சீன அதிபர் ஸீ ஜின்பிங் செப்டம்பர் மாதம் டெல்லியில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வருகை தருகிறார். கிட்டதட்ட 7 ஆண்டுகளுக்கு பின் அவர் இந்தியா வருவதால் உலக நாடுகளின் கவனம் இந்த பயணத்தின் மீது தான் உள்ளது.
செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் டெல்லியில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்ற சீன அதிபர் இந்தியா வருகிறார். வழக்கத்துக்கு மாறாக இவர் இந்த முறை சுமார் 400 பேரை அழைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு ஜின்பிங் இந்தியா வந்தபோது அவருடன் 200-க்கும் குறைவான அதிகாரிகளே வந்திருந்தனர். ஆனால், இம்முறை சுமார் 400 அதிகாரிகள் அடங்கிய பிரம்மாண்ட குழுவுடன் அவர் வரக்கூடும் என மூன்று முக்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சீன அதிகாரிகள் தற்போதே டெல்லியில் ஹோட்டல்கள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை இறுதி செய்யும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், ஜின்பிங்கின் இறுதிக்கட்ட பயண திட்டமும், இரு நாட்டு தலைவர்களுக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைக்கான நிகழ்ச்சி நிரலும் இன்னும் முழுமையாக இறுதி செய்யப்படவில்லை.
கடந்த 2020-ஆம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதல் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை முறித்தது. இதன் பின்னர் இரு நாட்டு தலைவர்களும் சந்திக்கவில்லை பேசி கொள்ளவும் இல்லை. இந்த சூழலில் கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி சீனாவுக்கு பயணம் மேற்கொண்ட நிலையில், தற்போது ஸீ ஜின்பிங்கின் இந்த பயணம் அமைந்துள்ளது. இருதரப்பு உறவை முறைப்படுத்த ஒரு மைல்கல்லாக இது பார்க்கப்படுகிறது.
இந்த பயணத்திற்கு முன்னதாக, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி மற்றும் சீன துணை அதிபர் ஹான் செங் ஆகியோரை சந்தித்து, எல்லைப் பகுதிகளில் அமைதியை பேணுவது குறித்தும், பொருளாதாரம் மற்றும் அரசியல் தளங்களில் உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தியுள்ளார்.
இந்தியா மற்றும் சீனா ஆகிய இரண்டும் உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட மற்றும் அணு ஆயுதம் கொண்ட நாடுகள். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வர்த்தக கொள்கைகள் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச சவால்களின் மத்தியில், வெளி அழுத்தங்கள் பிரிக்ஸ் அமைப்பை குலைக்க அனுமதிக்க கூடாது என்பதில் இரு நாடுகளும் உடன்பாட்டுடன் இருப்பதால் தான் உறவு மீண்டும் மலர்ந்துள்ளது. பிரிக்ஸ் கூட்டமைப்பின் தற்போதைய தலைவராக இந்தியா இருப்பதால், இந்த மாநாடு வெற்றிகரமாக நடைபெற சீனா முழு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளது.
எனவே ஸீ ஜின்பிங்கின் இந்த வருகையானது வெறும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதைவிட, இரு பெரும் நாடுகளின் உறவை சீரமைப்பதற்கான ஒரு அரசியல் குறியீடாகவே பார்க்கப்படுகிறது. சுமார் 400 அதிகாரிகளை கொண்ட மாபெரும் குழுவுடன் அவர் இந்த பயணத்தை மேற்கொள்ள உள்ளார். அமெரிக்கா மிகவும் உற்றுநோக்கும் ஒரு பயணமாக இது இருக்கிறது.


Click it and Unblock the Notifications

