ஒரு காலத்தில் கச்சா எண்ணெய் தான் உலகை இயக்கும் சக்கரமாக இருந்தது, ஆனால் இப்போது இண்டர்நெட் டேட்டா தான் உலகை இயக்கும் நவீன சக்கரமாக மாறியுள்ளது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இண்டர்நெட் டேட்டாவின் வளர்ச்சிக்கு எல்லையே இல்லை என்பது தான்.
இப்படி இருக்கையில் உலகிலேயே மிகவும் குறைந்த விலையில் இண்டர்நெட் டேட்டா சேவை அளிக்கும் இந்திய டெலிகாம் நிறுவனங்கள் தான் பணக்கார நிறுவனங்களாக இருக்க வேண்டும். ஆனால் இங்கு எப்போது எந்த நிறுவனம் திவாலாகும் என்ற அச்சத்திலேயே நிறுவனங்கள் தங்களது வர்த்தகத்தைச் செய்து வருகிறது.
இந்தியா
உலகிலேயே மிகவும் மலிவான விலையிலும், வேகமாக வளர்ச்சி அடையும் சந்தையாகவும் இருப்பது இந்தியா தான். ஆனால் இந்தியாவில் இருக்கும் டெலிகாம் நிறுவனங்கள் மிகவும் மோசமான கடன் நெருக்கடியிலும், கட்டண நிலுவையிலும், மோசமான வர்த்தகப் போட்டியிலும் இருக்கிறது. இன்றைய கணக்குப்படி மேலோட்டமாகப் பார்த்தால் கூட இந்திய டெலிகாம் நிறுவனங்கள் பல பில்லியன் டாலர் அதாவது பல லட்சம் கோடி ரூபாய் பிரச்சனையில் உள்ளது.
கட்டணம்
அமெரிக்காவில் ஒரு ஜிபி இண்டர்நெட் டேட்டா 12.37 டாலர், பிரிட்டனில் 6.66 டாலர். இந்தியாவில் நீங்கள் யாரும் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அளவிற்குக் குறைவான விலையில் சேவை அளிக்கப்படுகிறது. இந்தியாவில் ஒரு ஜிபி இண்டர்நெட் டேட்டா வெறும் 0.26 டாலர் மட்டுமே.
வர்த்தகப் போட்டி
கடந்த 3 வருடத்தில் இந்திய டெலிகாம் சந்தையில் உருவான வர்த்தகப் போட்டியின் காரணமாக முன்னணி நிறுவனங்கள் அனைத்தும் மகிவும் குறைந்த வருவாயும், மோசமான லாபத்தையும் பெற்று, பல நிறுவனங்கள் முடங்கியும் கிடக்கிறது.
இந்தியாவில் கிட்டத்தட்ட 7-8 நிறுவனங்கள் டெலிகாம் துறையில் வர்த்தகம் செய்து வந்த நிலையில் தற்போது வெறும் 3 நிறுவனங்கள் தான் வர்த்தகம் செய்து வருகிறது மற்ற எல்லா நிறுவனங்களும் மூடப்பட்டது அல்லது போட்டியைச் சமாளிக்க முடியாமல் பெரும் நிறுவனங்களுக்கு விலைபோனது. இந்திய டெலிகாம் துறையின் உண்மையான நிலையை இதைவிட யாரும் சிறப்பாகச் சொல்ல முடியாது.
மொத்த கடன்
இந்திய டெலிகாம் நிறுவனங்களின் மொத்த கடன் தற்போது 1.47 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. ஜியோ அறிமுகத்திற்குப் பின் உருவான போட்டியின் காரணமாகச் சந்தையில் மோனோபோலி நிலை உருவாக இருந்தது. இது டெலிகாம் துறைக்கும் சரி இந்தியப் பொருளாதாரம் மற்றும் முதலீட்டு சநத்தையும் சரி சிறந்தது அல்ல.
இதன் உணர்ந்துகொண்ட மத்திய அரசு டெலிகாம் துறையைச் சீர்படுத்தும் பணியில் இறங்கியுள்ளது. இதோடு அலைகற்றையைப் பயன்பாட்டுக்கான பணத்தைச் செலுத்துவதில் சலுகை அளித்துள்ளது.
மார்ச் 2020
இந்த நிலையைச் சமாளிக்க அனைத்து நிறுவனங்களும் இணைந்து குறைந்தபட்ச கட்டணம் என்ற ஒன்றை நிர்ணயம் செய்ய வேண்டும் இல்லையெனில் தொடர்ந்து டெலிகாம் நிறுவனங்கள் நஷ்டத்தையும், வர்த்தக வீழ்ச்சியையும் சந்திக்கும் இதனால் முன்னணி நிறுவனங்களும் திவாலாகும் சூழ்நிலையும் ஏற்படும் எனச் செல்லுலார் அசோசியேஷன் ஆஃப் இந்தியா அமைப்பின் தலைவர் ராஜன் தெரிவித்துள்ளார்.
இந்த மோசமான வர்த்தகப் போட்டியில் யார் வெற்றிபெறுவார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றாக இருந்தாலும், அதன் பின்பு நடக்கும் விஷயங்கள் மக்களை எப்படியெல்லாம் பாதிக்கும் என்பது தான் தற்போதைய கேள்வியாக உள்ளது.