இந்திய பொருளாதாரம் கொரோனா தாக்கத்தினால் ஏற்பட்ட மோசமான சரிவுக்கு பிறகு, மிக வேகமான மீண்டு வந்து கொண்டுள்ளது.
அதிலும் கடந்த ஆண்டில் நாடு தழுவிய முழு லாக்டவுனுக்கு பிறகு, வரலாறு காணாத அளவு பொருளாதாரம் சரிவினைக் கண்டது.
இதற்கிடையில் தற்போது வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டுள்ளது நல்ல விஷயமாக பார்க்கப்பட்டாலும், இன்னும் முழுமையாக வளர்ச்சி பாதைக்கு திரும்பவில்லை என்று உலக வங்கி தனது சமீபத்திய அறிக்கையில் கூறியுள்ளது.
மேலும் 21 - 2022ம் நிதியாண்டில் இந்தியாவில் ரியல் ஜிடிபி விகிதம் 7.5 - 12.5% வரை இருக்கலாம் என்றும் உலக வங்கி கணித்துள்ளது.
இந்திய பொருளாதாரம் கொரோனாவுக்கு முன்பே மந்த நிலையில் இருந்தது. கடந்த 2017ம் நிதியாண்டில் 8.3% ஆக வளர்ச்சி கண்ட நிலையில், 2020ம் நிதியாண்டில் வெறும் 4% மட்டுமே வளர்ச்சி கண்டிருந்தது.
நிலவி வந்த பொருளாதார மந்த நிலைக்கு மத்தியில் தனியார் நுகர்வு என்பது குறைந்து விட்டது. நிதித்துறையில் ஏற்பட்ட சரிவு உள்ளிட்ட பல காரணிகளினால் மந்த நிலை இன்னும் மோசமானது. இதனால் வளர்ச்சியானது சரிவினைக் கண்டது. இந்த நிலையில் கொரோனாவின் காரணமாக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது.
எப்படி இருப்பினும் பொருளாதார வளர்ச்சி குறித்தான நடவடிக்கைகள், இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன. குறிப்பாக உள்நாட்டிலும், முக்கிய ஏற்றுமதிகளும் அதிகரித்துள்ளன. ஆனால் நடப்பு கணக்கு பற்றாக்குறையானது மீண்டும் சற்று அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் தொடர்ச்சியான நிதிக் கொள்கை மற்றும் சர்வதேச பணப்புழக்க நிலைமைகளால் மூலதன வரவுகள் கணிக்கப்படுகின்றன. இதற்கிடையில் தான் 2022ம் நிதியாண்டில் வளர்ச்சி விகிதமானது சற்று அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது தடுப்பூசிகள் பற்றிய பிரச்சாரம் மேலோங்கியுள்ளது. இதே ஒரு வருடத்திற்கு முந்தைய நிலையுடன் ஒப்பிடும்போது இந்தியா ஆச்சரியப்படும் அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளது. இதே ஒரு வருடத்திற்கு முன்பு மோசமாக பாதிகப்பட்டு, 30 - 40% அளவுக்கு மோசமான சரிவினைக் கண்டது. அப்போது கொரோனா பற்றிய நிச்சயமற்ற தன்மையே இருந்து வந்தது. தடுப்பூசி பற்றிய ஒரு தெளிவு இல்லை. ஆனால் தற்போது இந்தியா தற்போது தடுப்பூசி போடுவதை தொடங்கியுள்ளது. தடுப்பூசி உற்பத்தியிலும் முன்னணியில் உள்ளது.
எனினும் நிலைமை இன்னும் சவலான நிலைமையில் தான் உள்ளது. ஏனெனில் இந்தியாவில் அனைவருக்கும் தடுப்பூசி போடுவது மிகப்பெரிய சவாலான விஷயம். இதனை பலரும் எளிதான விஷயமாக பார்க்கின்றனர். ஆனால் இது அவ்வளவு எளிதான விஷயமல்ல. அதோடு இந்தியாவின் கடன் விகிதமும் அதிகரித்துள்ளது. இது 2022ம் நிதியாண்டிலும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10% மேல் வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.