உலகிலேயே முதல் நாடாக எல் சால்வடோர் அதிகாரப்பூர்வ நாணயமாகப் பிட்காயினை நாடாளுமன்ற ஒப்புதல் உடன் நடைமுறைப்படுத்த முடிவு செய்தது. இதை நடைமுறைப்படுத்த எல் சால்வடோர் நாடு உலக வங்கியிடம் ஒப்புதலும், உதவிகளையும் கேட்டது.
இதற்கு உலக வங்கி பிட்காயினை அதிகாரப்பூர்வ நாணயமாக நடைமுறைப்படுத்துவதன் மூலம் பரிமாற்றத்தில் பாதிப்பு மட்டும் அல்லாமல் வெளிப்படைத்தன்மை இல்லாமல் போகும் என்று காரணம் கூறி எல் சால்வடோர் நாட்டின் கோரிக்கையை ரத்து செய்துள்ளது.
புதன்கிழமை எல் சால்வடோர் நாட்டின் நிதியமைச்சரான Alejandro Zelaya உலக வங்கியிடம் பிட்காயினைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த போதுமான தொழில்நுட்பம் மற்றும் பரிமாற்ற கட்டமைப்பு வசதிகளை அளிக்க உதவிடும் வகையில் கோரிக்கை வைத்தார்.
வளரும் நாடுகளுக்கு நிதியியல் மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கிடும் சர்வதேச அமைப்பான உலக வங்கி, எல் சால்வடோர் நாட்டின் கோரிக்கை உடனடியாக மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இன்றைய வர்த்தகத்தில் பிட்காயின் மதிப்பு 39000 டாலர் அளவீட்டில் இருந்து 5 சதவீதம் குறைந்து 36,748.25 டாலர் வரையில் குறைந்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் கடந்த 24 மணிநேரத்தில் பிட்காயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.