அடுத்த 30 வருடத்தில் உலக வங்கிக்குச் செலுத்தும், முதலில் 250 மில்லியன் டாலர் மட்டுமே கடனாகக் கொடுத்த உலக வங்கி முடிவு செய்த நிலையில் கொரோனா பாதிப்பு இந்நாட்டை அதிகளவில் பாதித்துள்ள நிலையில் தொகை இரட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தானும் கொரோனாவும்
கொரோனா பாகிஸ்தான் நாடு மற்றும் மக்களின் தினசரி வாழ்க்கையைப் பாதித்துள்ளது மட்டும் அல்லாமல் பொருளாதாரம், அரசின் பொதுச் சேவைகள் உட்பட அனைத்தும் மோசமான நிலைக்குத் தள்ளியுள்ளது. இது பாகிஸ்தான் நாட்டின் தனிநபர் வருமானத்தைச் சீர்குலைத்துள்ளது எனப் பாகிஸ்தான் நாட்டின் உலக வங்கி தலைவர் இளங்கோ பச்சமுத்துத் தெரிவித்துள்ளார்.
கடன் மற்றும் ஜிடிபி விகிதம்
கடந்த வருடம் பாகிஸ்தான் நாட்டின் கடன் மற்றும் ஜிடிபி விகிதம் (public debt-to-GDP ratio) 85 சதவீதமாக இருந்த நிலையில், கொரோனா பாதிப்பிற்குப் பின் இது 90 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இந்த உயர்வுக்கு முக்கியக் காரணம் இந்நாட்டின் வருவாய் அளவீடுகள் மிகவும் மோசமாக இருந்ததே காரணம் என உலக வங்கி தெரிவித்துள்ளது, இதோடு தற்போது கொரோனாவும் சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.