இன்று உலகமே கொரோனாவின் பிடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில். இந்தியாவும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இன்று உலகமே இந்தியாவினை கவனித்து வருகின்றது எனலாம்.
ஏனெனில் கொரோனா ஒரு புறம் மக்களை பாடாய்படுத்தி வரும் நிலையில், மறுபுறம் ஆக்சிஜன் பற்றாக்குறை, மருந்து தட்டுப்பாடு என மக்களை படுத்தி வருகின்றன.
இதற்கிடையில் தான் உலக நாடுகள் பலவும் இந்தியாவுக்கு உதவ ஆரம்பித்துள்ளன. பல கார்ப்பரேட் நிறுவனங்களும் இந்தியாவுக்கு உதவி செய்து வருகின்றன. அதோடு அரசு நிறுவனங்களை தாண்டி பல தனி நபர்களும் இந்தியாவுக்கு தங்களது உதவிகளை வாரி வழங்கி வருகின்றனர்.
கொரோனா உதவி பொருட்கள்
இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் கடந்த ஐந்து நாட்களில் மட்டும், டெல்லி விமான நிலையத்திற்கு 25 விமானங்கள் மூலம் அவசரத்துக்கு தேவையான 300 டன் கொரோனா உதவி பொருட்கள் வந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து, அரபு எமிரேட்ஸ், உஸ்பெகிஸ்தான், தாய்லாந்து, ஜெர்மனி, கத்தார், சீனா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்தும் வந்துள்ளதாக தரவுகள் கூறுகின்றன.
என்னென்ன பொருட்கள்?
இந்த உதவியில் 5,500 ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் 3,200 ஆக்சிஜன் சிலிண்டர்கள், 1,36,000 ரெம்டெவிசிர் ஊசி மருந்துகள் என பலவும் வந்துள்ளதாக டெல்லி விமான நிலையத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். அவசர தேவைக்கு தேவையான இந்த மருத்துவ உபகரணங்கள், மருந்து பொருட்கள், பல ஆயிரம் மக்களை காப்பாற்ற உதவும் என கூறப்படுகிறது.
கொரோனா பாதிப்பு
எனினும் இந்த பொருட்கள் இன்னும் மருத்துவ துறையினருக்கு விநியோகிக்கப்டவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. டெல்லியில் மட்டும் கிட்டதட்ட 1 லட்சம் கொரோனா நோயாளிகள் உள்ளனர். அவர்களில் 20,000 பேர் மருத்துவமனைகளில் உள்ளனர். இந்த நிலையில் டெல்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவி வருகின்றது. இதனால் கடந்த மே 1 அன்று பத்ரா மருத்துவமனையில் 1 டாக்டர் உட்பட 12 பேர் பலியாகினர்.
மக்கள் கோரிக்கை
இப்படி கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய நோயாளிகள் ஆக்சிஜனுக்கான மூச்சு திணறி வருகின்றனர். ஆக அரசு அவசர தேவைக்கு ஏற்ப இவற்றை பயன்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். பலரும் சமூக வலைதளங்களில் இது குறித்து கோரிக்கை விடுத்து வருவதையும் பார்க்க முடிகிறது. எது எப்படியோங்க, இந்தியாவுக்காக உதவ முன் வந்துள்ள நாடுகளுக்கும், நிறுவனங்களுக்கும், தனி நபர்களுக்கும் ஒரு சல்யூட் வைப்போமே.