உலகளவில் அதிகரித்து வரும் பணவீக்க விகிதங்களைக் குறைக்க அமெரிக்காவின் பெடர்ல் ரிசர்வ், இந்தியாவின் ரிசர்வ் வங்கி உட்பட உலகின் அனைத்து மத்திய வங்கிகள் கவனம் செலுத்துவதால் உலகளாவிய மந்தநிலையின் அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது என உலக வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.
தற்போது உலக நாடுகளுக்கும், பொருளாதார வல்லுனர்களுக்கும் இருக்கும் முக்கியமான பிரச்சனை என்னவென்றால் கடந்த 45 நாட்களில் கச்சா எண்ணெய் விலை குறைந்த போதும் விலைவாசி குறையாமல் பணவீக்கம் அதிகரித்து வருவது தான்.
இந்த நிலையில் உலக வங்கி உலக நாடுகளின் அரசை விலை உயவுக்குப் பின்னால் உள்ள தடைகளை எளிதாக்க விநியோகத்தை அதிகரிக்கக் கோரிக்கை விடுத்துள்ளது.
பணவீக்கம்
உலகளவில் பணவீக்கம் பல தசாப்தங்களில் பார்த்திடாத வகையில் ஓரே நேரத்தில் வேகமாக அதிகரித்து வருகிறது, கொரோனா தொற்றில் இருந்து உலக நாடுகள் மீண்டு வரும் வேளையில் சந்தையில் அதிகப்படியான டிமாண்ட் உருவானது.
ரஷ்யா போர், சீனா லாக்டவுன்
ஆனால் உக்ரைன் மீதான ரஷ்யா-வின் போர் மற்றும் சீனாவில் கோவிட் லாக்டவுன் ஆகியவற்றால் இந்த ஆண்டுச் சப்ளை பாதிக்கப்பட்டுப் பணவீக்கம் அதிகரித்துப் பாதிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாகப் பொருளாதார வளர்ச்சி அளவிலும் பாதிப்பு உருவானது.
நாணய கொள்கை கூட்டம்
கடந்த 3 மாதத்தில் அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பா, இந்தியா உட்படப் பல நாடுகள் அதிகளவிலான வட்டியை உயர்த்திய நிலையில், சீனா மட்டும் தனது உற்பத்தி மற்றும் ஏற்றுமதியைக் குறைத்தது. இந்ச நிலையில் செப்டம்பர் மாத இறுதியில் அமெரிக்கா, இந்தியா மத்திய வங்கிகளின் நாணய கொள்கை கூட்டத்தில் வட்டியை உயர்த்த உள்ளது.
உலக வங்கி
ஆனால் உலக வங்கியின் பொருளாதார வல்லுநர்களின் புதிய ஆய்வறிக்கையில், இதுவரையில் உலக நாடுகள் அதிகப்படியான விலைவாசியைக் கட்டுக்குள் கொண்டு வர எடுத்த நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்று எச்சரித்துள்ளனர். இதனால் கூடுதலான வட்டி விகித உயர்வு அவசியமானதாக மாறியுள்ளது எனப் பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர்.
வட்டி விகித உயர்வு
வட்டி விகித உயர்வால் அனைத்து கடன்களுக்குமான வட்டி விகிதம் உயர்வும், இதனால் மக்கள் கூடுதலான பணத்தை ஈஎம்ஐ-யாகச் செலுத்துவது மட்டும் அல்லாமல் நிறுவனங்களும் கூடுதலான தொகையை வட்டியைச் செலுத்தும் நிலை உருவாகும் இதனால் லாப அளவுகளில் பாதிப்பு ஏற்படும், வர்த்தக விரிவாக்கத்திற்கான முதலீடுகள் அளவில் பாதிப்பு ஏற்படும்.
நிறுவனத்தின் வளர்ச்சி
இது இரண்டும் நடந்தாலே ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி குறையும், இப்போது புரிகிறதா ஏன் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் பங்குகளை அவசர அவசரமாக விற்பனை செய்கிறார்கள் என.. இது தான் வெள்ளிக்கிழமை ரத்தகளறியான மும்பை பங்குச்சந்தைக்கு அடிப்படை காரணம்.