இந்தியப் பொருளாதாரம் கொரோனா வைரஸால் மிக மோசமாக பாதிக்கும் என்று உலக வங்கி எச்சரித்துள்ளது.
உலக நாடுகளையே அச்சுறுத்தி வரும் கொரோனாவின் தாக்கம், இந்தியாவிலும் அதன் தாக்கத்தினை அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் இதுவரை 230-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒட்டுமொத்த பொருளாதார வீழ்ச்சி
ஆக நாட்டில் கொரோனாவின் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் நோக்கில் 21 நாட்கள் லாக்டவுனை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதனையடுத்து வர்த்தகம், தொழில், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள், போக்குவரத்து, சிறு, பெருநிறுவன செயல்பாடுகள் அனைத்தும் முடங்கியுள்ளன. அத்தியாவசியம் தவிர ஒட்டுமொத்த பொருளாதாரமும் வீழ்ச்சி கண்டுள்ளது.
பொருளாதார வளர்ச்சி கணிப்பு
தெற்கு ஆசிய பொருளாதார பாதிப்பு எனும் தலைப்பில் உலக வங்கியின் தெற்கு ஆசியாவுக்கான பொருளாதார வல்லுனர் ஹன்ஸ் டிம்பர் செய்தியாளர்களூக்கு அளித்த பேட்டி மூலம், இந்தியப் பொருளாதாரம் 2020-ம் ஆண்டில் 5% வளர்ச்சி அடையும் எனக் கணிக்கப்பட்டிருந்த நிலையில் 2021 ம் நிதியாண்டில் அது 2.8% ஆக வீழ்ச்சி அடையும் எனவும் கணித்திருந்தது.
பொருளாதாரம் இன்னும் பின்னடைவை காணலாம்
இதற்கிடையில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி ஏற்கனவே மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது நாட்டில் ருத்ர தாண்டவம் எடுத்து ஆடி வரும் கொரோனா வைரஸால், இன்னும் மிகவும் மோசமாக பாதிக்கப்படும் என உலக வங்கி எச்சரித்துள்ளது. அதோடு கொரோனா வைரஸினை கட்டுப்படுத்த கொண்டு வந்துள்ள ஊரடங்கு கட்டுப்பாட்டால் இன்னும் பொருளாதாரம் பின்னோக்கி செல்லும் என்றும் கணித்துள்ளது.
திவால் நிலை
ஏனெனில் மக்களின் முழுவதும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பல லட்சம் முறைசாரா பல தொழிலாளர்கள் தங்களின் வேலையை இழந்துள்ளனர். இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமானால் தெற்கு ஆசியா மோசமான பிரச்சனைகளில் சிக்கியுள்ளது. கொரோனாவினால் சுற்றுலா மற்றும் போக்குவரத்தும் விருந்தோம்பல் துறைகள் திவாலாகியுள்ளன.
விநியோக சங்கிலி பாதிப்பு
அத்தியாவசிய பொருட்கள் தவிர இதர விநியோக சங்கிலிகள் தடைப்பட்டுள்ளன. ஆடைகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. ஆனால் இதற்கிடையில் ஆடைகளுக்கான உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் நுகர்வோர் மற்றும் முதலீட்டாளர்கள் பாதிப்படைந்துள்ளனர். ஆக பணப்புழக்கம் முற்றிலும் தடைப்பட்டுள்ளது. ஆக நிச்சயம் வீழ்ச்சி மிகவும் அதிகமாகத்தான் இருக்கும் என்றும் சில அறிக்கைகள் முன்னதாக கூறியுள்ளன.
உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்
இந்தியாவில் முதலாவதாக கொரோனா வைரஸ் பரவும் வேகத்தை மட்டுப்படுத்தி, அனைவருக்கும் உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். அடுத்ததாக தற்காலிகமாக அனைவருக்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும், குறிப்பாக உள்ளூர் மட்டத்தில் அதிகளவிலான வேலைகளை உருவாக்க வேண்டும். இதுபோன்ற செயல்பாடுகள் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் பயன்படும்.
கட்டுப்படுத்த திட்டம்
குறிப்பாக சிறு, குறு நிறுவனங்கள் திவாலாகமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் அவற்றுக்கு கைகொடுக்க வேண்டும் என்றும் உலக வங்கி அறிவித்துள்ளது. அது மட்டும் அல்ல, இந்திய அரசுடன் இணைந்து கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் வகையில் உலக வங்கியும் செயலாற்றி வருகிறது. மேலும் கொரோனாவினை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார துறைக்காக 1 பில்லியன் டாலர்களை வழங்கியுள்ளோம். மேலும், வேலைவாய்ப்பு, வங்கி, சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களை மீட்கவும் நாங்கள் உதவி வருகிறோம் என்றும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.