இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சமூக தொற்று ஏற்படுவதை தவிர்க்க அரசு இரண்டாவது முறையாக லாக்டவுன் உத்தரவினை பிறப்பித்துள்ளது.
இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 21,393 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
அதிலும் இது கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1409 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.
வேலை இழப்பு
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் லாக்டவுனை பிறப்பித்துள்ளன. இதனால் சிறு குறு தொழில் நிறுவனங்களும் மிகப் பெரிய தொழிற்சாலைகளும் உற்பத்தியை நிறுத்தியுள்ளன. சாதாரண தொழில் அமைப்புகளும் முடக்கப்பட்டன. இதனால் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் உலகம் முழுக்க வேலை இழந்துள்ளனர். அதிலும் வளர்ந்து வரும் நாடான இந்தியாவில் இது மிகப்பெரிய பாதிப்பினை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.
பல கோடி மக்கள் பாதிப்பு
இப்படி ஒரு புறம் மக்களை கொரோனா என்னும் அரக்கன் பயமுறுத்தி வரும் நிலையில், இதனை தடுக்க மேற்கொள்ளப்பட்டுள்ள லாக்டவுனால் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக இந்த லாக்டவுன் காரணமாக இந்தியாவில் உள்நாட்டை சேர்ந்த 4 கோடி புலம்பெயர்ந்த தொழிலாளிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாழ்வாதாரம் பாதிப்பு
இந்தியாவில் செய்யப்பட்டுள்ள லாக்டவுனால் 4 கோடி தொழிலாளர்கள், உள்நாட்டில் பல்வேறு மாநிலங்களில் குடியேறியவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. ஒரு சில நாட்களில் சுமார் 5,000 பேர் முதல், 60,000 பேர் வரை நகர்ப்புறங்களிலிருந்து கிராமப்புறங்களுக்குச் சென்று உள்ளனர்.
இடம்பெயர்ந்தோர் அதிகம்
Covid-19 Crisis Through a Migration Lens என்ற தலைப்பில் வெளியாக அறிக்கையின் படி, கொரோனா லாக்டவுன் நெருக்கடி மூலம் தொழிலாளர்கள் உள்இடம்பெயர்வின் அளவு சர்வதேச இடம்பெயர்வுகளை விட இரண்டரை மடங்கு அதிகம் என்றும் கணித்துள்ளது. அதோடு லாக்டவுன், வேலை இழப்பு, சமூக இடைவெளி, புலம் பெயரும் தொழிலாளர்களுக்கு பெரும் பிரச்சனையாக அமைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
பெரும் சவால்
இத்தகைய புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் சுகாதார சேவைகள் மற்றும் பண பரிமாற்றம் மற்றும் பிற சமூக திட்டங்களில் அவர்களைச் சேர்ப்பதன் மூலமும், பாகுபாட்டிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதன் மூலமும் மாநில அரசுகள் கடுமையான பெரும் சவால்களை எதிர்கொண்டு வருகின்றன.
காரணம் இது தான்
கொரோனா வைரஸ் நெருக்கடி தெற்காசியா பிராந்தியத்தில் சர்வதேச மற்றும் உள்நாட்டு இடம்பெயர்வுகளை பாதித்துள்ளது என்று உலக வங்கி தெரிவித்துள்ளது. கொரோனா நெருக்கடியின் ஆரம்பத்தில் பல சர்வதேச நாடுகளில் இருந்து இந்திய ஊழியர்கள் இந்தியா வந்தனர். குறிப்பாக வளைகுடா நாடுகளிலிருந்து வந்தனர். எனினும் பயணத்தடை மற்றும் போக்குவரத்து தடை உள்ளிட்ட பல காரணங்களால் பல லட்சம் பேர் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications