கூகுள் நிறுவனம் சில தினங்களுக்கு முன்பு அதன் மாபெரும் பணி நீக்க அறிவிப்பினை கொடுத்தது. இது ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியது எனலாம். கூகுள் நிறுவனமா? இப்படி செய்தது என்று பலதரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதற்கிடையில் மற்றொரு தரப்பு இதற்கு முக்கிய காரணமே கூகுளின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தானே. அவரை பணியில் இருந்து நீக்குங்கள் என கொந்தளிப்பாக பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். இதற்கிடையில் இப்படி ஒரு பணி நீக்கத்தினை செய்யாவிட்டால் இன்னும் நிலைமை மிக மோசமாகியிருக்கும் என மற்றொரு அறிக்கையில் சுந்தர் பிச்சை விளக்கம் கொடுத்துள்ளார். இது மேற்கொண்டு ஊழியர்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

ஊழியர்கள் கருத்து
கூகுளில் நாங்கள் 16 வருடங்களாக பணிபுரிந்தோம், ஆனால் எங்களை எந்த முன்னறிவிப்பும் இன்றி, நள்ளிரவில் பணி நீக்கம் செய்து விட்டார்கள். இது மிகவும் வேதனையளிக்கிறது. இங்கு விசுவாசம் என்பதே கிடையாது என்றும் சமூக வலைதளத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட சிலர் பதிவிட்டுள்ளனர்.
இதே 8 மாத கர்ப்பிணி பெண் ஒருவர், இன்னும் 1 வாரத்தில் தான் பிரசவ விடுமுறைக்காக செல்லவுள்ள நிலையில், பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், இதனை தன்னால் ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை என உருக்கமாக பதிவிட்டிருந்தார்.

பணிநீக்கம் இல்லாவிட்டால்?
இப்படி பற்பல கருத்துகளுக்கு மத்தியில் இது குறித்து கூகுளின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை, ஊழியர்களிடம் பணி நீக்கம் என்பது இல்லாவிட்டால் நிறுவனத்தின் வளர்ச்சி விகிதம் என்பது சரிவினைக் காணலாம் என தெரிவித்துள்ளார்.

தெளிவான தீர்க்கமான முடிவு
ஒரு கூட்டத்தில், நிறுவன தலைவர்கள் மற்றும் இயக்குனர் குழு உறுப்பினர்களிடத்தில் 6% பணி நீக்கம் குறித்து கலந்து ஆலோசித்து முடிவெடுத்ததாகவும் கூறியுள்ளார்.
நீங்கள் தெளிவாகவும், தீர்க்கமாகவும் திட்டமிட்டு முன் கூட்டியே செயல்படவில்லை எனில், பிரச்சனை இன்னும் மோசமாகலாம். ஆக இவை நான் எடுக்க வேண்டிய முடிவுகள்.

போனஸ் குறையும்
அதேபோல இந்த முறை போனஸிலும் தலைமை பொறுப்புகளில் உள்ளவர்கள் குறிப்பிடத்தக்க சரிவினைக் காண்பார்கள்.
கடந்த வார இறுதியில் பணி நீக்கம் குறித்து வெளியிட்ட சுந்தர் பிச்சையின் இந்த முடிவானது, பல மாதங்களாக இருக்கலாம் என்ற யூகங்களுக்கு மத்தியில் வந்துள்ளது. இந்த வேலை குறைப்புகள் அனைத்துமே மிக கவனமாக கருத்தில் கொண்டு கையாளப்பட்டது என்றும் சுந்தர் பிச்சை விளக்கம் கொடுத்துள்ளார்.

வெகுமதி உண்டா?
இதற்கிடையில் மற்றொரு தரப்பினர் நீண்டகாலமாக நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு வெகுமதி அளிக்கும் வகையில் பல ஊக்குவிப்பு சலுகைகள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
எது எப்படி இருந்தாலும், பணிநீக்கம் செய்யப்பட்ட பலரும் உடனடியாக தங்களுக்கான அடுத்த வேலைகளை பெறுவது கடினம். அதோடு கூகுள், மைக்ரோசாப்ட், மெட்டா, அமேசான் என பல நிறுவனங்களும் இதே காலகட்டத்தில் பணி நீக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. அதிலும் பலரும் இந்தளவுக்கு பாதிப்பினை எதிர்கொண்டுள்ளனர் எனலாம்.

விசா மூலம் பணியாற்றிய ஊழியர்களின் நிலை?
குறிப்பாக விசா மூலம் பணியாற்றி வரும் இந்திய புலம் பெயர் தொழிலாளர்கள் உள்பட, பலரும் 60 நாட்கள் புதிய வேலை தேடிக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அப்படி கிடைக்காவிடில் மீண்டும் குடும்பத்துடன் இந்தியா திரும்ப வேண்டிய நிலையில் உள்ளனர்.