இந்தியாவின் பொருளாதாரம் கொரோனா தொற்றுப் பாதிப்பின் காரணமாக 2020-21ஆம் நிதியாண்டில் மிகவும் மோசமான நிலைக்குச் சென்றது குறிப்பிடத்தக்கது. கடந்த நிதியாண்டில் நாட்டின் பொருளாதாரம் -7.3 சதவீதமாகச் சரிந்தது.
இந்நிலையில் நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் எப்படி இருக்கும் என்பது அனைவரின் முக்கியக் கேள்வியாக இருக்கும் நிலையில் ரிசர்வ் வங்கி கடந்த வாரம் முக்கியமான கணிப்பை வெளியிட்டது.
கடந்த வாரம் ரிசர்வ் வங்கி நாட்டின் ஜிடிபி அளவீடுகளை வெளியிட்ட போது 2021-22ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.5% இருக்கும் என ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.
ரிசர்வ் வங்கி வளர்ச்சி அளவீடு
ரிசர்வ் வங்கி அறிவித்த அளவீடு மிகவும் குறைவு என அனைத்து தரப்பினரும் கூறினாலும் நாட்டின் பணவீக்கம் பிரச்சனையைக் குறைக்கப் பல முக்கிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கும் காரணத்தால் பொருளாதார வளர்ச்சி அளவீடு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
உலக வங்கி மறு ஆய்வு
ஆனால் இப்போது உலக வங்கி ஏற்கனவே ஏப்ரல் மாதம் வெளியிட்ட கணிப்பை மறுஆய்வு செய்து புதிய அளவீடுகள் வெளியிட்டுள்ளது. இந்தியாவின் பொருளாதாரம் சரிவில் இருந்து வளர்ச்சி அடைந்த வந்த போது கொரோனா வைரஸ் தொற்று நாட்டின் வளர்ச்சியைக் கடுமையாகப் பாதித்துள்ளது.
உலக வங்கி வளர்ச்சி கணிப்பு
இதன் வாயிலாக ஏப்ரல் மாதம் உலக வங்கி இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2022ஆம் நிதியாண்டில் 10.1 சதவீதமாக இருக்கும் எனக் கணித்திருந்த நிலையில், தற்போது இந்தக் கணிப்பை 8.3 சதவீதமாகக் குறைத்துள்ளது. இது ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள 9.5 சதவீத அளவீட்டை விடவும் குறைவு என்பதால் முதலீட்டுச் சந்தையில் தடுமாற்றம் ஏற்பட்டு உள்ளது.
கொரோனா அலை
முதல் கொரோனா அலை பாதிப்பில் இருந்து இந்தியா தடாலடியாக வளர்ச்சி அடையும் எனக் கூறப்பட்ட நிலையில் 2வது அலை தொற்று மொத்த வளர்ச்சி வாய்ப்புகளையும் இந்தியா இழந்தது. 2வது கொரோனா அலையில் வேலைவாய்ப்பு, வர்த்தகம், ரீடைல், நுகர்வோர் சந்தை என அனைத்தும் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டது.