இந்தியாவில் மொத்த விலை பணவீக்கம் மார்ச் மாதத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் 7.39 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதற்கு முன்பு மார்ச் 2013ல் நாட்டின் மொத்த விலை பணவீக்கம் 8.6 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது அதிகப்படியான எரிபொருள் மற்றும் மின்சாரத்தின் விலை காரணமாக மார்ச் மாதத்தில் மொத்த விலை விலை பணவீக்கம் 8 வருட உயர்வை அடைந்துள்ளது.
இந்நிலையில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் மார்ச் 2020 மற்றும் மார்ச் 2021 ஒப்பிடுகையில் நாட்டின் வருடாந்திர பணவீக்க அளவீடு 7.39 சதவீதமாகத் தற்போது உயர்ந்துள்ளது.
இதேபோல் பிப்ரவரி 2021-ஐ ஒப்பிடுகையில் பணவீக்கத்தின் அளவீடு 1.57 சதவீதம் அதிகரித்துள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வின் காரணமாகப் போக்குவரத்தை நம்பியிருக்கும் அனைத்து பொருட்களும், சேவைகளின் விலையும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மார்ச் மாதத்தில் உணவுப் பொருட்கள் மீதான பணவீக்கம் 3.24 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இதேபோல் பருப்பு வகைகள் மீதான பணவீக்கம் 13.14 சதவீதமும், பழங்கள் மீதான பணவீக்கம் 16.33 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்தத் திடீர் உயர்வு காரணமாக இருந்த எரிபொருள் மற்றும் மின்சாரம் மீதான பணவீக்கம் 10.25 சதவீதமாக உயர்ந்துள்ளது.
சில நாட்களுக்கு முன் அரசு வெளியிட்டுள்ள தரவுகளின் படி பிப்ரவரி மாதம் நுகர்வோர் விலைக் குறியீடு அடிப்படையிலான ரீடைல் பணவீக்கம் பிப்ரவரி மாதம் 5.03 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது 5.52 சதவீதமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ரீடைல் பணவீக்கத்தில் உணவுப் பொருட்கள் மிகவும் முக்கியமான பங்கு வகிக்கும் காரணத்தால் மார்ச் மாதம் ஏற்பட்ட உணவுப் பொருட்களின் விலை உயர்வு பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
பிப்ரவரி மாதத்திற்கான தொழிற்துறை உற்பத்தி அளவீடு பிப்ரவரி மாதம் 3.6 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. இக்காலகட்டத்தில் உற்பத்தி துறை 3.7 சதவீதமும், சுரங்க துறை 5.5 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.