கடந்த மே மாதத்தில் இந்தியாவின் மொத்த விலை பணவீக்க விகிதமானது வரலாறு காணாத அளவு உச்சம் தொட்டுள்ளது.
தொடர்ந்து கடந்த சில மாதங்களாகவே பணவீக்க விகிதம் அதிகரித்து வருகின்றது. பணவீக்கத்தினை கட்டுக்குள் கொண்டு வர பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வந்தாலும், தற்போது வரையில் அது கைகொடுத்ததாக தெரிய வில்லை எனலாம்.
கடந்த மே மாதத்தில் மொத்த விலை பணவீக்க விகிதமானது 15.88% ஆக உச்சம் தொட்டுள்ளது. இது கடந்த ஆண்டில் இதே மாதத்தில் 13.11% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதே ஏப்ரல் மாதத்தில் 15.08% ஆக இருந்தது.
14வது மாதமாக இரு இலக்கில் ஏற்றம்
கடந்த ஆண்டினை காட்டிலும் விலை விகிதம் ஏற்றத்தில் உள்ளதையே இது சுட்டிக் காட்டுகின்றது. தொடர்ச்சியாக 14வது மாதமாக இந்த மொத்த பணவீக்க விகிதம் இரு இலக்கில் வந்து கொண்டுள்ளது கவலையளிக்கும் விஷயமாக இருந்து வருகின்றது. இது முக்கியமாக காய்கறிகளின் விலையேற்றத்தினால் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
காய்கறிகளின் விலையேற்றம்
காய்கறிகளின் விலையேற்றமானது கடந்த ஏப்ரல் மாதத்தில் 23.24% ஆக இரிந்த நிலையில், மே மாதத்தில் 56.36% ஆக அதிகரித்துள்ளது.
மற்றொரு கவனிக்கதக்க காரணி என்னவெனில் மினரல் ஆயில், கச்சா எண்ணெய், பெட்ரோலியம் & இயற்கை எரிவாயு, உணவு அல்லாத பொருட்கள், கெமிக்கல்கள், கெமிக்கல் சார்ந்த பொருட்கள் என பல பொருட்களின் விலையேற்றம் அடங்கும்.
உணவு பணவீக்கம்
உணவு பணவீக்கமானது 10.89% ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த ஏப்ரல் மாதத்தில் 8.88% ஆக இருந்தது. இதே உற்பத்தி பொருட்களின் விகிதமானது 10.11% ஆக சற்று குறைந்துள்ளது. இது கடந்த மாதம் 10.85% ஆக இருந்தது.
இது சமையல் எண்ணெய் 15.05%ல் இருந்து 11.41% ஆகவும், இதே உலோகங்கள் விகிதம் 24.11%ல் இருந்து, 11.41% ஆகவும் சரிவினைக் கண்டுள்ள நிலையில் உற்பத்தி பொருட்களின் பணவீக்க விகிதம் சற்றே சரிவினைக் கண்டுள்ளது.
எரிபொருள் & மின்சாரம்
எரிபொருள் மற்றும் பவர் துறையில் மொத்த விலை பணவீக்கமானது, 40.62% ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த ஏப்ரல் மாதத்தில் 38.66% ஆக இருந்தது. நிலக்கரி மற்றும் மின்சார துறையில் பெரியளவில் மாற்றமில்லாவிட்டாலும், மினரல் ஆயில் விலையானது ஏற்றம் கண்டுள்ளது. மற்ற துறைகளில் ஏற்றம் கண்டுள்ள விலைவாசியானது மொத்த விகிதத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.