இந்தியா - சீனா இடையே நடந்து வரும் எல்லை பிரச்சனை இந்தியாவில் வர்த்தகம் செய்யும் சீன நிறுவனங்களுக்குப் பல்வேறு விதமான வர்த்தகப் பிரச்சனைகளையும், பயத்தைக் கொடுத்து வருகிறது. சில வாரங்களுக்கு முன்பு கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு மத்தியில் ஏற்பட்ட சண்டையில் இந்திய ராணுவ வீரர்கள் பலர் உயிரிழந்தனர். இதன் எதிரொலியாகப் பல மாநிலங்களில் சீன அதிபர் உருவ பொம்மையும் எரிக்கப்பட்டது.
Recommended Video
இதோடு நாடு முழுவதும் சீன பொருட்களைத் தடை செய்ய வேண்டும், யாரும் சீன பொருட்களை வாங்கக் கூடாது என மக்கள் கருத்து பரப்பி வரும் நிலையில் இந்தியாவில் வர்த்தகம் செய்யும் சீன நிறுவனங்கள் இந்தப் பிரச்சனையைச் சமாளிக்கப் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் விற்பனை நிறுவனமாக விளங்கும் சியோமி ஒரு சீன நிறுவனம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். தற்போது நிலவி வரும் பிரச்சனையில் சியோமி ஷோரூம்களுக்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படக் கூடாது என்பதற்காக MI நிறுவனம் தனது பெயரை Make in India-வாக மாற்றியுள்ளது.
சியோமி
சீன மொபைல் நிறுவனமான சியோமி இந்தியாவில் முழுவதும் இருக்கும் சியோமி விற்பனை கடைகளில், விளம்பரப் பலகையில் இருக்கும் MI என்ற லோகோ-வை முழுவதுமாக மறைக்கும் வகையில் Make in India போஸ்டரை உடனடியாக ஒட்ட உத்தரவிட்டுள்ளது. இதுமட்டும் அல்லாமல் கடையில் பணியாற்றும் ஊழியர்கள் யாரும் MI லோகோ கொண்ட சீருடையை அணிய வேண்டாம் என அறிவித்துள்ளது.
பயம்
இந்தியாவில் தற்போது மக்கள் மத்தியில் சீனா மற்றும் சீன பொருட்களுக்கு எதிரான மனநிலை நிலவி வரும் வேளையில் சியோமி கடைகளுக்கும், அதன் ப்ரோமோட்ர் கடைகளுக்கும் ஆபத்து வந்து விடக் கூடும் என்ற அச்சத்தில் இந்தப் பெயர் மாற்றத்தை அறிவித்துள்ளது.
AIMRA அமைப்பு
சியோமி சீன நிறுவனமாக இருந்தாலும் இந்தியாவில் இருக்கும் விற்பனை கடைகள் அனைத்தும் AIMRA என்ற அனைத்து இந்திய மொபைல் ரீடைல் அசோசியோஷன் கீழ் தான் வருகிறது.
இந்நிலையில் AIMRA அமைப்பு சீன நிறுவன கடைகளுக்கு ஆபத்து ஏற்பட்ட வாய்ப்பு உள்ளதால் பெயர்ப் பலகையை முழுமையாக மறைத்துக்கொள்ள அனுமதியும் அறிவுறுத்தியுள்ளது.
முக்கியப் பகுதிகள்
இதுகுறித்து சியோமி அதிகாரிகள் கூறுகையில் டெல்லி, மும்பை, சென்னை, புனே, பாட்னா ஆகிய பகுதிகளில் இருக்கும் சியோமி கடைகளில் ஏற்கனவே பெயர் பலகையில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். மேலும் இப்பகுதிகளில் இருக்கும் கடைகளுக்கும் ஆபத்து ஏற்படக் கூடும் என முன்னெச்சரிக்கையாகப் பெயரை மாற்றியுள்ளோம் எனத் தெரிவித்துள்ளனர்.
இப்பகுதிகளில் ஏற்கனவே சீன பொருட்களை எதிர்க்கும் போராட்டங்கள் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பிற நிறுவனங்கள்
இதேபோல் AIMRA அமைப்பு சியோமி மட்டும் அல்லாமல் ஓப்போ, விவோ, ரியல்மி, ஒன்பிளஸ், லெனோவோ மோட்ரோலா, ஹூவாய் ஆகிய நிறுவனங்களுக்கும் பெயர்ப் பலகை மாற்றக் கடிதம் அனுப்பியுள்ளது.
50 நொடிகள்
ஒருபக்கம் சீன பொருட்களைத் தடை செய்ய வேண்டும் என மக்கள் கூறிவரும் நிலையில் சியோமி நிறுவனத்தின் தலைவர் மனு குமார் ஜெயின் தனது டிவிட்டரில் தனது புதிய மாடல் போன் வெறும் 50 நொடிகளில் விற்றுத் தீர்ந்துள்ளது என டிவீட் செய்துள்ளார்.
மேலும் சியோமி அலுவலகம் மற்றும் விற்பனை கடைகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
81 சதவீத சந்தை
இந்தியா மொபைல் விற்பனை சந்தையில் சுமார் 81 சதவீத சந்தை சீன பிராண்ட் போன்கள் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. இந்த நிலையை மாற்ற வேண்டும் என்றால் சியோமி, ஓப்போ, ஒன்பிளஸ் நிறுவனங்களுக்கு இணையான தரம் மற்றும் விலையில் ஒரு இந்திய நிறுவனம் ஸ்மார்ட்போனை தயாரிக்க வேண்டும்.
இது சாத்தியமா..??


Click it and Unblock the Notifications