தமிழ்நாட்டில் அதிகளவிலான உற்பத்தி, வர்த்தகம், வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பதற்காகப் பல அறிவிப்புகள் அரசு வெளியிட்டு வரும் இதேவேளையில் மத்திய அரசின் பல திட்டங்கள் இந்தியாவில் புதிதாகத் தொழில் துவங்குவோருக்கும், வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வோருக்கும் சாதகமாக உள்ளது.
இதன் காரணமாக இந்தியாவில் வர்த்தகம் செய்யும் வெளிநாட்டு நிறுவனங்கள் ஆர்வத்துடன் இந்தியச் சந்தையில் முதலீடு செய்து வருகிறது. அதில் ஒரு முதலீடு தற்போது சென்னைக்குக் கிடைத்துள்ளது.
Xander புதிய முதலீடு
சென்னைக்கு அருகில் இருக்கும் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் இருக்கும் ப்ரீ டிரேட் மற்றும் வேர் ஹவுசிங் சோன் பகுதியில் சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த Xander என்னும் முதலீட்டு நிர்வாக நிறுவனம் 10 லட்சம் சதுரடி அளவில் வேர் ஹவுசிங் பகுதியை வெளியிடப்படாத தொகைக்குக் கைப்பற்றியுள்ளது.
வேர் ஹவுசிங் பகுதி
இப்புதிய வேர் ஹவுசிங் பகுதி 2021ஆம் ஆண்டின் கடைசிக் காலாண்டுக்குள் பயன்பாட்டுக்குள் வரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. Xander நிறுவனம் கடந்த 10 வருடத்தில் இப்பகுதியில் சிறிதும், பெரிதுமாகச் சுமார் 10 லட்சம் சதுரடியில் கிடங்குகளை வைத்துள்ளது. இப்புதிய கைப்பற்றல் மூலம் மொத்த வேர் ஹவுசிங் அளவு 20 லட்சம் அதாவது 2 மில்லியன் சதுரடியாக அதிகரித்துள்ளது.
இந்தியாவின் முதல் வேர் ஹவுசிங் சோன்
இந்தியாவின் முதல் ப்ரீ டிரேட் மற்றும் வேர் ஹவுசிங் சோன் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் இருக்கும் தளம் தான், சமீபத்தில் இப்பகுதி மல்டி சோன் சிறப்புப் பொருளாதாரப் பகுதியாக அறிவிக்கப்பட்டது. இத்தளத்தில் கிரேட் ஏ தரத்தில் வேர் ஹவுசிங், தொழிற்துறை சேவைகளை உலக நிறுவனங்களுக்கும், உற்பத்தி நிறுவனங்களுக்கும் இப்பகுதியில் பெற முடியும்.
நிறுவனங்கள் எண்ணிக்கை
தற்போது இப்பகுதியில் DHL, DB Schenker, கெர்ரி இன்டேவ், TVS சப்ளை செயின் மற்றும் Seaways சப்ளை செயின் ஆகிய நிறுவனங்கள் இயங்கி வருகிறது. தொடர்ந்து இப்பகுதியில் புதிதாக நிறுவனங்கள் வேர் ஹவுசிங் அமைக்க ஆர்வம் காட்டும் காரணத்தால் தொடர்ந்து இப்பகுதி விரிவாக்கம் அடைந்து வருகிறது.