ஜனவரி மாதத்தில் உணவுப் பொருட்களின் விலை அதிகளவில் கட்டுப்படுத்தப்பட்ட பின்பும், நாட்டின் மொத்த விலை பணவீக்கம் 2.03 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது. இது டிசம்பர் மாதம் 1.22 சதவீதமாகவும், கடந்த வருடம் இதே ஜனவரி மாதத்தில் 3.52 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜனவரி மாதத்தில் மத்திய அரசின் பல்வேறு முயற்சிகளின் காரணமாக அதிகமாக இருந்த உணவுப் பொருட்களின் விலை நிலை பெரிய அளவில் குறைக்கப்பட்டது, ஆனாலும் உற்பத்தி பொருட்களில் ஏற்பட்ட விலை உயர்வு மொத்த விலை பணவீக்கத்தைக் கடுமையாகப் பாதித்துள்ளது என வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
டிசம்பர் 2020ல் -1.11 சதவீதமாக இருந்த உணவு பணவீக்கம் ஜனவரி மாதத்தில் -2.8 சதவீதமாகச் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஜனவரி மாத துவக்கத்தில் பல பொருட்களின் விலைவாசி மிகவும் அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் பின் பெரிய அளவில் குறைந்த காரணமாக இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது.
இதன் படி ஜனவரி மாதம் காய்கறிகள் மீதான பணவீக்கம் -20.82 சதவீதமாக இருந்த நிலை, உருளைக்கிழங்கு மீதான பணவீக்கம் மட்டும் 22.04 சதவீதமாக இருந்தது. இதேபோல் எரிபொருள் மற்றும் மின்சாரப் பிரிவு பணவீக்கம் -4.78 சதவீதமாக ஜனவரி மாதம் இருந்துள்ளது. இதேபோல் உணவு அல்லாத பொருட்களின் பணவீக்கம் 4.16 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
பிப்ரவரி 5ஆம் தேதி நடந்து முடிந்த ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை கூட்டத்தில் நாட்டின் பணவீக்கம் சாதகமான நிலையில் இருக்கும் நிலையில், வட்டி குறைப்பு தேவையும் இல்லை, அவசியம் இல்லை என அறிவிக்கப்பட்டு வட்டி விகிதத்தில் எவ்விதமான மாற்றமும் அறிவிக்கப்படவில்லை.
நுகர்வோர் விலை அளவீட்டைப் பொருத்து நாட்டில் ரீடைல் பணவீக்கத்தின் அளவீடு ஜனவரி மாதத்தில் 4.06 சதவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.