இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பல நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு வந்தாலும், சீனாவின் ஜியோமி நிறுவனம் தான் நீண்டகாலமாக முதலிடத்தில் உள்ளது.
அதிலும் இந்திய சீன எல்லை பிரச்சனைகளுக்கு மத்தியிலும், சீன ஸ்மார்ட்போன்கள் தான் முதலிடத்தில் உள்ளன. குறிப்பாக இந்திய சந்தை என்பது சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு முக்கிய சந்தை என்பதால், பல சலுகைகளையும் சீன நிறுவனங்கள் கொடுத்து வருகின்றன.
ஸ்மார்ட்போன்களுக்கு மட்டும் அல்ல, ஜியோமியின் ஊழியர்களையும் ஊக்கப்படுத்தும் விதமாக ஜியோமி இந்தியா பல சலுகைகளை அறிவித்துள்ளது.
ஸ்மார்ட்போன் தேவை
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த ஆண்டு நாடு தழுவிய லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. அப்போது ஸ்மார்ட்போன் விற்பனையானது பெரியளவில் முடங்கியது. எனினும் தற்போது நாட்டில் தேவை மீண்டு வந்து கொண்டுள்ளது. இதனால் ஏற்றுமதியினை கூட தள்ளி வைத்துள்ளதாகவும் ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் ஜியோமி இந்தியா தெரிவித்துள்ளது.
ஊழியர்களுக்கு போனஸ்
இதற்கிடையில் ஜியோமி நிறுவனம், அனைத்து ஊழியர்களுக்கும் அரைமாத சம்பளத்தினை போனஸாக அறிவித்துள்ளது. இது குறித்து ஜியோமி இந்தியாவின் நிர்வாக இயக்குனர் மனு ஜெயின், நாட்டில் தேவை அதிகரித்து வரும் நிலையில், ஜியோமி உற்பத்தியினை விரிவுபடுத்தி வருகிறது. அதோடு அரசின் பிஎல்ஐ திட்டத்துடன் இணைந்து செயல்படும் என்றும் அறிவித்துள்ளார்.
தேவைகளை நிறைவேற்ற முடியவில்லை
நடப்பு ஆண்டின் இறுதிக்குள் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டங்கள் இருந்தன. ஆனால் உள்நாட்டு தேவைகளை கூட எங்களால் நிறைவேற்ற முடியவில்லை என்பது உண்மை. உள்ளூர் தேவையை பூர்த்தி செய்வதே எங்களின் முன்னுரிமை. ஏற்றுமதி செய்தால் இன்னும் நாங்கள் சந்தோஷமாக இருப்போம் என்று ஜெயின் கூறியுள்ளார்.
ஜியோமியில் என்னென்ன பொருட்கள்?
கடந்த ஆண்டின் கடைசி காலாண்டினை பொறுத்தவரையில் ஸ்மார்ட்போன் சந்தையில் ஜியோமி 27% சந்தை பங்கினை கொண்டிருந்தது. தற்போது ஸ்மார்ட்போன் தவிர, ஏர் பியூரிஃபையர்கள், ஃபிட்னெஸ் பேண்ட்ஸ், விஆர் ஹெட்செட்கள், பவர் பேங்க்ஸ் என பலவற்றையும் விற்பனை செய்கின்றது.
ஜியோமிக்கு எத்தனை ஆலைகள்
தற்போது முக்கிய வணிகங்களுக்கு மத்தியிலும் ஜியோமி 50க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது.தற்போது ஜியோமிக்கு இந்தியாவில் ஐந்து ஆலைகள் உள்ளன. அங்கு அதன் கூட்டாளர்களான ஃபாக்ஸ்கான் மற்றும் ஃபளெக்ஸ் அசெம்பிள் தமிழகம் மற்றும் ஆந்திராவில் உள்ளன. இதற்கிடையில் நிறுவனம் தற்போது நேரிடையாகவும் மறைமுகமாகவும் 60,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை கொண்டுள்ளது.
சம்பளம் பிடித்தம் செய்யப்படவில்லை
ஆக ஜியோமி அதன் ஊழியர்களுக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும் கோவிட் -19 தடுப்பூசி செலுத்தும் முயற்சியை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. தொற்று நோய் காலத்தில் நிறுவனம் ஊழியர்களின் சம்பளத்தினை குறைக்கவில்லை. அதோடு தடுப்பூசி செலவினையும் ஏற்றுக் கொள்ளும் என்றும் கூறியுள்ளது. இதற்கிடையில் தான் போனஸையும் அறிவித்து ஊழியர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.